கே.முரளி, புதுப்பெருங்களத்தூர், சென்னை-63
"ஜெயலலிதா கைகாட்டிய நபரை சாமியாக மதிக்கவும் தெரியும். அவர் எதிர்த்தவரை சாணியாக மிதிக்கவும் தெரியும்' என்று கூறுகின்றாரே அமைச்சர் செல்லூர் ராஜு?
அவரும் அவரைச் சார்ந்தவர்களும் பொதுமேடைகளில் யாரை இப்போது சாணியாக மிதிக்கிறார்களோ அவர்களைத்தான் கடந்த ஆண்டில் சாமியாக்கி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது ஜெ.வின் "ஆன்மா'வுக்கும் தெரியும்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
மறைந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதியிடம் மாவலியாரைக் கவர்ந்தது எது?
காவி உடுத்தினாலும் மனிதர்களுக்குரிய இயல்பான ஆசைகளும் இச்சைகளும் சாமியார்களுக்கும் உண்டு என்பதை தனது "துறவு' வாழ்க்கை மூலம் நிரூபித்து, நாத்திகர்களின் ஸ்லீப்பர்செல்லாக செயல்பட்டாரே அந்த குணாம்சம்தான்!
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
"ஜெயலலிதா ஆட்சியை நடத்துவதாகச் சொல்பவர்கள் அவரது சிலையைக்கூட ஒழுங்காக வைக்கவில்லை' என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது குறித்து?
"இதென்ன பிரமாதம்... நாங்களாவது சிலையைத்தான் ஒழுங்காக வைக்கவில்லை. அவர்களோ முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே விட்டுவைக்கவில்லையே' என்கிறார்கள் ஓ.பி.எஸ். தரப்பினர்.
ஆர்.துரைசாமி, கணபதி புதூர், கோவை-6
நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய மூலகாரணமாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சி, இந்தியாவில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சி குழுக்களையும் ஒரே அணியாக இணைத்து தேர்தலை சந்திக்க மறந்தது ஏன்?
இந்துமத நாடாக இருந்த நேபாளத்தில் பொதுவுடைமை தழைக்கக் கிடைத்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்ற அக்கறை, இந்துமத நாடாக்க முயற்சிக்கப்படும் இந்தியாவில் உருவாகாமல் போய்விட்டது. திரிபுரா தேர்தல் தந்த பாடத்திற்குப் பிறகாவது தோழர்களின் பொலிட்பீரோ பொதுவுடைமை இயக்கத்திற்கான வாக்கு வங்கியைப் பாதுகாத்து, மதச்சார்பின்மை சக்திகளின் பலத்தைப் பெருக்கும் பெட்டகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி
நடிகைகளின் மரணம் மட்டும் மர்மமாகவே நிகழ்வது ஏன்?
லால்பகதூர் சாஸ்திரி நடிகரா? நீதிபதி லோயா நடிகரா? இப்படி எத்தனையோ திடீர் மரணங்களுக்கான முழுமையான காரணங்கள் இன்றுவரை மர்மமாகவே உள்ளன. எனினும், நடிகைகளின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பினால் அவர்களின் மரணம் எப்போதும் பேசுபொருளாக இருக்கிறது. விமான விபத்தில் இறந்த நடிகை ராணி சந்திரா மீது கவலையும் அனுதாபமும் கொண்டு, அவர் மரணத்துக்குப் பின் வெளியான "பத்ரகாளி' படத்தை செமஹிட் ஆக்கிய இரக்ககுணம் கொண்டவர்கள் தமிழ் ரசிகர்கள். தற்கொலை என முடிவான நடிகைகள் ஷோபா, "படாபட்' ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி, மோனல், பிரதியூஷா உள்ளிட்டோரின் மரணங்களும் ரசிகர்களிடம் இன்றைக்கும் மர்ம முடிச்சுகளாகவே இருக்கின்றன. தமிழ்ப்படத்தில் அறிமுகமாகி, இந்திக்குச் சென்று மிகக் குறைந்த வயதில் பெயர் பெற்ற திவ்யபாரதியாக இருந்தாலும், சீனியர் நடிகை ஸ்ரீதேவியாக இருந்தாலும் அவர்களின் மரணம் பற்றிய மர்மங்கள் பல ஆண்டுகளுக்குச் சுழன்றுகொண்டுதான் இருக்கும்.
மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்
"என்னை சத்திரியனாக அல்ல, சாணக்கியனாகப் பார்ப்பீர்கள்' என்று டி.ராஜேந்தர் திடீரென புயல் கிளப்பியுள்ளாரே?
புழுதி கிளப்பியிருப்பதை புயல் என்கிறீர்களே... டி.ஆரை வச்சி நீங்க காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே?
ஆன்மிக அரசியல் நித்திலா, தேவதானப்பட்டி ஆன்மிக அரசியலை எதிர்கொள்ள நாத்திக அரசியல்தானே சரியானது? நாத்திகர்களுக்கு மதம் கிடையாது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் -கிறிஸ்தவர்கள் -பார்சிகள் அல்லாத அனைத்து மதத்தினரையும் "இந்து' என பிரிட்டிஷார் கணக்கெழுதி விட்டனர். சுதந்திர இந்தியாவிலும் அதேநிலை நீடிக்கிறது. அதனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குலதெய்வங்களையும் சிறுதெய்வங்களையும் மட்டுமே வழிபட்டு வந்த மக்களும், சைவ நெறியையும், வைணவ நெறியையும் கடைப்பிடித்து வந்தோரும், இதுபோன்ற பிறவழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்தோரும் இந்துக்களாக அடையாளப்படுத்தி, பிராமணிய முறையிலான சடங்குகளுக்கு ஆட்படுத்திவிட்டனர். பிராமணிய-வேதாந்த முறையிலானதே இந்துமதம் என ஆன்மிக அரசியல்வாதிகள் கருதும் நிலையில், இந்த ஆதிக்கத்தைத் தகர்த்து தமிழ் மண்ணின் பழைய சமய நெறிகளுக்கேற்ப அவரவர் தாய்மொழியில் வழிபடச் செய்யும் அரசியலே ஆன்மிக அரசியலை எதிர்கொள்வதற்கான வழி. பேராசிரியர் சுப.வீ.யின் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சுயமரியாதை மாநாட்டில், பார்ப்பனர்களிடமிருந்து இந்துக்களையும் இந்து கோவில்களையும் மீட்பதுடன், இந்து பக்தர்களுக்கு அவர்கள் வசிக்கும் கோயில் நிலங்களை பட்டா போட்டுத் தரவேண்டும் என நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் ஆன்மிக அரசியலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டி. நாத்திகர்களுக்கு கடவுள் -மதம் ஆகியவற்றில் உடன்பாடின்றி இருக்கலாம். ஆனால், சக மனிதர்களின் வழிபாட்டு உரிமையையும் வழிபாட்டு இடங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. |