மந்திரி தரப்பு கேட்ட 4000 கிலோ கறி!

kadampur-rajuசெய்தித்துறை அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜு தன் மகள் திருமணத்தை 19ம் தேதி திருப்பதியிலும், ஆளும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் வண்ணம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை 21-ம் தேதியன்றும் வைத்தவர், உள்ளூர் மக்களும் தென் மாவட்டத்திலுள்ள அவரது நண்பர்களும் கலந்துகொள்ளும் விதமாக கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் 25-ம் தேதியன்று நடத்துகிறார்.

""கோவில்பட்டி வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரும் ஆளுக்கொரு பங்களிப்பாக சிலவற்றை செய்கிறார்கள். உங்களின் பங்களிப்பாக 4000 கிலோ ஆட்டுக்கறி வேண்டுமென"" அமைச்சர் தரப்பிலிருந்து உள்ளூர் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் தரப்பிற்கு சென்றிருக்கின்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த தீப்பெட்டித் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுப் போராட்டத்தில் மைக் பிடித்த மா.செ.அழகு முத்துப் பாண்டியன்., ""ஒன்றாம் தேதியிலிருந்து கூலி உயர்வுக் கேட்டு வேலைக்குப் போகாமல் போராடிக்கிட்டு வர்றோம். இந்த நேரத்தில் மந்திரி மகள் திருமண வரவேற்பிற்கு 4000 கிலோ ஆட்டுக்கறி வேணுமாம். இப்படி இருக்கும்போது அப்புறம் எப்படி நமக்கு கூலி உயர்வு கிடைக்கும்'' என போட்டுத் தாக்கினார்.

-நாகேந்திரன்

Advertisment

அ.தி.மு.க. + தி.மு.க. கூட்டுக்கொள்ளை!

இந்த ஆட்சி எப்போது தொலையும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போதைக்குத் தொலையக்கூடாது என்ற நினைப்பில் இருப்பவர்கள் அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல, தி.மு.க.வினரும்தான். இதற்கு உதாரண ஸ்பாட்டாக விளங்குவது கரூர் மாவட்டம். இம்மாவட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இவற்றில் 39 கடைகளுக்கு மட்டும் பார் லைசென்ஸ் உண்டு, மீதி 49 கடைகளுக்கும் லைசென்சே இல்லாமல், ஆளும்கட்சிப் புள்ளிகளுடன் தி.மு.க.வினரும் கூட்டு சேர்ந்து நடத்திவருகிறார்கள். இந்த இல்லீகல் பார்களில் இவர்கள் வைப்பதுதான் விலை. மாஜி செந்தில்பாலாஜி கோஷ்டியைச் சமாளிப்பதற்காகவே, கரூர் நகர தி.மு.க. புள்ளி ஒருவருக்கு கரூர் அமைச்சர் விஜயபாஸ்கரே சில பார்களை எடுத்துக் கொடுத்திருக்கிறாராம். அதேபோல் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் இல்லீகலாக இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இதிலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கூட்டணி என்பதால், வழக்கம்போல் போலீசும் கண்டுகொள்வதில்லை.

Advertisment

-ஜெ.டி.ஆர்.

கொம்பனின் ஆவி!

koimban

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், வாடிவாசலில் நின்று விளையாடி... எவராலும் பிடிக்க முடியாமல் துணைமுதலமைச்சர் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடியிடம் முதல்பரிசை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பெற்றுக்கொடுத்த கொம்பன் காளையை வியந்து விழைந்து எழுதியிருந்தோம்.

யார் கண் பட்டதோ...? விராலிமலைத் தொகுதியில், தென்னலூரில் 10-2-18 அன்று மஞ்சுவிரட்டு... ""அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் வருகிறான் அடக்கிப் பார்...'' அறிவிப்போடு புயல் சீற்றத்தோடு, தொழுவைவிட்டு வெளியே பாய்ந்து வருகிறது கொம்பன்.

வலது பக்கம், பிடிக்கத் தயாராகயிருந்த வீரர்களை குறிபார்த்து ஆவேசமாகத் தலை குனிந்தது கொம்பன். அவர்கள் சட்டென நகர்ந்தனர். அந்த இடத்தில் ஆறடி உயரத்தில் கல்லுக்கால், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு வேலிக்காக ஊன்றப்பட்டிருந்தது. அந்தத் தூண்மீது கொம்பனின் நெற்றிப்பொட்டு மடாரென மோதியது... இடதுபக்கம் சரிந்தது கொம்பன். அந்த இடத்திலேயே கொம்பனின் ஆவி பிரிந்துவிட்டது. அத்தனைபேரும் குமுறிக் குமுறி அழுதனர்.

