mavali

ஆன்மிக அரசியல்

ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்

ஆன்மிக அரசியலால் தமிழ் மொழிக்கு ஆதரவா, ஆபத்தா?

இறைவனாக இருந்தாலும் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று எடுத்துரைக்கும் திறம் தமிழ்மொழிக்கு உண்டு. புலவர்களுக்கு தமிழே முதல் தெய்வம். அதில் பல தெய்வங்களைப் பாடியிருக்கிறார்கள். ஆண்டாள் பற்றிய உரையில் கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துக்காக கொந்தளிப்பவர்கள், பல்லாண்டுகளுக்கு முன் கவி காளமேகப்புலவர் தமது பாடலில் பரமசிவன், பார்வதி, திருமால், பிள்ளையார், முருகன் எல்லோரையும் ஒரே வெண்பாவில் வசைபாடியுள்ளாரே! அதற்காக அப்போதைய சைவ-வைணவ அன்பர்கள் காளமேகத்தின் நாக்கை அறுக்கவோ தலையை சீவவோ முன்வரவில்லை. "இப்போது நடப்பது ஆண்டாள் மீதான அக்கறையல்ல, கலவரத்தூண்டல்' என்று ஒரு பதிலையே கேள்வியாக்கியிருக்கிறார் வாசகர் தாமஸ்-நாவல்காடு. அவர் குறிப்பிடும் காளமேகத்தின் பாடல் இதுதான்.

அப்பனி ரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி

ஒப்பரிய மாமன் உறிதிருடி -சப்பைக்கால்

அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்

கெண்ணும் பெருமை யிவை

-முருகனின் தந்தையாகிய சிவன் பிச்சை எடுத்து சாப்பிடுபவர். தாய் பார்வதி மலைப்பகுதியைச் சேர்ந்த பேய். மாமனான திருமால் வெண்ணெய் திருடி தின்பவர். அண்ணன் பிள்ளையாருக்கு தொப்பை வயிறு-சப்பைக் கால். இவையெல்லாம் ஆறுமுகங்கள் கொண்ட முருகனின் பெருமை என்கிறார் புலவர். பக்தி இலக்கியத்தில் கடவுளைப் போற்றலாம், திட்டலாம், காதலிக்கலாம், எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. தமிழை "நீச பாஷை' என்கிற கூட்டம் முதலில் இதையெல்லாம் படித்துவிட்டு அப்புறம் ஆன்மிகம் பேசட்டும்.

உமரி. பொ.கணேசன், மும்பை-37

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க முடியாத வீரர்களுக்கு ஐ.பி.எல். ஆறுதல் பரிசுதானே?

ஆறுதல் பரிசா? ஐ.பி.எல். ஏலத்துக்கு கொட்டப்படும் பணத்தைப் பார்க்கும்போது பம்பர் பரிசாக இருக்கிறது.

Advertisment

வி.கார்மேகம், தேவகோட்டை

"ஐ.சி.யூ.விலிருந்த இந்திய பொருளாதாரத்தை பொதுவார்டுக்கு மாற்றியிருக்கிறது மத்திய அரசின் பட்ஜெட்' என்கிறாரே தமிழிசை சவுந்திரராஜன்?

ஆகமொத்தம் ஜி.எஸ்.டி., டிமானிட்டைசேஷன் போன்ற மோடியின் அதிரடி ஆபரேஷன்களுக்குப் பிறகும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறது இந்தியப் பொருளாதாரம் என்பதை டாக்டர் தமிழிசை ஒப்புக்கொண்டிருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அதேநாளில் பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் 2 எம்.பி. தொகுதி, 1 எம்.எல்.ஏ தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி மொத்தமாக வெற்றி பெற்றுள்ளது. மத்தியிலும்-மாநிலத்திலும் பா.ஜ.க. அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு இது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ராஜஸ்தான் களத்தில் சச்சின் பைலட் என்ற இளந்தலைவரை முன்னிறுத்திய ராகுலின் சாமர்த்தியமும் இதில் அடக்கம். குஜராத்திலும் காங்கிரசை வழிநடத்த இப்படியொரு தலைவர் இருந்திருந்தால், அங்கும் பா.ஜ.க.வின் வெற்றி தடுக்கப்பட்டிருக்கும். தலைமைப் பஞ்சத்தில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், அதன் ஸ்லீப்பர்செல்லாக செயல்படுகிறது மோடி அரசின் நிர்வாகம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு

நாகலாந்து பிரச்சினைக்கு தீர்வு காணும்வரை மாநில சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பது என்று அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்திருப்பது?

மாநில உரிமைக்கான வலிமையான முடிவு. கூட்டாட்சி தத்துவத்தின் தேவையை மத்திய அரசு உணர்கிறதா அல்லது வழக்கம்போல ஒற்றையாட்சியின் எதேச்சதிகார மனப்பான்மையுடன் அரசியல் ஆட்டத்தை நடத்தப்போகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்.

shivaji

மீஞ்சூர் கோதை ஜெயராமன், சென்னை-106

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஜோடியாக வலம்வந்த நடிகைகள் பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா இவர்களில் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் யார்? எந்த ஜோடி பெரும் வெற்றியடைந்தது?

அதிகப் படங்களில் ஜோடி சேர்ந்தவர் பத்மினி. அடுத்த இடம் கே.ஆர்.விஜயாவுக்கு. ஆனாலும் மற்ற நடிகைகள் நடித்த படங்களும் சளைத்தவையல்ல. "நவராத்திரி' உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்தபோதும், தங்கையாக சாவித்திரி கலக்கிய "பாசமலர்' படத்துக்கு இன்றுவரை ஈடு கிடையாது. சரோஜாதேவியுடனான "புதிய பறவை', தேவிகாவுடனான "பலே பாண்டியா', ஜெயலலிதாவுடனான "தெய்வமகன்' இவையெல்லாம் சாம்பிள்கள். "உத்தமபுத்திர'னில் பத்மினியுடன் "முல்லைமலர் மேலே' என டூயட் பாடியபோதும், திரிசூலத்தில் கே.ஆர்.விஜயாவுடன் "மலர்கொடுத்தேன்' என உருகியபோதும் எல்லாப் படங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தவர் நடிகர்திலகம்தான். அவருடன் நடிக்கும்போது, தங்களின் கலைத்திறமை கூடுதலாக வெளிப்படுவதாக சக கலைஞர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

தமிழகத்தின் உயர்நீதிமன்றத்தில், "சொடக்கு மேல சொடக்கு என்ற பாடலின் அர்த்தத்தை உணர, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிடுவது சரியா?

நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் ஒன்றைக் கேட்பது எந்தளவு நியாயமோ, அதே நியாயம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் வழக்காடவும் தீர்ப்புகளைப் பெறவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால், "தமிழை வழக்காடு மொழியாக்கும் திட்டமில்லை' என்று நீதிமன்றத்தை காரணம்காட்டி மத்திய அரசு மறுக்கிற நிலைதான் நீடிக்கிறது.

கே.பாலசுப்ரமணியன், பெங்களூரு-36

ஆந்திர தொழிலதிபரின் இணைப்பில் இருக்கிறாராமே அஞ்சலி?

நீங்கள் கேள்வி கேட்கும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்.