பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
கை சுத்தமான நேர்மைவாதி, கறை படிந்த ஊழல்வாதி- இருவரில் யார் முகவரியை மக்களிடம் கேட்டால் சரியாக சொல்வார்கள்?
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏ-1 குற்றவாளிக்கு சட்டமன்றத்தில் படம் திறக்கப்பட்ட மாநிலத்தில் இப்படிப்பட்ட கேள்விக்கு இடமேயில்லை.
தூயா, நெய்வேலி
"சமஸ்கிருதத்தைவிட தொன்மையான மொழி தமிழ்' என்று பிரதமர் நரேந்திரமோடி சொல்லியிருப்பது ஆச்சரிய அதிர்ச்சியாக இருக்கிறதே?
4 ஆண்டுகாலமாக எத்தனையோ அதிர்ச்சிகளைத் தந்தவர் பிரதமர் மோடி. அவர் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விக்கு, சரியான பதிலைச் சொல்லியிருப்பது ஆச்சரிய அதிர்ச்சி. இதுநாள்வரை, தமிழே சமஸ்கிருதத்திலிருந்துதான் வந்தது என்றும், சமஸ்கிருதம்தான் தெய்வ பாஷை என்றும் சொல்லிவருபவர்கள் நடுவில் அறிந்தோ அறியாமலோ பிரதமர் தெரிவித்த கருத்து வரவேற்புக்குரியது. சமஸ்கிருதத்தைவிட மூத்த மொழியான தமிழுக்கு மத்திய அரசின் ஆட்சிமொழித் தகுதி உள்பட அனைத்து நிலைகளிலும் உரிய அங்கீகாரம் வழங்குவதும், அதுபோலவே இந்திய மக்களால் பேசப்படும் பிற மொழிகளுக்குரிய சமவாய்ப்புகளை மேம்படுத்துவதும் பிரதமரின் கடமை.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
வருகின்ற கோடையில் வெயிலின் கடுமையையும் குடிநீர் பற்றாக்குறையையும் சமாளிக்க தமிழக அரசின் திட்டங்கள் என்ன?
போன கோடையில் என்ன செய்தது? அதே தெர்மாகோல் பாணியிலான திட்டங்கள்தான்.
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17
ஒருவரின் முழுஉருவ வெண்கலச்சிலை செய்ய குறைந்தபட்சம் நான்கைந்து மாதங்களாகும். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த சில நாட்களிலேயே அவருடைய முழு உருவ வெண்கலச் சிலைகளை சசிகலா பார்வைக்கு கொண்டு வந்தார்களே, அப்படியென்றால் அவரது மரணம் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா?
இப்படியெல்லாம் கேள்விவரும் என்றுதான் அப்போது அந்தச் சிலைகளை வைக்கவில்லை. இப்போது, சசிகலாவுக்கு எதிராக அரசியல் களத்தில் இருக்கும் எடப்பாடி தரப்பினர், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கட்சியின் தலைமை அலுவலக வாசலில் புது வெண்கலச் சிலையை நிறுவுகிறார்கள். எனினும், அந்த பழைய சிலைகளும் அது உருவாக்கப்பட்ட பின்னணி மர்மத்தையும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் தோண்டியெடுக்கலாம்.
த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்
திராவிட கட்சிகளின் முரட்டுப் பிடிவாதம் எது?
தனது கட்சித் தலைமைப் பற்றிய தனிமனித துதியும்.. மாற்றுக்கட்சி மீதான தனிமனித தாக்குதலும்.
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்
உத்தரபிரதேசத்தைப் போல தமிழ்நாட்டிலும் ரவுடிகளை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளினால் என்ன?
அயோத்திக்குப்பம் வீரமணி, முட்டைரவி என என்கவுன்ட்டருக்குப் பலியான ரவுடிகள் பலரது பட்டியல் தமிழகத்திலும் இருக்கிறது. மனிதஉரிமை பற்றிய விழிப்புணர்வும் அதற்கான அமைப்புகளின் வளர்ச்சியும் தமிழக காவல்துறையை சைவப்பூனைகளாக்கி வைத்திருக்கின்றன. உ.பி. மாடலைப் பார்த்து மீண்டும் கருவாடு வாசனைக்கு ஆட்பட்டு வேட்டையைத் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை.
கே.முரளி, புதுப்பெருங்களத்தூர்
ஓராண்டு நிறைவடைந்த ஜெயில் வாழ்க்கை சசிகலாவுக்கு என்ன கற்றுத் தந்திருக்கும்?
ஜெயிலுக்கு வெளியே இருப்பவர்களைவிட உள்ளே இருப்பவர்கள் விசுவாசமானவர்கள் என்பதை.
தீபா ரவீந்திரன், சுங்குவார்சத்திரம் சமணத் துறவி கோமதீஸ்வரர் என்கிற பாகுபலியின் மகாமஸ்தாபிஷேக விழாவில் நிறைய சடங்குகள் செய்கிறார்களே, இது மன்னர்கள் காலத்து ஆன்மிக அரசியலின் தொடர்ச்சியா? கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் விந்தியகிரி மலையில் சரவணபெலகுல என்ற இடத்தில் இருக்கிறது 10ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட, ஒரே கல்லால் ஆன 57 அடி உயர கோமதீஸ்வரர் சிலை. சமண தீர்த்தங்கரர்களில் முதன்மையானவரான ஆதிநாதரின் 100 மகன்களில் இரண்டாவது மகன் பாகுபலி. ராஜ்ஜியத்தை வசப்படுத்துவது தொடர்பாக மூத்த மகன் பரதனுக்கும் பாகுபலிக்கும் நடந்த போரில் பாகுபலி வென்றபோதும், மண்ணாசையால் அண்ணனுடனே சண்டையிட்டோமே என்று உலக ஆசையைத் துறந்து, தன் தந்தையிடம் தீட்சை பெற்று, நின்ற நிலையில் தவம் செய்து தெய்வ நிலை அடைந்தார் என்பது சமய நம்பிக்கை. அவர் தவம் செய்த பகுதியில்தான் கோமதீஸ்வரர் என்ற பெயருடன் பாகுபலிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மகாமகம், கும்பமேளா போல 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமஸ்தாபிஷேகம் நடைபெறுகிறது. சமண மதத்தின் முக்கிய கோட்பாடு, உலகப் பற்றுதலை நீக்கி, துறவறம் பூண்டு, ஆன்மாவைவிட்டு கர்மாக்களை நீக்கி மோட்சம் அடைவது என்பதே! நிர்வாண நிலையில் அனைத்தையும் துறந்த கோமதீஸ்வரர் சிலை உணர்த்துவது அதனைத்தான். ஆனால், மன்னர்கள் முன்னெடுத்த மத அரசியலும், போட்டி மதங்களின் தாக்கமும் சடங்குகளுக்கு முக்கியத்துவத்தை உருவாக்கிவிட்டன. |