ஜெ. சிலையும் சச்சரவும்!
அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர் ஆகியோரால் திறக்கப்பட்ட ஜெ. சிலை குறித்து நாலா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. சிலைகளால், ஆளும் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட 7 அடி உயரத்திலான எம்.ஜி.ஆர்., ஜெ. சிலைகளைத் திறக்க அனுமதி கிடைக்காததால், மூடியே வைத்திருந்தனர். பிப்.24-ஆம் ஜெ. பிறந்த நாளன்று அந்த சிலைகளை ஆளும் கட்சியினர் திறக்கும் ஐடியாவைத் தெரிந்த போலீசார், 23-ஆம் தேதியே சிலைகளை அகற்ற ஸ்பாட்டுக்கு வந்தனர். தகவல் கேள்விப்பட்ட தெற்கு மா.செ.ராஜன், சாலை மறியலில் குதித்து போலீஸ் தடையையும் மீறி சிலைகளைத் திறந்து வைத்தார். இதைக் கேள்விப்பட்ட காங்கிரசார், சேத்பட் தாலுகா தேவிகாபுரத்தில் காமராஜர் சிலையை அனுமதி இல்லாமல் திறக்க, போலீஸ் வந்து சிலையை மூடியது. இந்த இரண்டு சம்பவங்களையும் நக்கீரன் இணையத்தில் எழுதியிருந்தோம். இந்த நிலையில்தான், கடந்த 27-ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், 300-க்கும் மேற்பட்ட போலீசார், திருவண்ணாமலை நகரில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆ.ர்.-ஜெ. சிலைகளையும் ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்த ஜெ. சிலையையும் அப்புறப்படுத்தும் வேலைகளை ஆரம்பித்தனர். இதைத் தடுக்கும் விதமாக கொந்தளிப்புடன் வந்த ஆளும் கட்சியினர், கைது செய்வோம் என போலீஸ் சொன்னதும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர்.
-ராஜா