பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

lover

சினிமா கதாநாயகர்களை சண்டைக் காட்சிகளில் உயர்த்திக் காட்டுவதற்காக எத்தனை ஸ்டண்ட் நடிகர்கள் காயம்பட்டு, மரணத்தை சந்தித்துள்ளார்கள்?

Advertisment

அரசியல் கதாநாயகர்களான தலைவர்களுக்காகப் பலியாகும் தொண்டர்களின் கணக்கைப் போலத்தான்.

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி, பொள்ளாச்சி

Advertisment

முரசொலி செல்வம் எழுதிய "சர்க்காரியா கமிஷன் ஒரு சூழ்ச்சி வலை' நூல்...?

2ஜி வழக்கில் விடுதலை தீர்ப்பு வந்தாலும்கூட, தி.மு.க. பற்றிய விமர்சனம் என்றால், சர்க்காரியா கமிஷனே சொல்லிவிட்டது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது வழக்கம். அதிலும், "விஞ்ஞான முறையில் ஊழல்' என்ற சொற்றொடர் ரொம்ப பிரபலம். சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? நீதிபதி சர்க்காரியா என்ன சொன்னார்? அந்தக் கமிஷனின் விசாரணை எப்படி நடந்தது? தி.மு.க. மீது புகார் தெரிவித்த எம்.ஜி.ஆர். உள்ளிட்டவர்கள் அளித்த சாட்சியம் என்ன? விசாரணைக் கமிஷன் கண்டுபிடித்தது என்ன? என்பதை இன்றைய தி.மு.க.வினருக்கே தெளிவுபடுத்தும் வகையில் உள்ள கையேடுதான் அந்தப் புத்தகம். அதிகம் எழுதாமல், அவசியப்படும் நேரத்தில் அழுத்தமாக எழுதக்கூடியவர் முரசொலி செல்வம்.

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்

ஜெயலலிதா ஆட்சியில் நடந்த தொலைநோக்குத் திட்டம் எது?

எல்லாமே தொலைநோக்குத் திட்டம்தான். இந்தோனேஷியா, மலேசியா, மொரீஷியஸ் எனத் தொலைவில் இருப்பவற்றை நோக்கி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை வருமான வரி புலனாய்வுத்துறையே கண்டறிந்துள்ளது. உள்ளூர் அளவிலான உண்மையான திட்டம் என்றால், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு.

உமரி பொ.கணேசன், மும்பை-37

மத்திய அரசின் பட்ஜெட் எப்படி? தமிழகத்துக்கு என்ன கிடைத்துள்ளது?

இந்தியா முழுமைக்கும் தமிழகம் 40 ஆண்டுகளாக நிறைவேற்றி வரும் திட்டங்களை வழங்கிவிட்டு, தமிழகத்திற்கு வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

எம்.முகமதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"காவிரி நீர் தொடர்பான சுப்பிரமணிய சாமியின் கருத்து பா.ஜ.க.வின் கருத்தல்ல' எனக்கூறும் தமிழிசை, எடியூரப்பாவின் கருத்து குறித்து எதுவும் சொல்லவில்லையே?

சுப்பிரமணியசாமியின் கருத்தை அவரது சொந்தக் கருத்து என்றதுபோல, எடியூரப்பாவின் கருத்தை கர்நாடக பா.ஜ.க.வின் கருத்தாக கருதவேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையின் மைண்ட் வாய்ஸ்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

ஒரு தலைமுறை என்பது 60 வருடங்கள் என்றும், 33 வருடங்கள் என்றும் இருவகை கணக்கீடுகள் சொல்லப்படுகின்றனவே எதனை எடுத்துக்கொள்வது?

60 வயது என்பதே முழு ஆயுள்காலம் என நம்பிய காலம் ஒன்று உண்டு. அதனால்தான் வருஷப்பிறப்பு கணக்குக்கூட 60 ஆண்டுகளைக் கொண்டதாக அமைந்தது. 60 வயது நிறைந்தால் சஷ்டியப்த பூர்த்தி என ஆயுள் நிறைவடைந்து புதுப்பிறப்பு கிடைத்ததுபோலக் கொண்டாடினார்கள். அப்போது 60க்கு அதிக மதிப்பு. அறிவியல் வளர்ச்சியும் -தொழில்நுட்ப வளர்ச்சியும் கணக்குகளை மாற்றிவிட்டன. மனிதர்களின் ஆயுள்காலம் அதிகரித்து தலைமுறை இடைவெளிக்காலம் சுருங்கிவிட்டது. 33 ஆண்டுகள் கடந்தால் சிந்தனை-செயல்முறை எல்லாம் பழையதாகி, புதிய தலைமுறையின் கைகளில் உலகம் அடங்கிவிடுகிறது.

mavalia

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை அம்பாளுக்கு சுடிதார் அணிவித்த குருக்களின் செயல் ஆன்மிகமா?

அதைச் செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரியப் பண்பாட்டை சிதைத்ததற்காக அடுத்தடுத்த விசாரணைகளும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது ஒருபுறம் இருக்கட்டும். பெண் கடவுள் சிலைக்கு என்ன உடை என்பதை அர்ச்சகர்களும் அவரைப் போன்ற ஆண்களும்தானே தீர்மானிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட பெண்கடவுள் சிலைகள் -வார்க்கப்பட்ட செப்புத் திருமேனிகள் பலவற்றில் உடையலங்காரம் கிடையாது. பல சிலைகளில் உடை இருக்காது -நகை இருக்கும். அதன் பின்னர் மனித நாகரிக வளர்ச்சிக்கேற்ப பெண்கடவுள் சிலைகளிலும் ஓவியங்களிலும் மெல்ல மெல்ல ஆடைகள் அதிகரிக்கத் தொடங்கின. சுதை வேலைப்பாட்டில் உருவான சிலைகளில் பெண்கடவுளர்கள் சேலை அணிந்திருப்பது போல அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே வழிபட்டு வந்த பழைய சிலைகளுக்கும் உடை அலங்காரம் மாறியது. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் ஆடை மாற்றம் நிகழ்ந்திருப்பதை வரலாற்றுப் பார்வையுடன் நோக்கும்போது அறியமுடியும். இன்று வடஇந்தியாவிலும் தென்னகத்திலும் பெண்கள் சுடிதார் அணிவது சர்வசாதாரணம். அவர்களுக்கு அது வசதியாகவும் உடலை மறைக்கும் விதத்திலும் இருக்கின்ற நிலையில், அதே ஆடையை சந்தனக்காப்பு செய்யப்பட்ட அபயாம்பிகைக்கும் அணிந்து பார்த்த குருக்கள், அபாயத்தில் சிக்கிக்கொண்டுவிட்டார்.

தூயா, நெய்வேலி

காதலர் தினத்திற்கு பரிசளிப்பது எந்த நாட்டின் கலாச்சாரம்?

உலகத்தின் பொதுமொழி, காதல். அனைத்து நாட்டு உயிர்களின் இயற்கையான உணர்வு. களங்கமற்ற மனதே காதலர் தினத்திற்கான சிறந்த பரிசு.