சினிமாக்காரர்களுக்கு குடும்ப பிரச்சனை என்றாலும் அது ஸ்க்ரீன்ப்ளேயுடன் வெளிப்பட்டு வைரலாகிவிடுகிறது. பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜியின் குடும்ப சோகம் சின்னத்திரையிலும் சோஷியல் மீடியாக்களிலும் மாஸ் ஹிட்.

சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜியின் மீது அவரின் மனைவி நித்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மீடியா முன்பு சொல்லி அதிரவைத்தார். குழந்தையுடன் அவர் கதறியது பலரையும் வேதனைப்படுத்தியது. இதன் மறுபக்கத்தை தாடி பாலாஜி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

balaji-with-wife

Advertisment

""எனக்கும் மனைவி நித்தியாவிற்கும் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணமே இந்த பேஸ்புக்தான். நித்தியாவுக்கு பேஸ்புக் மூலம் ஜிம் டிரைனர் பாசில் நண்பரானார். மின்துறை பணிகளுக்கும், திரைத்துறைக்கும் பவுன்சராகவும் போகக்கூடிய ஆள்தான் அந்த ஜிம் ட்ரைனர். அதனால் பெரிய மனிதர்களுடன் எடுத்த போட்டோவை பேஸ்புக்கில் போட்டு, நித்தியாவிடம் கனிவாக பேசி நண்பராகி இருக்கிறார். வேலூரில் தனது அம்மாவை பார்க்கச் செல்வதாக நித்தியா சொல்லிவிட்டு, பாசிலுடன் பெங்களூரு சென்று இரண்டு நாட்களுக்கு தங்கி இருக்கிறார்கள்.

inspec

கடந்த ஆண்டு நித்தியாவின் பிறந்தநாளின்போது, எனக்கு மதுரையில் நிகழ்ச்சி இருந்ததால் முந்தைய தினமே வைர மோதிரம் கிஃப்ட் பண்ணிவிட்டு, நான் கிளம்பும்போது "எப்போ திரும்பி வருவீங்க?' என்று நித்தியா கேட்டார். எப்போதும் அப்படி கேட்காதவர், இப்போது ஏன் கேட்கிறார் என்று தோன்றியது. பின்னர் ஒரு நாள் குழந்தையுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது பிறந்தநாள் அன்று வீட்டுக்கு யாரெல்லாம் வந்தார்கள், என்ன நடந்தது என்று தானாகவே கூறினார். எப்போதும் ஒருவித பரபரப்புடனும், கோபமாகவும் நித்தியா இருந்ததால் சிறுசிறு சண்டைகள் எங்களுக்குள் ஏற்பட்டன. இதை வெளியில் தெரியாமல் பேசி முடிப்போம் என்று முடிவு செய்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருந்த எஸ்.ஐ. மனோஜ்குமாரை அணுகினேன்.

Advertisment

பாசில் போட்டோக்களை போலீஸாருக்கு அனுப்பியபோது, "இந்தப் பொறுக்கியா?' என்று அவர்களிடமிருந்து பதில் வந்தது. அதன் பின்னர் பாசிலை, அப்பல்லோ ஆஸ்பிடல் பின்புறம் இருக்கும் காஃபி டேவுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துவந்தார்கள். பேசிக்கொண்டிருக்கும்போது மனோஜ், பாசிலிடமிருந்து போனை பிடுங்கி அவனை அனுப்பிவிட்டார். அந்த போனில், என் மனைவியுடன் பாசில், பெங்களூரு சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமெல்லாம் இருந்தது. மனைவி என்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்தவுடன் எனக்கு கை, கால்கள் உதறத் தொடங்கிவிட்டன. அப்போது எஸ்.ஐ. மனோஜ் என்னிடம், "நீங்கள் நித்தியாவுடன் சேர்ந்து வாழ்வதாக இருந்தால் இந்த படங்களை பார்க்க வேண்டாம்' என்று சொல்லி போனை உள்ளே வைத்துவிட்டார்.

மனவேதனையின் காரணமாக மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு, நான் வீட்டைவிட்டு வெளியில் வந்துவிட்ட நிலையில்... அந்த போட்டோ விவகாரமாக மனோஜ், பாசில், நித்தியா இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதாவது, என்னை வீட்டில் சேர்த்துக் கொள்வதாகவும் ஆனால் பாசிலை போலீஸ் எதுவும் செய்யக்கூடாது என்றும் நித்தியா சொல்லியிருக்கிறார். நான் வீட்டுக்குத் திரும்பிய பிறகு, என்னுடைய நடமாட்டம் பற்றி மனோஜுக்கு நித்தியா தகவல் கொடுத்துவந்தார்.

