நக்கீரன் தனது புலனாய்வுச் செய்திகள் மூலம் பாமர மக்களையும் படிக்க வைத்தது. சாமானிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. எந்தவொரு நிகழ்வையும் நடுநிலையோடு பாதிக்கப்பட்டவர், பாதிப்புக்குள்ளாக்கியவர் என இரு தரப்பு கருத்தையும் வெளியிட்டு, நடுநிலைப் பத்திரிகை என்பதை நிரூபித்து வருகிறது. இயற்கை வண்ணத்தில் வெளிவரும் நக்கீரனின் அட்டைப் படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை.
2018, பிப்.07-09 இதழ்:
"சசி கையில் ஆவணம்! புதையும் ஜெ. மரணம்' என்ற செய்தியில் யார் யாருக்கோ சம்மன் அனுப்பி விசாரிக்கும் விசாரணை ஆணையம், ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., முன்னாள் கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யவில்லை என்ற கேள்வி நூறுசதவிகிதம் உண்மை. "கொடுத்தது 3 சி! எடுத்தது 30 சி' என்ற செய்தியில், கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி கைது விஷயத்தை விரிவாக எழுதியதோடு, 2016 டிசம்பர் இதழில் அங்கே நடந்துவந்துள்ள லஞ்சப் புகார் பற்றிய செய்தியை முன்கூட்டியே வெளியிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது அருமை.
"அரசுப் பள்ளிகள் காப்பாற்றப்படுமா?' அருமையான கட்டுரை. தனியார் பள்ளிகள், அதன் முதலாளிகளால், சாமானிய மக்களின் கோவணத்தைக்கூட கட்டணம் என்ற பெயரில் உருவிக்கொண்டுள்ளனர். அதைத் தடுக்க சமூக செயற்பாட்டாளர் பீர்முகமதுவின் ஆலோசனையை அரசு போர்க்கால அடிப்படையில் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.
வாசகர் கடிதங்கள்! கல்யாணமாம் கல்யாணம்! நாட்டுக்கலப்பை -நுகத்தடியை சாட்சியாக வைத்து அரியலூர் தம்பதி திருமணம் செய்துகொண்டதன் மூலம் விவசாயத்தின் அவசியத்தை மங்களகரமாய் புரியவைத்துவிட்டார்கள். இதில் இன்னும் ஹைலைட், மொய் எழுத வந்தவர்களும் மா, நெல், கேழ்வரகு என பரிசளித்ததுதான். இதுபோன்ற "காத்திருப்பு' -மஞ்சள் விளக்கு "சிக்னல்' செய்திகளை எதிர்பார்த்து நிற்கிறேன். -தேவேந்திரன், உளுந்தூர்பேட்டை. "சிவப்பு' பளிச்! ஜி.ஆர்.பேட்டி, போட்டிக் கட்சிகளும் வாசிக்க வேண்டிய கேள்வி-பதில்கள். "போக்குவரத்துத்துறை லாப நோக்கோடு செயல்படக்கூடிய துறை அல்ல... மக்களுக்கு சேவை செய்கிற துறை' என்கிற வரிகளில் "சிவப்பு' சிந்தனை பளிச்! -சி.திருமுருகன், தூத்துக்குடி. |