ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்

சமாதியில் அமர்ந்து தியானம் செய்தவரெல்லாம் துணை முதல்வர் பதவி பெறும்போது, படித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள் விரக்தியில் சமாதியாகி வருகிறார்களே?

வேலை கிடைப்பதற்குத் தகுதி வேண்டும். பதவி என்பது தகுதியால் மட்டும் கிடைப்பதில்லை. கில்லாடித்தனங்களும் தேவை. "தர்மயுத்தம்' என்பது நேர்மைபோலத் தோன்றும் கில்லாடித்தனம்.

mavali-answers

Advertisment

ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்

மாநிலங்களுக்கென்று தனிக்கொடி தேவைதானா?

மாநிலத்தில் உள்ள கட்சிகளுக்கு கொடி இருக்கும்போது, மாநிலங்களுக்கு எனக் கொடி இருக்கக்கூடாதா? சென்னை மாநகராட்சிக்குக்கூட தனிக் கொடி உண்டு. தாய்லாந்து நாட்டில் தேசியக் கொடி பறப்பது போலவே மன்னருக்கான கொடியும் பறக்கும். இந்தியா என்பது "மாநிலங்களின் ஒன்றியம்' என அரசியல் சாசனம் குறிப்பிடுவதால், தேசியக் கொடியுடன் மாநிலக் கொடியும் பறப்பது தவறில்லை. இதனை 1970-களிலேயே வலியுறுத்தி தமிழ்நாட்டுக்கெனத் தனிக்கொடியை வடிவமைத்து பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசிடம் வழங்கியவர் கலைஞர். அப்போது இந்திராகாந்தி அதில் அக்கறை காட்டவில்லை. ஆனால், இப்போது, அதே இந்திராகாந்தியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தமது மாநிலத்திற்கெனத் தனிக் கொடியை வடிவமைத்திருக்கிறார். மாநிலங்களின் உரிமை மற்றும் அடையாளங்கள் பற்றி தேசியக் கட்சிகள் அக்கறை செலுத்துவதே திராவிடக் கட்சிகள் போன்ற மாநிலக் கட்சிகள் பெற்றுள்ள பெரும் வெற்றி.

Advertisment

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

சசிகலா நடராஜன் மறைவு?

வி.கார்மேகம், தேவகோட்டை

நடராஜன் விஷயத்தில் விஞ்ஞானத்தை விதி வென்றுவிட்டதே?

இயற்கையாக அமைந்த உடலுறுப்புகள் அளவிற்கு மாற்று உறுப்புகள் பயன் தராது என்பதே விஞ்ஞான விதி. அதிலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் முழுமையான வெற்றி தருவதில்லை எனத் தெரிந்தும் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் குடும்பத்தை ஏமாற்றி எம்.நடராஜனின் உயிரைக் காப்பாற்ற நினைத்தார்கள். விஞ்ஞானத்தின் விதி ஒப்புக்கொள்ளவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடராஜன் வாழ்ந்த நாட்களெல்லாம் விஞ்ஞானம் தந்த போனஸ்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

வாக்கு வங்கியே இல்லாத கட்சிகளை கூட்டணியில் தி.மு.க. வைத்திருப்பது சரியா?

பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் நலனுக்காக உருவான கட்சி தி.மு.க. தற்போது இவர்களுக்காகத் தனித்தனி கட்சிகள் உருவாகிவிட்டன. அதை உணர்ந்து தமது பலத்தை பெருக்குவதில் தி.மு.க. அக்கறை செலுத்தாத நிலையில், மற்ற கட்சிகளின் கூட்டணி தேர்தல் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. அதிலும்கூட சரியான வியூகமின்றித் தேர்தல் களத்தை இழப்பதும் தொடர்கிறது.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

காங்கிரஸ் மீண்டும் வாக்குச்சீட்டு அரசியலைக் கோருகிறதே?

முதன்முதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டது காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதுதான்! அதனை வி.பி.சிங் எதிர்த்ததுடன், அதில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதையும் ஊடகங்கள் முன் செயல்படுத்திக் காட்டினார். அப்போது அதனை மறுத்த காங்கிரஸ், இப்போது பா.ஜ.க. பெறுகின்ற நம்பமுடியாத வெற்றிகளால் வாக்குச்சீட்டை வலியுறுத்துகிறது.

ஆன்மிக அரசியல்

அ.ந.ராசு, ஈரோடு

தமிழ் வருடங்கள் 60-ல் ஒன்றுகூட தமிழ்ப் பெயர் இல்லையே?

வருடம், வருஷம் இவற்றிற்கான தமிழ்ச் சொல், ஆண்டு. சித்திரை 1-ஆம் தேதியை "தமிழ் ஆண்டுப் பிறப்பு' என்று சொல்லாமல் "தமிழ் வருஷப் பிறப்பு' என்கிறோம். தற்போது நடைபெற்று வருவது ஹேவிளம்பி வருஷம். அடுத்து வரப்போவது (ஸ்ரீ)விளம்பி. மொத்தம் 60 வருஷங்கள். இது "பிரபவ' வருஷத்தில் தொடங்கி "அட்சய' வருஷத்தில் முடியும். பிறகு, மீண்டும் அதே சுற்று தொடரும். இந்தப் பெயர்களில் எதுவுமே தமிழ் இல்லை. எல்லாமும் சமஸ்கிருதப் பெயர்கள். இந்த வருஷப் பிறப்புக்காக சொல்லப்படும் புராணக் கதை என்பது, நாரதரை பெண்வடிவம் எடுக்கச் செய்த கிருஷ்ணன், அவருடன் சேர்ந்ததால் பிறந்த 60 குழந்தைகளே, 60 வருஷங்கள் என்பதாகும். இந்தப் புராணக் கதையும் தமிழில் உருவானது அல்ல. இப்படி எல்லா வகையிலும் வடபுலத்து சமஸ்கிருதத்தைத் தழுவியிருக்கும் 60 வருஷங்களை தமிழ் வருஷப் பிறப்பாக சித்திரை தொடக்கத்தில் கொண்டாடுகிறோம். இதற்கு மாற்றாக, அறுவடைத் திருநாளான பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், அதனையொட்டி திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கைக் கடைப்பிடிப்பதும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டும்கூட, அது அரசியல்ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. தமிழர்கள் புத்தாண்டுக்குப் பதில் வருஷப் பிறப்பு கொண்டாடுவது என்பதும் ஒருவகை ஆன்மிக அரசியல்தான்!