கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ஜீயர் சடகோப ராமானுஜர் 28 மணி நேரம் பிரசாதம் எடுத்துக்கொள்ளாமல் இருந்த வேளையில், அவரை சந்திப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்துக்குச் சென்றபோது, "பிரஸ்ஸா? ஜீயரை பார்க்கிறதுக்கு முன்னால, நான் சொல்லுறத கேட்டுட்டுப் போங்க. நான் ஒரு ரிட்டயர்டு தாசில்தார்'’என்று, ஆண்டாள் கோயில் அருகில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் ஜெகன்னாதன்.
""வைரமுத்து விவகாரத்த விடுங்கோ. அதைவிட பெரிய கொடுமையெல்லாம் இங்கே நெறய இருக்கு. 854 ரூபாய் தீர்வை கட்டிக்கிட்டிருந்தேன். இப்ப 9,782 ரூபாய் கட்டணும்னு சொல்றா. 11 மடங்கு தீர்வையை உசத்தி, மக்களை இம்சிக்கிற ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிய தட்டிக்கேட்க இங்கே ஒரு நாதியும் இல்ல. தேவதாசி விஷயத்துக்கு வர்றேன். அந்தக் காலத்துல ஸ்ரீவில்லிபுத்தூர்லயும் தேவதாசிகள் வாழ்ந்திருக்காங்க. இங்கே மேலரத வீதியும் தெற்குரத வீதியும் சந்திக்கிற இடத்துல ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகமா இருந்திருக்காங்க. அப்பல்லாம். தேவதாசின்னு மத்தவங்களுக்கு தங்களை அடையாளப்படுத்திக் காட்டணும்கிறதுக்காக, அந்த சமுதாயப் பெண்கள் செம்பருத்திப் பூவை தலையில வச்சிக்கணும்கிற பழக்கத்தை கட்டாயம் ஆக்கிருக்காங்க.
நானும் பிராமின்தான். ஆனா.. உண்மையைச் சொல்லணும்ல. அந்தக் காலத்துல மேல் சாதிக்காரங்க ரொம்ப ஆணவத்தோடு வாழ்ந்திருக்காங்க. அந்த சமுதாயத்தைக் கேவலமா நடத்தணும்கிற கெட்ட எண்ணத்தோடு, அவங்கள அவமானப்படுத்தும் விதமா, அவங்க குடியிருந்த ஏரியாவ ‘"தேவடியாகுடி முக்கு'ன்னு அடையாளப்படுத்தி பேசிருக்காங்க. இப்ப தேவதாசி முறையும் இல்ல. அந்த சமுதாய மக்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.னு பெரிய படிப்பெல்லாம் படிச்சு எங்கெங்கோ குடிபெயர்ந்து, அந்தஸ்தோடு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. அந்த ஏரியாவுல இப்ப மற்ற சமுதாய மக்களும் அதிகமா இருக்காங்க. ஆனாலும், அந்த இடத்துக்கு அப்ப வச்ச பேரு இப்பவரைக்கும் நிலைச்சு நிக்குது. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லுறேன். தேரோட்டம் நடக்கிற நேரத்துல, "தேர் எங்கே நிக்குது'ன்னு கேட்டா, "தேவடியாகுடி முக்குல நிக்குது'ன்னு சொல்லுவாங்க. "தெற்குரத வீதி முக்கு'ன்னு சொல்லவே மாட்டாங்க. கொச்சையா ஊரே இப்படி பேசுறதுனால, அந்த ஏரியா மக்கள் இப்பவும் குமுறலோடுதான் வாழுறாங்க. ஸ்ரீவில்லிபுத்தூர்ல அந்த ஏரியா பேரை இனிமே யாரும் அப்படிச் சொல்லக்கூடாதுன்னு உத்தரவு போடறதுக்கு இங்கே எந்த ஆன்மிக பெரியவருக்கும் மனசு வரல'' என்றார் வேதனையோடு.
அந்த மடத்தில் உள்ள தனது ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார் சடகோப ராமானுஜ ஜீயர். அவர் முன்பாக நாம சங்கீர்த்தனங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள் சிலர்.
