தமிழகச் சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை உணர்ந்து "அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாதத்துக்குள் இழுத்து மூடவேண்டும்' என தமிழக அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டு தீர்ப்பளித்தத சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரசின் மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்தது. மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் சரியாக செய்யாததாலும் ஊழல் நிர்வாகத்தாலும் கட்டுமானத் தொழில் மொத்தமாக முடங்கிக் கிடக்கிறது.
சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் கோ.வெங்கடாச்சலம் நம்மிடம், ""அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இவை தவிர, உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கான பாதாள சாக்கடை திட்டம் முதற்கொண்டு 15-க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. இவற்றின் மொத்தமதிப்பு சுமார் 5 லட்சம் கோடி. ஆனால், மணல் தட்டுப்பாடு, சிமெண்ட் மற்றும் கம்பிகளின் விலை அதிகரிப்பு என பல்வேறு பிரச்சனைகளை கடந்த சில மாதங்களாக எதிர்கொண்டு வருவதால் 5 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்கி விட்டன. இதனால், கட்டுமான தொழிலில் இருந்த இரண்டரை லட்சம் சிவில் இன்ஜினியர்களும், இத்தொழிலை நம்பியிருந்த ஒன்றரைக் கோடி கூலித்தொழிலாளர்களும் வேலை வாய்ப்பினை இழந்து தவிக்கின்றனர்.
மணல் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதால் ஒரு லோடு மணல் தற்போது 60 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஒரு டன் கம்பி 36 ஆயிரத்திலிருந்து 42 ஆயிரமாகவும், ஒரு மூட்டை சிமெண்ட் 320 லிருந்து 400 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இப்படி, கட்டுமானத்திற்குரிய ஒவ்வொரு பொருளின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால் ரியல் எஸ்டேட் துறை மட்டுமல்ல ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவும் சிதைந்து விட்டன. கனவை சிதைத்துவிட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்ட மானியம் தருகிறோம் என மத்திய-மாநில அரசுகள் சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது.
மணலுக்கு மாற்றாக "எம் சாண்ட்'டை பயன்படுத்த அறிவுறுத்துகிறது அரசு. ஆனால், அது செயற்கை மணல் என்பதால் அதைப் பயன்படுத்தி வீடு கட்ட மக்களிடம் பயம்தான் அதிகமிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மணல் குவாரிகள் மூடப்படுவதைப் பயன்படுத்தி மணலின் விலைக்கு இணையாக எம் சாண்ட்டை விற்க துவங்கியுள்ளன நிறுவனங்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு யூனிட் 12 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட எம் சாண்ட், தற்போது 40 ஆயிரம் ரூபாய். அதனால், மணல் தட்டுப்பாட்டை சரிசெய்ய போர்க்கால நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் அல்லது எம் சாண்ட் விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் ஒரு குழு அமைக்க வேண்டும். அக்குழு நிர்ணயிக்கும் விலையைத் தாண்டி விற்க அனுமதிக்கக் கூடாது. இதுவும் சரிப்பட்டு வராது எனில் எம்சாண்ட் குவாரிகளை அரசே நடத்தலாம். உள்கட்டமைப்பின் முக்கிய அம்சமான கட்டுமானத் தொழில் முடங்கிவிட்டதால், தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கட்டுமானத் தொழில்நிறுவனங்கள் இடம்பெயரத் துவங்கியுள்ளன. இதனால், இத்துறை மூலம் இதுவரை கிடைத்துக்கொண்டிருந்த சுமார் 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும் அபாயமும் சூழ்ந்துள்ளது. ஆக, முடங்கிக்கிடக்கும் கட்டுமான தொழிலையும், அதனை நம்பியுள்ள பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களையும் காப்பாற்ற அரசு முன் வரவேண்டும்'' என்கிறார் ஆவேசமாக.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் நாம் பேசியபோது, ""இந்தியாவின் மொத்த ஜி.டி.பி.யில் ரியல்எஸ்டேட் துறையின் பங்களிப்பு மட்டும் 12 சதவீதம். விவசாயம் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறைகளுக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்புகளை அதிகம் உள்ளடக்கிய துறை ரியல் எஸ்டேட் தொழில்தான். அந்த வகையில் தமிழகத்தில் கட்டுமானத் துறையில் ஏற்பட்டிருக்கும் முடக்கம், கோடிக்கணக்கான மக்களை நேரடியாக பாதிப்பதுடன் அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். மத்திய-மாநில அரசுகளின் தவறான கொள்கைகளினாலும், அக்கறையின்மையினாலும் இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுமானத் திட்டங்கள் எந்த நகர்வும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தென்னிந்திய அளவில் இது தமிழகத்தில்தான் அதிகம். மணல் மாஃபியாக்களின் ஊழல்கள் மற்றும் சிமெண்ட் உலகில் நடக்கும் சிண்டிகேட் லாபி உள்ளிட்டவைகளாலும் கட்டுமானத் துறை வீழ்ச்சியடைந்து வருகிறது'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
கட்டுமானத்துறை சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளையும், 5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் முடங்கிக்கிடப்பதையும் மையப்படுத்தி சென்னையில் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள் சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர். இதில், 4 ஆயிரத்திற்கும் அதிகமான பொறியாளர்கள் கலந்துகொண்டு உண்ணாவிரதமிருந்தனர். அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் இச்சங்கத்தினர்.
இயற்கையுடனான நட்பு முறையிலான "கிவ் அண்ட் டேக்' பாலிசிதான் வாழ்க்கை. சுரண்டலுக்கு இடமில்லாமல், மனித வளர்ச்சிக்குத் தேவையானவை கிடைக்க வழிவகுப்பதே அரசின் கடமை. கமிஷன் அரசாங்கத்தாருக்கு இது தெரியுமா?
-இரா.இளையசெல்வன்