உனக்காகவா... இல்லை... எனக்காகவா?
தென்காசி புதிய பேருந்துநிலையத்தில், பேவர்பிளாக் பதிப்பதற்கான ஒரு கோடி ரூபாய்க்கான நகராட்சிப் பணி. நகராட்சி ஆணையர் ஏசுராசனும் தொகுதி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியனும், காதும் காதும் வைத்தாற்போல ஆலங்குளம் காண்ட்ராக்டர் மாரித்துரைக்கு ஒதுக்கிவிட்டார்கள்.
தகவலறிந்த தென்காசி நகர காண்ட்ராக்டர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியமும் இன்னும் ஐவரும் டெண்டருக்கு விண்ணப்பித்தார்கள்.
எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன் சும்மா இருப்பாரா? ஆணையருக்குப் போன் போட்டார். ""தென்காசி காண்ட்ராக்டர்களை எப்படியாவது வாபஸ் பெற வையுங்கள். ஒருகோடி ரூபாய் காண்ட்ராக்ட் ஆலங்குளம் மாரித்துரைக்குப் போயாகணும்'' கட்டாயப்படுத்தினார்.
ஆணையர் அனுப்பிய ஆட்கள் பாலசுப்பிரமணியத்திடம் சென்றார்கள். அவரோ, ""உள்ளூர் காண்ட்ராக்டர்கள் நாங்க இத்தனை பேர் இங்கிருக்கிறோம். நீங்க ஆலங்குளத்தாருக்கு கொடுப்பீங்களா? கமிஷன் மட்டும்தான்னா... அப்புறம் நாங்க பழைய பல விஷயங்களை முச்சந்தியில் போட்டு உடைப்போம்'' என எச்சரித்தார். வந்தவர்கள் வருத்தம் தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
-பரமசிவன்
அகர முதல எழுத்தெல்லாம்...!
வேலூர் திருப்பத்தூரில் இயங்கும் இராமகிருஷ்ணா பள்ளித் தலைமை ஆசிரியர் பாபுவை, அதே பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவன் அரிகரன் எனும் மாணவன் கத்தியால் குத்திக்கீறி, குடல் வெளியே வருமளவுக்கு பெரும் காயத்தை உண்டாக்கிவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்திருக்கிறான்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தலைமையாசிரியர் பாபு, ""கிளாஸ் நேரத்துல ஏண்டா வராண்டவுல நிக்கிறேன்னு கேட்டேன். படக்குனு பேனாகத்தியை எடுத்து வயித்தை கிழித்துவிட்டான்'' என்று கூறினார்.
சரணடைந்த மாணவன் அரிகரனோ, ""வேதியியல் டியூஷன் எடுக்கிறாரு சார். என்னையும் சேரச் சொல்லி ரொம்ப டார்ச்சர் செஞ்சாரு. நான் போகலை. அதையே காரணம் காட்டி தினமும் கிளாஸ்ல கேவலமா திட்டினார். அந்தக் கோபத்துலதான் குத்தினேன்'' என காரணம் கூறியுள்ளான். மாணவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இதே தலைமையாசிரியரை இதே டியூஷன் பிரச்சினையால் கடந்த ஆண்டு ஒரு மாணவன் கடுமையாக அடித்திருக்கிறான். ஆனால் அது புகாராகவில்லை. ஆசிரியர்கள் பஞ்சாயத்து செய்தார்களாம்.
-து.ராஜா
உன் சமையலறையில்...!
விழுப்புரம் மாவட்ட ரேஷன் கடைகளில் பணியாளர்களுக்கான 252 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. நேர்காணல்கள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. துணைப்பதிவாளர் தலைமையிலான குழு, தினமும் ஆயிரம் பேரை சந்திக்கிறது.
6 இடம் மாற்றுத் திறனாளிகளுக்கு, 36 இடம் தலித்துகளுக்கு, 40 இடம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கென ஒதுக்கியாக வேண்டும். கமிஷன் கறக்க நினைப்பவர்களுக்கு இங்கேதான் சிக்கல்.
எத்தனைபேரிடம்தான் அரிசி, சீனி, பாமாயில், பருப்பென கேள்வி கேட்பது? கேட்டுக் கேட்டு அலுப்பு ஏற்பட்டதோ என்னவோ... நேர்காணலுக்கான பெண்களிடம் "பாமாயிலில் மெதுவடை சுட்டால் சுவையாக இருக்குமா? நூறு வடைக்கு எவ்வளவு உளுந்து தேவை?' என்று கேள்வி கேட்டுவிட்டார்கள். ஒரு பெண் ஆத்திரத்தில் ஏதோ சொல்ல... பிரச்சினையாகிவிட்டது. அவசர அவசரமாக நேர்காணல் டீமை மாற்றியமைத்தார்கள் அதிகாரிகள்.
-எஸ்.பி.சேகர்
பூவா, தலையா போட்டா தெரியும்...!
""இன்னும் ஒரு மாதத்தில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருக்கும்'' என்று 2-2-18 அன்று புதுச்சேரி பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர் சுவாமிநாதன், அதிரடி வெடியைக் கொளுத்திப் போட்டார்.
இதற்கு முதல்நாள்தான் (1-2-18 அன்று) ஆளுநர் கிரண்பேடியை எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ரெங்கசாமியும் பொதுச்செயலாளர் பாலனும், ஜெயபாலும் சந்தித்தனர். அதுமட்டுமின்றி, தான் பா.ஜ.க. ஆதரவாளன் என்பதைக் காட்டுவதற்காக பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றுப் பேசினார் ரெங்கசாமி.
இவையெல்லாம் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை பாதித்ததோ என்னவோ? குடியரசு தினத்தன்று ஆளுநர் கிரண்பேடி கொடுத்த தேநீர் விருந்தில் கலந்துகொண்ட முதலமைச்சர், மறுநாள் மாலையும் சென்று சந்தித்தார். அரசின் செயல்பாடுகள், அதிகாரிகள் இடமாற்றம் என ஆலோசனை கேட்டிருக்கிறார். அடுத்தநாள், சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, தன் மகனுடன் சேர்ந்து சென்று ஆளுநரை சந்தித்தார். இவர்தான் ஆளுநருடன் அடிக்கடி மோதுபவர்.
"நாராயணசாமி ஏமாறமாட்டார்' என்பது காங்கிரசார் நம்பிக்கை.
-சுந்தரபாண்டியன்