நீட்டை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, தமிழகத்தின் 412 ஒன்றியங்களிலும் ஒரு நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்றது தமிழக அரசு. ஆனால், முதலில் தொடங்கிய 100 நீட் பயிற்சி மையங்களோடு நிறுத்திக்கொண்டது. தமிழகத்தின் பெரும்பாலான மாணவர்களுக்கும் நீட் தேர்வு எப்படியிருக்கும் என்ற புரிதல் தற்போதுவரை இல்லை.
அரசாங்கத்தின் நீட் தேர்வு மையங்கள் எட்டாக் கனியாய் இருப்பதை, பயன்படுத்திக்கொண்டு தனியார் பள்ளிகள் வசூல்வேட்டைக்குத் திட்டமிட்டு வருகின்றன.
திருச்சியிலுள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனம் செல்லம்மாள் குரூப். இவர்களுக்கு திருச்சி மாவட்டத்தைச் சுற்றிலும் 19 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. கடந்த 2 வருடங்களில் மட்டும் நான்கு பெரிய மெட்ரிக் பள்ளிகளை கையகப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிறுவனம் கடந்தவாரம் திருச்சியைச் சுற்றிலுமுள்ள 15 மாவட்ட மாணவர்களுக்கு மாதிரி நீட் தேர்வு நடத்தி, அதில் கலந்துகொண்ட 6,500 மாணவர்களின் ரிசல்டையும் வெளியிட்டது.
இந்தத் தேர்வில் தமிழ்வழி பயிலும் மாணவிகளும் பலபேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். தேர்வில் கலந்துகொண்ட மாணவிகள், “""இது ஏதோ +2 மாதிரித் தேர்வுனு நினைச்சுட்டுப் போனோம். நீட் தேர்வுனு சொன்னாங்க. நாங்க படிச்ச எதுவுமே இதுல கேள்வியா இல்ல. எல்லாமே புதுசா இருந்துச்சு''’’ மிரட்சியும் குழப்பமுமாய் சொல்கிறார்கள்.
மாதிரித் தேர்வு நடத்திய செல்லம்மாள் குரூப், நீட் தேர்வை எதிர்கொள்ள கோச்சிங் சென்டர் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் 30 நாட்களுக்கு மட்டுமே கோச்சிங். அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ 25,000 கட்டணம். வெளியிலிருந்து வருபவர்களுக்கு ரூ 40,000 கட்டணம். பயிற்சியில் சேர்பவர்கள் 30 நாட்களுக்கு வெளிஉலகத்தைப் பற்றியே நினைக்கக்கூடாது எனும் நிபந்தனையுடனே சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த கோச்சிங் வகுப்புகளுக்கு பிகாரிலிருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். ஒன்றரை முதல் இரண்டு லட்சம் சம்பளம் இவர்களுக்கு. கடந்தமுறை நீட் கோச்சிங்குக்காக மாணவர்கள் கேரளா சென்றனர். இம்முறை நீட் நிச்சயமாகிவிட்டதால், திருச்சியில் மட்டும் 3 இடங்களில் பயிற்சிவகுப்புகள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
நீட் தேர்வு கேள்விகளை லீக்செய்ய முயன்றதாக காவல்துறை 5 பிகார் ஆசிரியர்களை கைதுசெய்தது. அதனால்தான் பிகார் கோச்சிங்குக்கும் ஆசிரியர்களுக்கும் இத்தனை டிமாண்டாம்.
மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பந்தாவை கைவிட்டுவிட்டு, நீட் தேர்வில் எங்கள் பள்ளியிலிருந்து இத்தனை பேர் தேர்வு என்ற ஜம்பத்துக்குத் தயாராகின்றன தனியார் பள்ளிகள்.
எதிர்க்கட்சிகளும் நீட் தேர்வு எதிர்ப்பாளர்களும் புதிய புதிய போராட்டக் களங்களில் பங்கெடுக்கிறார்கள். தி.க. தலைமையிலான போராட்டத்திற்கு தி.மு.க., ம.தி.மு.க., சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிக்கின்றன. ஆனாலும் தமிழ்நாட்டை ஆளும் அரசு "நீட்'டாக காரியம் நடத்துகிறது.
-ஜெ.டி.ஆர்.