திட்டமிட்டு தூண்டப்பட்ட ஆண்டாள் சர்ச்சையால், கவிஞர் வைரமுத்து இப்போதைக்கு எழமாட்டார் என இந்துத்வா கும்பல் கனவு கண்டுகொண்டிருந்த நேரத்தில், "தமிழாற்றுப்படை'’வரிசையில் மறைமலையடிகள் பற்றி பிப்ரவரி 13-ந் தேதி கட்டுரையாற்றப் போவதாக அறிவித்து, அவர்களின் கனவுகளை இலக்கிய அதிர்வேட்டால் தகர்த்தெறிந்தார்.
சென்னை -காமராசர் அரங்கில் விழா ஏற்பாடுகள் விறுவிறுவென நடக்க, அசம்பாவிதங்கள் அரங்கேறுமோ என்ற பயத்தில், காவல்துறையைக் கொண்டுவந்து அதிகமாய்க் குவித்தது அரசு.
6 மணிக்குதான் விழா என்றபோதும் 3 மணியில் இருந்தே அரங்கில் கூட்டம் திரள ஆரம்பித்தது. பாரதிராஜா, சீமான், அறிவுமதி, கௌதமன், மன்சூர் அலிகான், நடிகை கஸ்தூரி, சினேகன் என பல பிரபலங்களும் முன்னதாகவே வந்துசேர... எழுச்சியோடு திரண்ட இளைஞர் படையால் அரங்கமே திணறியது.
நீட் தேர்வு விவகாரத்தில் அனிதா மரணத்துக்கு நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்ததோடு, ஆள்வோரைக் கண்டித்து தன் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா, விழாவை கணீர்க் குரலில் தொகுத்து வழங்கினார்.
தமிழறிஞர் மறைமலையடிகள் படம் திறக்கப்பட, தமிழ் உணர்வாளர்கள் பலரும் மலர் தூவி வணங்கினர்.
விழா தலைமையேற்ற ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து, ""தமிழால் முடியாதது எதுவும் இல்லை. நான் தமிழிலேயே சட்டப் படிப்பை முடித்து, நீதிபதியாகவும் ஆனவன். நான் எனது தீர்ப்புகளில் வள்ளுவரின் குறளையும், நாலடியார் போன்ற நீதி இலக்கியங்களையும் மேற்கோள் காட்டி, தீர்ப்பளித்திருக்கிறேன். நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்கிற மகத்தான தீர்ப்பை வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அப்படியொரு தீர்ப்புவரும் நாள் தூரத்தில் இல்லை''’என்றார் அழுத்தமாக.
முன்னிலை வகித்த முன்னாள் துணைவேந்தர் திருவாசகமோ, ""மறைமலையடிகள் பிறந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரால், இங்கே தமிழில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. நானே இங்கிருக்கும் பல்வேறு கட்டடங்களுக்கும் வளாகங்களுக்கும் தமிழ்ப்பெயர் சூட்டியிருக்கிறேன். இதற்கு வித்தாக இருந்தவர் மறைமலையடிகள்''’என்று சான்றுகளோடு சொல்லி கைத்தட்டல் பெற்றார்.
தனக்கேயுரிய தமிழ்நடையில் பேசத் தொடங்கிய வைரமுத்து, ""சுத்தம் என்றால் என்ன என்று கேட்டார்கள். "கண்ணுக்குத் தெரியாத இடத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சுத்தம்' என்று சொன்னேன். "பொறாமை என்றால் என்ன' என்று கேட்டார்கள். "அது, முடியாதவர்களின் பாராட்டு' என்று சொன்னேன். "ஒழுக்கம் என்றால் என்ன' என்று கேட்டார்கள். "சாட்சி இல்லாத இடத்திலும் நேர்மையாய் இருப்பது' என்று சொன்னேன். "வீரம் என்றால் என்ன' என்று கேட்டார்கள். "வலிமையுடையவன் பொறுமையாய் இருப்பதே வீரம்' என்று சொன்னேன். தாக்குவதற்கு வீரம் வேண்டாம். தாங்குவதற்குதான் வீரம் வேண்டும். தாங்கப் பழகுவோம் தமிழர்களே. அப்போதுதான் நம்மை வரலாறு தாங்கும்''’என்று ஆண்டாள் சர்ச்சையை எதிர்கொண்டு மீண்டதைக் குறிப்பிட்டு ஆய்வுக் கட்டுரையைப் பகிர்ந்தார்.
""மறைமலையடிகளின் வரவு, தமிழ் நெடுவெளியில் நிகழ்ந்த பெருநிகழ்வு. அவரை "ஒரு நூற்றாண்டின் வெடிப்பு' என்று சொல்லலாம். 1800 ஆண்டுகளாய் தமிழ்மொழியில் அப்பிக்கிடந்த அந்நியப்பாசிகளை, முற்றும் களைய வந்த மொழிச்சலவையாளர் அவர். "மீண்டும் நாம் இயற்கைக்குத் திரும்பவேண்டும்' என்று சுற்றுச்சூழல் சொல்கிறது. "நாம் தாய்மொழிக் கல்விக்கே திரும்பவேண்டும்' என்று உலகக்கல்விக் கொள்கையே உரத்துச் சொல்கிறது''’என்றெல்லாம் அழுத்தம் கொடுத்துச் சொன்னார். தமிழ் வழக்காடு மொழி, தேர்தல் அறிக்கைகளில் தமிழ் வளர்ச்சி என ஆக்கப்பூர்வமான கருத்துகள் அவரது தித்திப்புத் தமிழில் வெளிப்பட்டன.
கலகக்காரர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, தனக்கு பக்கபலமாகத் திரண்ட தமிழ் மக்களுக்கு தாய்மொழி ஆயுதத்தை கூர்தீட்டித் தந்திருக்கிறார் கவிஞர்.
-தமிழ்நாடன்