த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்
படம் பார்க்கும் ரசிகர்களை வாக்காளர்களாக மாற்ற முடியும் என ரஜினியும் கமலும் உண்மையாகவே நம்புகிறார்களா?
எல்லா சினிமாக்களும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன்தான் பூஜை போடப்படும். அரசியலுக்கும் அதே நம்பிக்கையுடன் இருவரும் பூஜை போட நினைக்கிறார்கள். ஆன்மிக அரசியலுக்கான உறுப்பினர் சேர்க்கையும், "நாளை நமதே' பயணத்தில் நடக்கப்போகும் கலந்துரையாடலும் கள அனுபவத்தை இருவருக்கும் காட்டும்.
உமரி பொ.கணேசன், மும்பை-37
தேவதாசி, தாசி, வேசி மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?
பாலியல் தொழிலில் ஈடுபடுபவரை மிகவும் கொச்சையாக "வேசி' என்கிறார்கள். பாலியல் தேவைக்காக ஓர் ஆண் தன் வசமாக்கிக் கொள்ளும் பெண்ணை "தாசி' என்கிறார்கள். தாசன்-தாசி என்றால் "அடிமை' என்று அர்த்தம். "தேவதாசி' என்றால் கடவுளுக்கு அடிமையாக கோவில் பணிகள் செய்ய வேண்டும் என்ற பெயரில், காலப்போக்கில் கோவில் நிர்வாகத்தை கையில் வைத்திருப்பவர்களின் பாலியல் தேவைக்கான அடிமைகளாக்கப்பட்டவர்கள். கடவுளின் பெயரைச் சொல்லி கையாளப்பட்ட கயமைத்தனம். மூன்று நிலையிலும் பாலியல் சுரண்டலுக்குள்ளானவர்கள் பெண்கள்.
ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
"பிற மாநிலங்களைப்போல தமிழகம் விரைவில் காவிமயமாகும்' எனக் கூறுகிறாரே தமிழிசை?
இந்திய தேசியக்கொடியில் காவி -வெள்ளை -பச்சை மூன்றும் சமஅளவில் உள்ளன. அதில் காவி நிறத்தை மட்டும் பிற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் பூசுவோம் என்பதன் மூலம் தமிழிசை தன்னை "ஆன்ட்டி இந்தியனாக' வெளிப்படுத்துகிறார்.
ஜி.மகாலிங்கம், காவல்காரப்பாளையம்
ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தில் பெண்களின் வயது வரம்பு 18-லிருந்து 40-க்குள் இருக்கவேண்டும் என்பது நியாயமா?
குறைந்தபட்சம் 18 என்பது அரசு விதிப்படியானது. அதிகபட்சம் 40 என்பது அரசு காட்டும் அக்கறை. ஆனால், இந்த நியாயங்களெல்லாம் இன்னும் அறிவிப்பு நிலையிலேயே இருக்கும் பெயரளவிலான திட்டத்திற்காக வகுக்கப்பட்டிருப்பதுதான் அநியாயம்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
கட்சிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஆர்வமும் அர்ப்பணிப்பும் மிக்க தொண்டர்கள் தமிழகத்தில் இன்று எந்தக் கட்சியில் அதிகமாக உள்ளனர்?
பல கட்சிகளிலும் இருக்கிறார்கள். கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அர்ப்பணிப்புமிக்க தி.மு.க.வினர் முதுமையில் தள்ளாடுகிறார்கள். ம.தி.மு.க..வில் உள்ள கொள்கை உணர்வுமிக்க அர்ப்பணிப்பாளர்கள் தலைநரைத்துப் போயிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கான தகுதியே கொள்கையும் அர்ப்பணிப்பும்தான். அவர்கள் கூட்டணி தடுமாற்றத்தில் தவிக்கிறார்கள். பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க. என பலவற்றிலும் உள்ள அர்ப்பணிப்பாளர்கள் இதேபோக்கு எத்தனை காலத்திற்கு என யோசிக்கிறார்கள். இன்னும் வெற்றியின் ருசியை உணராத நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட புதிய கட்சிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் அர்ப்பணிப்புடன் களமாடுகிறார்கள். நல்லவேளை, நீங்கள் தொண்டர்களைப் பற்றி மட்டும் கேட்டீர்கள். தலைவர்களைப் பற்றிக் கேட்கவில்லை.
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி, பொள்ளாச்சி
அரியானாவில் உள்ள பள்ளியின் பெண் முதல்வரை +2 மாணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூரம்?
சில ஆண்டுகளுக்குமுன் சென்னையில் ஒரு மாணவன், தனது வகுப்பில் பெண் ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்றான். அது அரியானாவில் துப்பாக்கியாக வளர்ந்துள்ளது. கல்வித் திட்டங்கள் தொழிற்கருவிகளைப் பழக்குவதற்குப் பதில், கொலைக்கருவிகளைப் பழக்குகின்றனவோ!
ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்
"கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என சமாளிப்பது எப்படி?
மோடி அரசின் கடைசி பட்ஜெட்டைப் படித்துப் பாருங்கள்.
ஆன்மிக அரசியல் அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72 ஆன்மிகவாதிகள் அரசியல் பேசுவது, அரசியல்வாதிகள் ஆன்மிகம் பேசுவது இந்த இரண்டில் எது ஆன்மிக அரசியல்? இரண்டுமே ஆன்மிக அரசியல்தான். ஆன்மிகம் என்பது அனைத்துத் தரப்பினரையும் அன்பு நெறியில் ஒருங்கிணைப்பது என்கிற நோக்கமாகவும், அரசியல் என்பது அனைத்து மக்களின் நலன் காப்பதாகவும் இருக்கும்பட்சத்தில் இரண்டுமே அவசியமானவைதான். 1971ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலத்தில் ராமர் படத்தை செருப்பால் அடித்துவிட்டார்கள் என்ற சர்ச்சை பூதாகரமாகி, ஆளும் தி.மு.க.வுக்கு நெருக்கடியை உண்டாக்கியது. ராஜாஜியும் காமராஜரும் இணைந்திருந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக இந்தப் பிரச்சினையை அரசியலாக்கும் முயற்சிகள் நடந்தன. அரசியல்வாதிகள் பலரும் இதை ஆன்மிக விவகாரமாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஆன்மிகவாதியான குன்றக்குடி அடிகளார் இதன் அரசியல் நோக்கத்தை உணர்ந்து ஒரு கருத்தை வெளியிட்டார். எது ஆஸ்திகம், எது நாஸ்திகம், எது மக்களுக்கு வேண்டும் என்ற அவரது அறிக்கையை ஆதரிப்பதுபோல, இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு தி.மு.க.வை 184 தொகுதிகளில் வெற்றி பெற வைத்தார்கள் மக்கள். (படம்- குன்றக்குடி அடிகளார் வெளியிட்ட அறிக்கை) |