பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி, பொள்ளாச்சி
அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி நடைபெறவுள்ள மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதே?
காந்தி கணக்கு.
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17
இவ்வளவுக்குப் பிறகும் அறவழிப் போராட்டங்களை மட்டுமே நடத்தி நீதிக்குத் தலைவணங்கும் நாம், சட்டமே சொன்னபிறகும் காவிரி தண்ணீரைத் தரமுடியாது என கொக்கரிக்கும் கர்நாடகத்திற்குப் பாடம் புகட்ட முடியாதா?
பாடம் கற்பிக்க வேண்டியது மத்திய அரசு. அதுவே சட்டப்படி நீதிதேவன் சொன்ன வார்த்தைகளுக்கு "அர்த்தம் புரியவில்லை' என காலந்தாழ்த்தும் வகையில் மனு செய்கிறது. தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய "ஸ்கீம்'களை உருவாக்குபவர்கள்தான் நாட்டை ஆள்கிறார்களே!
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
நாட்டில் வாழும் மனிதர்களைவிட, காட்டில் இருக்கும் மிருகங்களிடம் பசி, பட்டினி, கொலைவெறித்தாக்குதல் இத்தனை இருந்தாலும், நாட்டைவிடக் காட்டில் சட்டச் சிக்கல் இல்லாமல் வாழ்க்கை ஓடுகிறதே?
பசி எடுக்கும் நேரத்தில் பட்டினி கிடப்பதைத் தவிர்ப்பதற்கு மட்டுமே அங்கே கொலை வெறித்தாக்குல் நடத்தப்படுகிறது. இங்கே பசி ஏப்பம் இல்லாமல் புளி ஏப்பம் விடுவதற்காக கொலை வெறித்தாக்குதல் நடத்தி வாரிச்சுருட்ட நினைப்பதால் சட்டச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், இதுபோன்ற விவகாரங்களில் சட்டமே கூட சிக்கலாகிவிடுகிறது. காட்டுவிலங்கான அரியவகை மானை கொன்ற சல்மான்கானுக்கு 5 வருட சிறைத்தண்டனை கொடுத்த சட்டம், இரண்டே நாட்களில் ஜாமீனும் கொடுத்துவிட்டதே!
கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
காமன்வெல்த் போட்டி -ஐ.பி.எல். போட்டி?
இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த நாடுகளில் விதைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டின் நவீன வளர்ச்சிதான் ஐ.பி.எல். போட்டி. அதில் விளையாட்டு வீரர்களின் ஏலத்தில் தொடங்கி சூதாட்டம்வரை எல்லாமே கோடிகளைக் குவிக்கும் கார்ப்பரேட் வியாபாரம். இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் சார்பில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் திறமையாளர்களுக்கு களம் அமைகிறது. ஐ.பி.எல்.லில் பிற மாநிலத்தவரும் வெளிநாட்டவரும் தமிழக வீரர்களாக வேடமிடுகிறார்கள். காமன்வெல்த்தில் தமிழக வீரர்கள் வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள்.
எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்
96 வயதான நிலையிலும் பேராசிரியர் அன்பழகனுக்கு ஓய்வு தராமல், தி.மு.க. அவரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதே?
கொள்கை வழி அரசியலில் நடப்பவர்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. அதுவும், பெரியாரிடம் பயின்று, அண்ணாவிடம் வளர்ந்தவர் பேராசிரியர் அன்பழகன். தி.மு.க. தலைவர் கலைஞர் செயல்படமுடியாத நிலையில், அவரைவிட மூத்தவர் என்றாலும் பேராசிரியரின் வழிகாட்டுதல் கட்சிக்குத் தேவைப்படுகிறது. தி.மு.க.வின் சித்தாந்த முகமாக இருப்பவர் அவர். அதனால்தான், மாநாடு, பொதுக்கூட்டம், கருத்தரங்கம் என எதுவாக இருந்தாலும் அங்கேவந்து தன் வயதையும் முதுமையையும் பொருட்படுத்தாமல் கொஞ்சநேரமாவது திராவிடப் பாடம் எடுக்கிறார் பேராசிரியர்.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
தமிழிசை, கர்நாடக இசையை ரசிப்பதுபோல தெரிகிறதே?
அவர் ரசிகரில்லை. மத்திய அரசு நடத்தும் கச்சேரிக்கேற்ப மாநிலத்தில் தாளம் போடுபவர்.
ஆன்மிக அரசியல்
ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்
கொற்றவை-துர்க்கை என ஒரே அம்மனைக் குறிக்கும் இந்த இரண்டு சொல்லுக்கும் இடையில் ஆன்மிக அரசியல் இருக்கிறதா?
பழந்தமிழர்களின் ஐவகை நிலங்களில் ஒன்றான பாலை நிலத்தின் தெய்வம், கொற்றவை. அதுதான் ஆரியர்கள் ஏற்படுத்திய தாக்கத்திற்குப் பிறகு பல இடங்களில் துர்க்கையாக மாறி, கோவில்களிலும் அதே பெயரில் குடியேறிவிட்டது. திருவாரூர் தியாகராஜசாமி திருக்கோவிலில் உள்ள எரிசனக் கொற்றவை சன்னதி இப்போது ராகுகால துர்க்கை சன்னதி எனப் பெயர் பெற்றுள்ளது. கொற்றவை மட்டுமா? ஊர் எல்லையைக் காவல்காக்கும் பெண் தெய்வமான எல்லையம்மனையும் ரேணுகாபரமேஸ்வரி ஆக்கிவிட்டார்கள். குறிஞ்சிநிலத் தலைவனும் தெய்வமுமான முருகனை ஸுப்ரமணியஸ்வாமியாக மாற்றியதும் ஆரியம்தான். அவருக்கு தெய்வானை என்ற மனைவி உண்டு என்கிற கதையை உருவாக்கி, முருகனின் காதல் மனைவி வள்ளியை இரண்டாம்தாரமாக்கியதும் அவர்களின் கைங்கர்யம்தான். தஞ்சை பெருவுடையாரை பிரகதீஸ்வரராகவும், மதுரை சொக்கநாதரை சோமசுந்தரராகவும் மாற்றி வைத்தது உள்பட பலவற்றிலும் ஆன்மிக அரசியல் உண்டு. மாரியம்மாவை மேரியம்மாவாக்கிவிட்டார்களே எனக் குற்றம்சாட்டுபவர்கள்தான், மாரியம்மன் கோவில் உள்பட பல நாட்டுப்புறத் தெய்வங்களின் கோவில்களில் அந்த மண்ணுக்குரிய வழிபாட்டுக்குப்பதிலாக சமஸ்கிருத மந்திரங்களில் அர்ச்சனை செய்யும் குருக்களை நுழையச் செய்துவிட்டார்கள்.