-செம்பருத்தி

மிரட்டல் அதிகாரி!

சென்னை பெருநகர மாநகராட்சியின் 6-ஆவது மண்டல அதிகாரியாக இருப்பவர் அருணா. தனக்குக்கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் ‘""இன்னும் ஒரு வருடத்தில் ஐ.ஏ.எஸ்.ஆகிவிடுவேன், அதன் பின் என்னோட ரேஞ்சே வேற. இப்பவே ஒழுங்கா நடந்துக்கிட்டா உங்களுக்கு நல்லது''’என்ற மிரட்டல் தொனியிலேயே பேசி வருகிறாராம். எதிர்க்கட்சித்தலைவரான மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வான தாயகம் கவியின் திரு.வி.க.நகர் தொகுதியும் அருணாவின் 6-ஆவது மண்டலத்திற்குள் வருகிறது. இந்தத் தொகுதி மக்களின் குறைகளை அருணாவின் கவனத்திற்கு தி.மு.க.வினர் கொண்டு சென்றால், அலட்சியமான பதிலே வருகிறதாம். மேலும் தனது அலுவலகப் பெண் ஊழியர்களை இரவு 10 மணிவரைக்கும் வேலை வாங்குகிறாராம். இதையெல்லாம் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் புகாராக கொடுத்தும் நோ ஆக்ஷனாம்.

-சஞ்சய்

சம்பந்தி துதி!

admk-meet

ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் 11-2-18 காலையில் பரிமள மஹாலில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் கே.சி.கருப்பணனும் கலந்துகொண்டனர்.

செங்கோட்டையன் வழக்கம்போல தனது கல்வித்துறை பற்றிப் பேசி அமர்ந்தார். சுற்றுச்சூழல் கருப்பணனோ, ""இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியைத் தருபவர் அண்ணன் எடப்பாடியார்தான். பத்திரிகையாளர் இதை பதிவு செய்வதில்லை. உண்மையைச் சொல்லுகிறேன்.... அம்மா ஜெ.வின் ஆட்சியைவிட சிறந்த ஆட்சி அண்ணன் எடப்பாடியார் ஆட்சி'' பேசி முடிக்குமுன்னே, கூட்டத்திலிருந்த பல தொண்டர்கள் ஆவேசத்தோடு எழுந்தனர்.

""எடப்பாடி உங்கள் சம்பந்தி. அதற்காக அம்மாவை மட்டம் தட்டுவீங்களா?... உட்காருங்க'' ஆவேசமாக எதிர்ப்புக்குரல் கொடுத்தார்கள். அதன்பிறகே எடப்பாடி துதியை மட்டுப்படுத்தினார் கருப்பணன்.

-ஜீவாதங்கவேல்

கலெக்ஷன் காவலர்!

கடலூர் மாவட்டத்தின் மேற்கு கடைக்கோடி கிராமம், சிறுபாக்கம். இதன் காவல்நிலைய காவலர் அஸ்வின் டேவிட், தனது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, தனது நண்பர்களுக்கும் போலீஸ் தோரணையைச் சொல்லிக்கொடுத்து வாரம் ஒருநாள் வாகன சோதனையில் ஈடுபட்டு, பணம், செல்போன், கடிகாரம் என வேட்டையாடுவாராம்.

கடந்த வாரம் இரவு 11 மணிக்கு மங்களூர்-ஆவட்டி சாலையில் வேட்டையில் ஈடுபட்டார். அன்று அஸ்வின் கும்பலிடம் பணத்தையும் செல்போனையும் பறிகொடுத்தவர்களில் ஒருவர், மங்களூர் காவல்நிலைய காவலர் பாலசண்முகம். அவர், எஸ்.பி.விஜயகுமாரின் கவனத்திற்குக் கொண்டுசென்றார். அவர் சிறுபாக்கம் காவலர் அஸ்வினை சஸ்பெண்ட் மட்டும் செய்துள்ளார். அஸ்வினையோ, அவர் நண்பர்களையோ கைது செய்யவில்லை.

-கீரன்