திருநெல்வேலியில் ஐந்தாயிரம் சைவக் குடும்பங்கள் மதம் மாறப் போவதாக வெளியாகி இருக்கிற செய்தி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே சைவ சமயம் புழக்கத்தில் இருந்தது. அந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களையும் பிரிட்டிஷ்காரர்கள் உதவியோடு இந்து மதத்தினராக இணைத்து சட்டம் இயற்றப்பட்டு விட்டது. இந்த முடிவை எதிர்த்து காலந்தோறும் கடும் விமர்சனங்கள் தொடர்கின்றன.
பார்ப்பனர் அல்லாதார் என்ற வார்த்தைப் பிரயோகம் இந்த இந்துமத எதிர்ப்பாளர்களால்தான் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து மதத்தில் தங்களை இணைத்தது செல்லாது என்றும், தங்களை "சிவமதம்' என்ற பிரிவில் சேர்க்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் சைவ சபை தொடர்ந்து கோரி வருகிறது.
ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை சாதியினரான "லிங்காயத்துகள்' தங்களை இந்து மதத்திலிருந்து விலக்கி லிங்காயத் மதத்தினராக மாற்றும்படி கோரி தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் லிங்கத்தை மட்டுமே வணங்குகிறார்கள். "லிங்கம் உருவமில்லாத தெய்வம். நாங்கள் எந்தவகையிலும் இந்துக்கள் இல்லை' என்று லிங்காயத் அறிஞர் பட்டதேவரு கூறியுள்ளார்.
இந்நிலையில்தான், பாளையங்கோட்டை சைவ சபையின் சார்பில் சைவ சமய மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்றுள்ளன.
"சைவ சமயத்தை தனி சமயமாக அறிவிக்க வேண்டும். சான்றிதழ்களில் சமயம் -சாதி என்ற இடத்தில், பழங்கால பத்திரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் போல "சிவமதம்' என்று பதிவு செய்ய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்' என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்திலேயே இந்து மதத்தில் பார்ப்பனர்கள் கடைப்பிடித்த வேதாந்தத்தையும் வர்ணாசிரமத்தையும் நிராகரிக்கும் நோக்கத்தில் சைவ சபைகளை நிறுவி சைவ சமயத்தை காப்பாற்றப் போராடினார்கள். அதன் வழியில் நடந்த சைவ சபை மாநாட்டின் சிவமதம் உள்ளிட்ட தீர்மானங்கள் புதிய கவனம் பெற்றுள்ளன.
-ஆதனூர்சோழன்