pongalinlondon

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதன்முதலாகத் தமிழர் திருநாளான பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அங்குள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புவாய்ந்த ஜூபி அரங்கில், இந்தப் பொங்கல் விழாவை அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

Advertisment

இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என தமிழ்க் குடும்பத்தினர் இதில் உற்சாகமாகப் பங்கேற்க, அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், மத குருமார்கள், அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

pongalin-london

Advertisment

அந்த ஜூபி அரங்கமே தமிழ்க் கலாச்சாரத்தை உணர்த்தும்விதமாகக் கலை நேர்த்தியுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அக வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்ப் பாடசாலைச் சிறுவர்களின் பொங்கல் விழா உரை ஆகியவற்றுடன் இனிதாய் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.

பின்னர் உலக நாடுகளில் பொங்கல் விழா எப்படியெல்லாம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது என்பதை விளக்கும் காணொளி திரையிடப்பட்டது. இது அங்கிருந்த தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

pongal-londonpongal-london

பிரிட்டன் பிரதமர் தெரசா மேவின் வாழ்த்துச் செய்தி விழாவில் படிக்கப்பட்டது. அதில் அவர்...“""பிரிட்டனில் இருக்கும் தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றனர்''’’ என்று பாராட்டியதோடு...

""இலங்கையில் வடகிழக்கில் வாழும் தமிழர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் புதுப்பித்துக்கொள்வோம்''’என்று உறுதிபடக் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பால் ஸ்கல்லி தனது உரையில்...’""உலகத் தமிழர்கள், சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் இது. இந்த நாளில், அரசு தேசிய இனப் பிரச்சினைக்கு இலங்கை அரசு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்''’’என்றார்.

வடஅயர்லாந்துக்கான முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தெரசா வில்லியர்ஸ், தமிழர்களின் செழுமையான கலாச்சாரப் பங்களிப்பைப் பாராட்டிவிட்டு ""தமிழ் மக்களின் நீதிக்கும் நிரந்தர அமைதிக்குமான போராட்டத்துக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழா பிரிட்டானிய தமிழர்களைப் பாராட்டுவதற்கான நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது. பிரிட்டனின் பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் பொதுச்சேவைகளிலும் தமிழ்மக்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார்கள்; அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்மக்களின் நீதிக்கும் அமைதிக்கும் அரசியல் தீர்வுக்கும் உங்கள் நண்பர்களான நாங்கள் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்போம். பிரிட்டானிய தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையடைகிறேன்''’என்றார் உற்சாகமாக.

நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் டைம்ஸ் ""இங்கே முக்கிய வீதிகளில் மட்டும் 114-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களைத் தமிழர்கள் நடத்திவருகின்றனர். ஆண்டுதோறும் தமிழர்களின் வருகையும் பங்களிப்பும் இங்கே அதிகரித்துவருவது மகிழ்ச்சிக்குரியது''’என்றவர், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைனின் வாழ்த்துச் செய்தியையும் வாசித்தார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் ஜெர்மி ""உலகமெங்கும் உள்ள தமிழர்கள் அறுவடைத் திருநாளைப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். இது நன்றிக்கான விழா. அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வதற்கான விழா. இலங்கையில் மனித உரிமைப் போராட்டங்களுக்காக தமிழ் மக்கள் மிகப்பெரும் தியாகங்களைப் புரிந்துள்ளனர். இலங்கை, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு நிறைவை அடையும் இந்த நேரத்தில், இலங்கை அரசு தமிழ் மக்களின் நீதிக்கும் நல்லிணக்கத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்த பிரிட்டானிய அரசு முன்னெடுக்க வேண்டும்''’என்று அழுத்தம்திருத்தமாகக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரான சியோபைன் மெக்டோனப் தன் உரையில், ""நீதிக்காகத் தொடர்ந்து போராடும் இனம் தமிழினம். அவர்களின் போராட்டத்தில் தொடர்ந்து நாங்கள் கை கோப்போம்''’என்றார் உற்சாகமாக.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சர் எட் டேவியோ ""இலங்கையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட, தமிழ் மக்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறோம். தமிழர்களின் அனைத்துக் கட்சிக் குழுவின் பிரதிநிதி என்கிற முறையில் பிரிட்டானிய தமிழர் பேரவையுடன் நான் இணைந்து செயல்பட்டு வருகிறேன். ஐ.நா.சபையில் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற, எல்லோரும் வலியுறுத்தியாக வேண்டும். ஆனால், இதில் இப்போது தளர்வு ஏற்பட்டிருப்பதையும், இலங்கை அரசுக்கு அதிக அளவில் வர்த்தகச் சலுகைகள் தரப்படுவதையும், நான் கவலையோடு உணர்கிறேன். இலங்கைக்குத் தரப்படும் இந்த சலுகைகள் திரும்பப் பெறவேண்டும்''’என்றார் அழுத்தமான குரலில்.

இப்படியாக, விழாவில் பேசிய அனைவருமே ஈழத் தமிழர்களுக்காக அக்கறையோடு குரல்கொடுத்தனர்.

இந்த விழாவில், பிரிட்டானிய தமிழர் பேரவை அமைப்பாளர் ரவி, டாக்டர் இந்துமதி, கவிஞர் சந்திரிகா, நம் ஆசிரியரின் இளைய மகள் வழக்கறிஞர் சாருமதி, வழக்கறிஞர் சாரதா உள்ளிட்டவர்களும் லண்டன்வாழ் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

-தமிழ்நாடன்