கச்சத்தீவு விவகாரத்தில், அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆதரவினைக் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள். “"கச்சத்தீவை முழுவதுமாக தம் கக்கத்தில் இடுக்கிக்கொள்ளப் பார்க்கிறது இலங்கை. இந்தியா- இலங்கையிடையேயான ஒப்பந்த ஷரத்துகள் எல்லாம் வெறும் ஏட்டளவிலே மிஞ்சப்போகிறது'’’ என்கின்றனர் மீனவர்கள் வருத்தத்துடன்.
மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நலசங்கத்தின் தலைவர் ராயப்பன், ""ராமநாதபுரம் அரசருக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவை, 1974-ஆம் ஆண்டு 7 ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தத்தின்மூலம் இலங்கைக்குத் தாரைவார்த்தது இந்தியா. கச்சத்தீவினைச் சுற்றியுள்ள பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடி உரிமை, கச்சத்தீவில் இறங்கி வலையுலர்த்தும் உரிமை, அரசு அனுமதியோ ஆவணமோ இன்றி கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்துக்கு மீனவர்கள் வழிபட வந்துசெல்லும் உரிமை போன்றவை தமிழக மீனவர்களின் நலத்தை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட ஷரத்துகள். ஆனால் நாளடைவில் அப்பகுதியில் மீன்பிடிக்க வரும் மீனவர்களையும் படகுகளையும் சிறைப்படுத்தியது இலங்கை அரசு. மத்திய-மாநில அரசுகள் கண்டனம் தெரிவிப்பதே போதுமென்ற மனநிலையில் இருந்ததால், அந்த ஷரத்துகள் காலாவதியாகிப்போயின. இப்போது கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கும் எங்களை வரவிடாமல் தடுத்து, மிச்சமுள்ள அந்த ஒற்றை ஷரத்தையும் காலாவதியாக்கப் பார்க்கின்றது''’எனப் பொங்கியெழுகிறார்.
1905-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயம். இயற்கைச் சீற்றத்திலிருந்து காப்பாற்றவும், தங்களது செல்வநிலை மேலோங்கவும் இந்திய- இலங்கை மீனவர்கள் அந்தோணியாரை வேண்டிக்கொள்வது அதிகரித்ததால், புனித அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கும் மவுசு கூடியது. இயேசு கிறிஸ்து இறப்பினையொட்டிய நாற்பது நாட்களில் நெடுந்தீவு பங்கு ஆலயத் தந்தையும் தங்கச்சிமட ஆலயத் தந்தையும் இணைந்து திருநாளினைக் குறித்து, இருநாட்டு மீனவர்களும் இணைந்து திருவிழாவைக் கொண்டாடி வந்துள்ளனர்.
ஓலைக்குடா பகுதியினைச் சேர்ந்த தமிழ்நாடு மீனவர் பேரவை ஜெரோம் சேகர், ""1983 இலங்கை இனக்கலவரத்தால் சிலகாலம் நிறுத்தப்பட்ட இத்திருவிழா, 2003 முதல் திரும்ப கொண்டாடப்பட்டது. எப்பொழுதும்போல் தமிழக பாரம்பரிய மீனவர்கள் 50 நாட்டுப்படகுகளில் தன்னிச்சையாகச் சென்று வழிபட்டு வந்தனர். 2008 உள்நாட்டுப் போரால் 2011 வரை விழா நடைபெறவில்லை. 2011-ல் அமைதி திரும்பியதும் இலங்கை அரசே விழாவை நடத்தியது. இதுவரை இரு நாட்டு பங்குத் தந்தைகளும் நடத்திய திருவிழாவினை, இப்பொழுது இலங்கை அரசே நடத்தி தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்கிறது.
மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகில் வந்து கலந்துகொண்ட நிலையில், 2014 முதல் பாரம்பரிய நாட்டுப்படகுகள் பாதுகாப்பற்றதென கூறி தடைவிதித்து, விசைப்படகில் பணம்கொடுத்துதான் வரவேண்டிய நிலையை ஏற்படுத்திவருகிறது. தவிரவும் கடந்த முறை 4,500 நபர்களுக்கும், 150 படகுகளுக்கும் அனுமதி கொடுத்த இலங்கை, இம்முறை வெறும் 65 படகுகளுக்கு மட்டுமே அனுமதிகொடுத்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், நாளடைவில் விசைப்படகில் சுற்றுலாவுக்கு விசா கொடுத்து அழைத்துச்செல்வதுபோல் கெடுபிடி காட்டும். இது முழுக்க முழுக்க 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீர்த்துப்போகச் செய்யும்''’என்கிறார்.
இந்நிலையில்தான், வரும் பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் நடக்கவிருக்கும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு வழக்கம்போல நாட்டுப்படகில் செல்ல அனுமதிக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியர், மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர், மாவட்டக் கண்காணிப்பாளர், இராமேஸ்வரம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை காலாவதியாக்க முயற்சிப்பதை சுட்டிக்காட்டவும் முயன்றனர் போராட்டக்காரர்கள். அதிகாரிகள் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காததால், தமிழக அரசியல் கட்சித்தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு அதிகாரிகள், நாட்டுப் படகினை ஆய்வுசெய்து "இந்தப் படகு கடலில் பாதுகாப்பாக பயணிக்கத் தகுந்தது' என பதிவெண் அளித்துள்ளனர். நாட்டுப் படகுகளுக்கும் படகில் பயணிப்பவர்களுக்கும் காப்பீடு இருக்கிறது. பிறகெப்படி நாட்டுப்படகில் செல்வது பாதுகாப்பற்றது என இலங்கை கூறமுடியும்? படகில் பயணிப்பவர்கள் மிதவைச்சட்டை அணிந்து வருவர். இந்திய எல்லைவரை இந்திய கடலோர காவல்படையும், இலங்கை எல்லையிலிருந்து இலங்கை கப்பல் படையும் உடன்வரும். விபத்து நடக்கவே வாய்ப்பில்லாத நிலையில் நாட்டுப்படகில் பயணிப்பது பாதுகாப்பற்றது என இலங்கை அரசு அடம்பிடிப்பது சிறுபிள்ளைத்தனம்.
எனவே தமிழக அரசு கச்சத்தீவு உரிமையை நிலைநாட்டும் விதத்தில், பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல இந்த ஆண்டும் அனுமதிக்கவேண்டும். இல்லையெனில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து கச்சத்தீவு புறப்படுவோம்''’ என்கிறார் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சின்னத் தம்பி.
"கச்சத்தீவை மீட்போம்' என்பது அறிக்கை அரசியலாக சுருங்கிவிட்டது. அதில் தமிழர்களுக்குள்ள உரிமையையாவது விட்டுத்தராமலிருப்பதற்கான நடவடிக்கைகளிலாவது அரசு கவனம் செலுத்தவேண்டும். ஓகி புயலில் உறங்கிய அரசு, இதிலாவது விழித்துக்கொள்ளுமா பார்க்கலாம்.
-நாகேந்திரன்