தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா ஸ்தபதியையும், பழனி முருகன் கோவில் முன்னாள் இ.ஓ.ராஜாவையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ்.
சிலைகளைக் கடத்தியதற்காக இவர்கள் கைதாகவில்லை. பழனி மூலவருக்கு புதிய ஐம்பொன் சிலை செய்வதாகச் சொல்லி சிலை செய்வதற்காக கொடுக்கப்பட்ட தங்கத்தில் பாதியையும், வெள்ளி முழுவதையும் சுருட்டிக் கொண்டு, போலியான ஒரு சிலையைச் செய்து கொடுத்ததற்காகத்தான் கைது நடவடிக்கை.
பழனி மலையில் ஆண்டவர் கருவறையில் எப்போதும் இருப்பது, போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்ட ஒன்பது மூலிகைகளால் ஆன சிலை. முக்கிய, பணக்கார பக்தர்களின் வேண்டுதலுக்காக பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்கிறோம் என்று மூலவரின் கால்களை, கைகளை, வயிற்றை உருவி, உருவி சித்தர் செய்த மூல விக்கிரகம் சேதமாகியிருந்தது.
2003-ஆம் ஆண்டு காஞ்சி ஜெயேந்திரர் பழனியாண்டவரைத் தரிசிக்க வந்தார். அவரிடம், ""மூலவர் விக்கிரகம் ரொம்ப சேதமாகிவிட்டது. போலியோ குழந்தையின் கால்களைப் போல சிலையின் கால்கள் குச்சியாகிவிட்டன. எப்போது வேணும்னாலும் கால்கள் ஒடிந்து விழப் போகிறது. அதோட ஊனமான விக்கிரகத்துக்கு அபிஷேக ஆராதனை செய்வதால் எங்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் ஊனமாக இருக்கிறது. புதிய திருவுரு செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய முடியுமா?'' என்று குருக்கள்கள் கோரிக்கை வைத்தனர்.
அக்காலத்தில், காஞ்சி மடத்திற்கும் போயஸ் தோட்டத்திற்கும் நல்ல நெருக்கம் இருந்தது. ஜெயேந்திரர் சொன்னதால் ""பழனியாண்டவரின் மூல விக்கிரகத்தை புதிதாக செய்து கொடுங்கள்'' என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அன்றைய முதலமைச்சர் ஜெ.
ஐந்தடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன மூலவர் சிலை செய்ய வேண்டுமெனச் சொல்லி திருத்தணியில் இருந்து பத்து கிலோ தங்கத்தை கடனாகக் கொடுக்கும்படி செய்திருக்கிறார்.
சிலை செய்யப்படுவதே பழனி கோவிலில் யாருக்கும் தெரியாது.
2004-ஆம் ஆண்டு, ராத்திரியோடு ராத்திரியாக பழனிக்கு கொண்டு வந்து வின்ச் மூலம் மேலேற்றி, எப்போதுமிருக்கும் மூலவருக்கு பக்கத்திலேயே இந்த 202 கிலோ சிலையும் நிலைப்படுத்தப்பட்டது.
ஒரு கருவறைக்குள் இரண்டு மூலவர்களா? பழனிக்கு பெருமையே ஒன்பது மூலிகைகளால் சித்தர் செய்த "நவபாஷாண' மூலவர் தானே?
பக்தர்களும், அருள்நெறியார்களும் மட்டுமின்றி கலைஞர், வைகோ போன்ற தலைவர்களும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள். ஆனாலும் ஆறு மாதம் புதிய சிலையும் கருவறைக்குள்தான் இருந்தது. அதற்கும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஆனால் புதிய சிலை கொஞ்சம் கொஞ்சமாக கறுத்து ஆறாவது மாதம் ஒரு இரும்புச் சிலைபோல ஆகிவிட்டது. இதை நக்கீரன் அப்போதே செய்தியாக வெளியிட்டது.
அதன்பிறகு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. ""பழனி கோவிலில் இரண்டு மூலவர்கள். அதில் ஒன்று இரும்புச் சிலை... அதற்கும் வழிபாடு. அதனால்தான் எம்.பி. எலெக்ஷனில் உங்கள் கட்சி தோற்றது'' என்று ஜோதிடர் பணிக்கர் சொல்ல... அந்த பணிக்கர் உன்னிகிருஷ்ணனையே பழனிக்கு அனுப்பி வைத்தார் ஜெ.
பழனிக்கு வந்த பணிக்கர், கறுத்த சிலையைப் பெயர்த்து, மலைக்கோவிலில் உள்ள "இரட்டைப் பூட்டு' அறைக்குள் வைத்துப் பூட்டச் சொல்லி விட்டார்.
இந்தத் தகவல்களை 5.4.2004 மற்றும் 12-4-2004 நக்கீரன் இதழ்களில் ""கந்தனுக்கு அரோகரா'' ""பக்தர்கள் போராட்டம். பழனி முருகனுக்கு வெற்றி'' என்ற தலைப்புகளில் தெளிவாக எழுதியிருக்கிறோம்.
ராமர் வனவாசம் போல கடந்த 14 ஆண்டுகளாக இருட்டறையில் பூட்டப்பட்டிருந்தது, ஜெயேந்திரர் சிபாரிசில், ஜெ.யின் உத்தரவுப்படி, முத்தையா ஸ்தபதியின் மேற்பார்வையில் செய்யப்பட்ட போலிச்சிலை.
""ஆறு மாதம் முன்பு கரூரைச் சேர்ந்த ஒரு செட்டியார் ஏழு லட்ச ரூபாய் செலவில் பூஜை செய்வதற்கான வெள்ளிப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார். அதைத்தான் 6 மாதமாக குருக்கள்கள் பயன்படுத்துகிறார்கள். பழைய வெள்ளிப் பொருட்களை அறையில் பூட்டி வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவற்றை அறையில் காணவில்லை. அதோடு அறையில் இருந்த முருகன் வள்ளி தெய்வானை உற்சவமூர்த்தி சிலைகள் இரண்டையும் காணவில்லை என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் செய்தார்.
போன மாதம் அதிகாரிகள் வந்து அந்த இருட்டறையை திறந்து சோதனை செய்தார்கள். அப்போதுதான் 202 கிலோ கறுப்புச் சிலையையும் பார்த்தார்கள். இதைப்பற்றி கோயில் நிர்வாகிகளிடம் விசாரித்த அதிகாரிகள் தங்கத்தையும் வெள்ளியையும் சுருட்டிக்கொண்டு போலியான சிலையை செய்யக் காரணமான முத்தையா ஸ்தபதியையும் பழைய இ.ஓ. ராஜாவையும் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையை முடுக்கினால் இன்னும் பலரைக் கைது செய்யலாம்'' என்கிறார் இந்து முன்னணி மா.செ. ஜெகன்.
போகர் சித்தர் வழி வந்த சிவானந்த புலிப்பாணி பாத்திரச் சாமி இதுபற்றி நம்மிடம், ""அந்த பணிக்கர் உன்னிகிருஷ்ணன் ஏற்பாட்டில் செய்த சிலை பத்தே நாளில் கறுத்து விட்டது. 14 வருடம் கழித்து அந்த மோசடி வெளியே வந்திருக்கிறது'' என்றார்.
பழனியாண்டவர் கோயிலுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்தான் வந்து விசாரணை நடத்தினார்கள். ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்னும் வரவில்லை.
""விரைவில் வந்து விசாரிப்பேன்'' என்றார் நம்மிடம் ஐ.ஜி.
வந்து விசாரித்தால், இருட்டறை மர்மங்கள் பலப்பல வெளிச்சத்திற்கு வரும்.