ஒருமுறை வீட்டுக்கு மனோஜ் வந்திருந்தபோது கண்ஜாடையில் நித்தியாவுடன் பேசுவதையும், நித்தியா, மனோஜை "போடா, வாடா' என்று அழைத்ததையும் பார்த்து எனக்கு கோபம் அதிகமானது. நான் குடிபோதையில் இருந்ததால் நித்தியாவை ஒரு அடி அடித்துவிட்டேன். வழுவழுப்பான தரையில் அவர் வழுக்கி விழுந்து படியில் உருண்டதால், காயம் ஏற்பட்டு இடுப்பில் பெல்ட் போட்டிருக்கிறார். இதை மறைத்து, சாதியை சொல்லி எட்டி உதைத்ததாக என் மீது பொய்யான குற்றம் சுமத்துகிறார்.

balaji

அன்றைக்கு உடுத்திய துணியுடன் வெளியில் வந்தவன்தான், இன்னும் நான் வீட்டுக்கு செல்லவில்லை. என் பெயரில் சொத்துகள் எதுவும் இல்லை. அனைத்தும் மனைவி நித்தியாவின் பெயரில்தான் இருக்கிறது. நான் வெளியில் வந்தபின்னர் மனோஜும் பாசிலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். மாதம் 30 ஆயிரம் தரவேண்டும் என்று பாசில் நித்தியாவை மிரட்டி இருக்கிறான். அந்த சமயங்களில் பணம் கொடுக்கவேண்டும் என்பதற்காக வீட்டில் நகைகளைக் காணவில்லை என்றெல்லாம் நித்தியா சொல்லி வந்தார்.

மனோஜும் பாசிலும் நித்தியாவை தொடர்ந்து ப்ளாக்மெயில் செய்து வருகிறார்கள். இதற்கு இடையூறாக இருப்பதால் என்னை ஒழிக்க வேண்டும் என்று என் மீது பல்வேறு புகார்களைக் கொடுத்து இருக்கிறார்கள். விவாகரத்து கோரியும் வழக்கு தொடுத்திருக்கிறார் நித்தியா. இதையெல்லாம் மனதுக்குள்ளேயே போட்டுக்கொண்டு, டி.வி. ஷோக்களில் காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

என் மீது புகார் கொடுக்க வழக்கறிஞர் நவீனை அழைத்திருக்கிறார் நித்தியா. அவருடன் சேர்ந்து சென்று பாசிலை சந்திக்கப் போகும்போது, அங்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்னர், எஸ்.ஐ. மனோஜ், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக நவீனிடம் நித்தியா சொன்னபோது, பல பின்னணிகள் நவீனுக்குத் தெரிந்திருக்கிறது. அவர் இதை என்னிடம் சொன்னபோதுதான், நித்தியா -பாசில் -மனோஜ் மூவரின் ஆட்டம் பற்றிய முழுவிவரமும் எனக்குத் தெரிந்தது. இனியாவது நித்தியா பாதுகாப்பாக இருக்கும்படி நவீனிடம் சொல்லி அனுப்பினேன்.

நித்தியாவோ மனோஜுடன் சேர்ந்து மகளிர் அமைப்பு ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதில் விவாகரத்தானவர்கள், கணவருடன் பிரச்சினை ஏற்பட்டு இருப்பவர்கள் என பலர் இருக்கிறார்கள்.

மனோஜும் பாசிலும் மிரட்டுவதை வெளியில் சொல்ல முடியாமல் நித்தியா தவிப்பதாகவே தெரிகிறது. நித்தியா என்னுடன் சேர்ந்துவாழ விருப்பம் இருந்தால் வாழட்டும். இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை. ஆனால் அவர் தன்னைச்சுற்றி நடப்பதை உணர்ந்து குழந்தையுடன் நலமாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருக்கிறது''’என்று சோகம் ததும்பச் சொன்னார் காமெடி நடிகர் தாடி பாலாஜி.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வமாக செயல்படக்கூடிய பெண்களை பாசில் போன்ற பலர் நோட்டமிட்டு தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். ஒரு பிரச்சனை என்றால் காவல்துறையிடம் செல்லும் மக்களுக்கு, மனோஜ் போன்ற எஸ்.ஐ.களே வில்லன்களாகிவிடுகிறார்கள். குடும்ப உறவு என்பது கண்ணாடிப் பாத்திரம் போன்றது. அவற்றைப் பிடித்திருக்கும் நம்பிக்கை தகர்ந்தால், சுக்குநூறாகிவிடும். மற்றவர்களால் "உச்' கொட்டத்தான் முடியும். இழப்பு என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான்.

-சி.ஜீவாபாரதி