"கருத்து சுதந்திரம் உள்ள இந்த காலகட்டத்தில், இனி எந்த மதத்தையும் யாரும் விமர்சிக்கக் கூடாது என்று உலக மக்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றீர்களே? உலகம் ஏற்றுக்கொள்ளுமா?'’ என்று ஜீயரிடம் கேட்டோம். "இது எனது தனிப்பட்ட கருத்து கிடையாது. உலகத்தில் உள்ள ஆண்டாள் குழந்தைகள் எடுத்த முடிவு'’என்றார். அடுத்த கேள்வியாக, "உலகத்தில் உள்ள ஆண்டாள் குழந்தைகள் அனைவரும் எந்த இடத்தில் கூடி, எப்போது முடிவு எடுத்தீர்கள்?'’என்று கேட்டபோது, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “"இங்கே பஜனைகள் பாடிக்கிட்டிருக்கோம். ஆன்மிக முறையில்தான் எல்லாமும் பேசிக்கிட்டிருக்கோம். எங்களுக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை'’என்று சமாளித்தார் ஜீயர்.
"உள்நோக்கம் இருப்பதாகத்தான் வெளியில் பேசிக்கொள்கிறார்கள். கோட்சே பனியன் அணிந்த இந்து மகா சபாக்காரர்கள் இருவர் தங்களைச் சந்தித்திருக்கிறார்கள். உண்ணாவிரதத்தின் பின்னணியில் எச்.ராஜாவும், வானதி சீனிவாசனும் இருக்கிறார்கள். ஜீயரை முன்னிறுத்தி பா.ஜ.க.வினர் நடத்தும் அரசியல் என்று உளவுத்துறை வட்டாரம் கிசுகிசுக்கிறதே?'’என்று கேட்டோம். ‘
"கோட்சேவா? அது யாரு?'’ என்பதுபோல, பார்வையாலும், உடல் மொழியாலும் ஜீயர் ரியாக்ட்’ பண்ண... "காந்தியை சுட்டுக் கொன்றவர்தான் கோட்சே'’என்று விளக்கினோம். நம்மை மேலும் கீழுமாகப் பார்த்த ஜீயர், “"எங்களை யாரும் சந்திக்கவில்லை. யாரும் பேசவில்லை. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. இதுல எந்த அரசியலும் இல்லை. உண்ணாவிரதத்தை நான் தொடர்வதும், தொடராததும் ஆண்டாள் நாச்சியார் கைகளில்தான் இருக்கிறது'’என்றார்.
ஒவ்வொரு கேள்வியின்போதும், “"உலக மாதா... லோக மாதா... ஆண்டாள் தாயார்... உலகத்திலுள்ள ஆண்டாளின் குழந்தைகள்...'’என, ரிபீட்’ செய்தபடியே இருந்த ஜீயரிடம், "ஸ்ரீவில்லிபுத்தூரில் குறிப்பிட்ட ஒரு பகுதியின் பெயரை இன்றும் கொச்சைப்படுத்திப் பேசுவதை தடுத்து நிறுத்துவதற்கான உத்தரவு ஒன்றை தாங்கள் பிறப்பிக்கலாமே?'’என்ற வேண்டுகோளை முன்வைக்கும் விதமாக, ‘"வைரமுத்து ஒரு தடவைதான் அந்த வார்த்தையை மேற்கோள் காட்டினார். அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார். "தேவதாசி' என்ற சொல்லை..?'’ என்று நாம் கேட்ட மாத்திரத்தில் முகம் சுளித்த ஜீயர், “"தவறாக நினைக்க வேண்டாம். மறுபடியும் மறுபடியும் இது குறித்து நாங்க பேச விரும்பவில்லை'’’ என்று முடித்துக்கொண்டார்.
மறுநாள், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவும், நடிகர் எஸ்.வி.சேகரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரசாதம் எடுத்துக்கொண்டார் சடகோப ராமானுஜ ஜீயர்.
-சி.என்.இராமகிருஷ்ணன்