மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
மாவலியாரே... "பயங்கரவாதமும் மதவாதமும் இடதுசாரி தீவிரவாதமும் சமுதாயத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல்' என்கிறாரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி?
"தனது ஆட்சிக்குட்பட்ட மக்களின் நலன் குறித்த எந்த சிந்தனையும் செயலும் இல்லாத அரச பயங்கரவாதத் தைவிட பெரிய அச்சுறுத்தல் எதுவும் கிடையாது' என்பதை முதலமைச்சருக்கு யார் சொல்வது?
ஜி.ராமச்சந்திரன், ஈரோடு
புதிய இந்தியா -டிஜிட்டல் இந்தியா எனப் பிரதமர் மோடி பெருமிதம் கொள்ளும் நிலையில் மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், பால் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களின் விலை எதுவும் கட்டுப் படுத்தப்படவில்லையே. பிரதமரும் பாஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குடும்பத்தினரும் இதையெல்லாம் பயன்படுத்துவ தில்லையா?
ஏன் இவ்வளவு பெரிய கேள்வி? சோறுதான் தின்கிறார்களா என நேரடியாகவே கேட்டிருக்க லாமே! (சோறு என்பதற்கு பதில் சப்பாத்தி என்றும் வைத்துக்கொள்ள லாம்)
ஆர்.கார்த்திகேயன், மயிலாப்பூர், சென்னை-4
"பெண் என்ற வகையில் பயப்படுவேன்; நடிப்பு என்று வந்துவிட்டால் கதாபாத்திரத் திற்கேற்ப துணிச்சலாக நடிப்பேன்' என்கிறாரே நடிகை வித்யா பாலன்?
இந்தியப் பெண்களின் இயல்பை வெளிப்படுத்தியிருக் கிறார் வித்யாபாலன். சினிமா நடி கைகள் மட்டுமல்ல, கூலித்தொழில் செய்வோர் உள்பட வேலைக்குச் செல்லும் பெண்கள் பலரும் தொழிலில் துணிச்சலானவர்கள். சமூகச் சூழலில் பாதுகாப்பற்ற வர்களாக இருக்கிறார்கள்.
பா.ஜெயப்பிரகாசம், சர்க்கார்பதி, பொள்ளாச்சி
வி.ஐ.டி. பல்கலை வேந்தர் ஜி.விசுவநாதன் எழுதிய ‘"மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.'’ என்ற நூலைப் படித்தீர்களா?
நூலைவிட அதன் வெளியீட்டு விழாதான் அதிசயம். அ.தி.மு.க., தி.மு.க, முன்னாள் அ.தி.மு.க. என, பல தரப்பினரும் ஒரே மேடையில் இருப்பதும், ஒத்தசிந்தனையுடன் பேசுவதும் அதிசயம்தானே!
க.அருச்சுனன், செங்கல்பட்டு
அரசியலில் வெற்றிடம் என்கிறார்களே, சரியா?
அறிவியல்படி வெற்றிடத்தை காற்று நிறைத்துவிடும். அரசியல்படி நாற்காலிக்கானப் புயல் வீசும். வேர் உள்ளவை நிலைக்கும்; சருகுகள் பறக்கும்.
கே.கே.பாலசுப்ரமணியம், குனியமுத்தூர், கோவை-8
இப்போதைய நடிகைகளில் ஜெ.வின் சிலை வடிக்க மாடலாக யாருடைய முகம் சரிப்படும்?
ஜெ. என்ற திறமையான நடிகையைவிட வேறெந்த முகமும் ஜெ.வுக்கு செட் ஆகாது என்பதற்கு அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வைத்துள்ள சிலையே சாட்சி.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
எலியும் பூனையும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்?
எந்த இடத்தில் சேர்கின்றன என்பதைப் பொறுத்தது. வீடு என்றால் பாடுபட்டு சேமித்த வற்றைக் கூட்டுக்களவாணிகள் கொள்ளையிடும். பதுக்கல் இடம் என்றால் கூட்டுக்களவாணிகள் கொள்ளையடித்தவற்றை புதிய கூட்டாளிகள் தின்று கொழுக்கும்.
லட்சுமி செங்குட்டுவன்,வேலூர் (நாமக்கல்)
சமீபத்திய காது குத்தல்?
ஓ.பி.எஸ். தாக்கல் செய்த இ.பி.எஸ். அரசின் பட்ஜெட்.
ஆன்மிக அரசியல்
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
கேரளாவில் கடந்த 7 ஆண்டுகளில் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்து 334 பேர்கள் என்று ஓர் ஆய்வில் புதுத் தகவல் வெளியாகியுள்ளதே?
மதமாற்றம் என்பது மதங்களின் ஆதிக்கம், சொந்த மதத்தில் ஏற்படும் சிக்கல்கள், புதிய மதத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் இவற்றைப் பொறுத்து அமைகின்றன. மருள்நீக்கியார் என்ற பெயருடன் சைவ மதத்தில் பிறந்த திருநாவுக்கரசர் சமணமதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு "தருமசேனர்' என்ற பெயர் கொண்டு அந்த மதத்தில் முன்னிலைப் பெற்றார். பின்னர் கடுமையான வயிற்றுநோய் தாக்கியபோது, தனது சகோதரி திலகவதியாரால் மீண்டும் சைவ சமயத்தை ஏற்று "திருநாவுக்கரசர்' என்றும் "அப்பர்' என்றும் அழைக்கப்பட்டு "தேவாரம்' பாடிய மூவருள் ஒருவராகவும் உழவாரப் பணி மேற்கொண்டும் இறை தொண்டில் ஈடுபட்டார். வைணவ மதத்தில் விசிஷ்டாத்வைத நெறியைப் பின்பற்றிய ராமானுஜர், ஒடுக்கப்பட்ட -ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தோரையும் "திருக்குலத்தார்' என்ற பெயரில் வைணவர்களாக்கினார். இஸ்லாமியராகவும் கிறிஸ்தவராகவும் மதம் மாறியவர்களும் மாற்றப்பட்டவர்களும் வரலாற்றின் பக்கங்களில் இருக்கிறார்கள். 1981-ல் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் (ரஹ்மத் நகர்) கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக முஸ்லிம் மதத்திற்கு மாறியது இந்திய அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளிலிருந்து பணம் செலவிடப்பட்டு மத மாற்றம் நடைபெறுவதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்ட, இந்து மதத்தின் தீண்டாமைக் கொடுமையிலிருந்து தப்பிக்க முஸ்லிமானதாக மதம் மாறியவர்கள் கூறினர். கேரளா உள்பட பல மாநிலங்களிலும் பல்வேறு காரணங்களால் மதமாற்றங்கள் நடக்கின்றன. பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்தபிறகு இந்தியாவின் பல மாநிலங்களிலும் பிற மதங்களுக்குச் சென்றவர்களை மீண்டும் இந்துக்களாக்கும் ‘"கர்வப்சி'’என்ற பெயரில் நடத்தப்படுகிறது. மத அரசியல் காலம் காலமாகத் தொடர்கிறது.