லாவண்யாவை தாக்கிய கிரிமினல்கள்!
பள்ளிக்கரணையை அடுத்த அரசன்கேணியில், கடந்த 13-ஆம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் லாவண்யா மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதோடு அவரது தங்க செயின், கம்மல், வளையல்களோடு ஐபோன், டூவீலரும் கொள்ளையடிக்கப்பட்டது. ரத்தவெள்ளத்தில் கிடந்த லாவண்யா மீட்கப்பட்டு பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் கடந்த வெள்ளியன்று கண்விழித்த லாவண்யா, போலீஸ் விசாரணையில் தன்னைத் தாக்கிய மூன்று நபர்கள் குறித்த விவரங்களைத் தெரிவித்தார். ஏற்கனவே லாவண்யாவின் டூவீலரை கைப்பற்றியிருந்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், நாராயணமூர்த்தி, வினாயகமூர்த்தி ஆகிய மூவரை கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் சிறுசேரி, தாழம்பூர் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டதும், 2016-ல் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை கொலைசெய்து சிறைசென்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
-அரவிந்த்
இந்துக்களைப் பாதுகாக்கும் திராவிடம்
கோவில்களை அறநிலையத்துறையிடமிருந்து விடுவிக்க வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், பிராமணர்களிடமிருந்து கோடிக்கணக்கான இந்துக்களைப் பாதுகாக்கவும்- அனைத்து சாதியினரும் அர்ச்சகராவும் கோவில்களை அறநிலையத்துறை நிர்வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னையில் நடந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேராசிரியர் சுப.வீ. முன்னெடுத்த இந்த மாநாட்டில், அனைவருக்கும் பொதுவான கோவில் சொத்துகளைப் பாதுகாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், கோவில் நிலங்களில் குடியிருக்கும் இந்து மத பக்தர்களுக்கு அதனை உரிமையாக்க வேண்டும் என்ற திருத்த தீர்மானமும் நிறைவேறியது. தனியார் துறையில் இடஒதுக்கீடு, பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பேசிய நடிகர் சத்தியராஜ், “""நான் தேர்தலில் நின்று தோற்றால் எனக்கு எந்த நட்டமும் இல்லை. ஆனால், நான் ஜெயித்துவிட்டால் உங்க நிலைமையை நினைத்துப் பாருங்க'' என்று சினிமா நடிகர்களின் அரசியல் ஆசையை தனக்கேயுரிய பாணியில் விளாசினார். மாலையில் நடந்த மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி, ""திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூக நீதியை நிலைநிறுத்த தி.மு.க. என்றைக்கும் பாடுபடும்'' என்றார்.
-கீரன்