கோயில் சிலைகளை பூசாரியே அடகு வைத்தது போன்ற வேலையைத்தான், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் கிளைகளின் மேலாளர்கள் செய்திருக்கிறார்கள்.

அரியலூர் மாவட்டம் அசாவீரன் குடிக்காட்டிலும், ஆண்டிமடம் அருகிலுள்ள வரதராஜன் பேட்டையிலும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகள் உள்ளன. இந்த இரண்டு கிளைகளின் தற்போதைய மேலாளர்களான தியாகராஜனும் சத்தியப்பிரியாவும், ""எங்கள் வங்கிக் கிளைகளில் சுமார் எழுபது லட்ச ரூபாயை மோசடி செய்த முன்னாள் மேலாளர் பிரதீப் மீதும், மோசடியில் அவருக்குத் துணைபுரிந்த அலுவலர்கள் ராஜேந்திரன், மதன் மற்றும் இவர்களுக்கு உதவிசெய்த நல்லதம்பி, கோபி, சர்க்கரைஆலை கரும்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன்பேட்டைக் கிளையின் முன்னாள் மேலாளர் பழனிச்சாமி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அரியலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்கள். நீதிபதி உத்தரவையடுத்து 70 லட்சத்தை மோசடி செய்த கும்பல் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ்.

bankloan

எழுபது லட்சம் மோசடி எப்படி நடந்தது?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாகுறிச்சி, புதுப்பாளையம், இருங்களாகுறிச்சி, மடைவெட்டிக்குடிக்காடு, குறிச்சிகுளம், கஞ்சமலைப்பட்டி, சோழன்குடிக்காடு, நத்தகுழி, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, தலைவாய், தத்தனூர் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வளர்ச்சிக்காகத் துவக்கப்பட்டதுதான் அசாவீரன்குடிக்காட்டில் உள்ள பாரத ஸ்டேட் பேங்க் கிளை.

இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகள் இந்த வங்கியில் கணக்குத் துவக்கினார்கள். இந்த விவசாயிகளில் யார், யார் இப்போது வங்கியில் வரவு செலவு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களில் 70 பேரை இந்த மோசடிக் கும்பல் தேர்வு செய்து, அவர்கள் கரும்பு, நெல், பருத்தி, கடலை போன்றவற்றைப் பயிரிட்டிருப்பதாய் போலியான ஆவணங்களைத் தயார்செய்து, அவர்கள் பயிர்க்கடன் பெற்றதுபோல் தலா ஒரு லட்சத்தை அவர்கள் கணக்கில் வரவு வைத்து பிறகு இவர்கள் தங்களுக்குச் சுருட்டியிருக்கிறார்கள்.

""இந்த மோசடிப் பணத்தில் 4 லட்ச ரூபாயை தஞ்சை மாவட்டம் கிளியனூரில் உள்ள ஐ.ஓ.பி. கிளையில் கணக்கு வைத்துள்ள தனது தாயார் பெயருக்கு மாற்றம் செய்திருக்கிறார் மேலாளர் பிரதீப். அதை வங்கி ஊழியர்கள் சிலர் உயரதிகாரிகளுக்கு கசியவிட்டனர். வங்கி மேலிடம் அரியலூர் கிளை மேலாளர் முரளி தலைமையில் குழு அமைத்து விசாரித்திருக்கிறது. மோசடி அம்பலமானதும், 70 லட்சத்தில் பெரும்பகுதியை மோசடிக் கும்பலிடமிருந்து திரும்பப் பெற்றுவிட்டார்கள். ஆனாலும் மோசடி செய்தவர்கள் மீதும் வழக்கு ஏதும் பதியவில்லை.

""நாடு முழுக்க 24 கோடி விவசாயிகள் இருக்கிறார்கள். இவர்களில் 10 விழுக்காடு விவசாயிகள் கூட வங்கிகளில் கடன் பெற முடிவதில்லை. ஆனால் விவசாயிகள் பெயரில் எவனெவனோ மோசடி செய்து, வராக்கடன் என்று சொல்கிறார்கள். எங்கள் பகுதியில் குரும்பலூர் வங்கியில் 74 விவசாயிகளுக்கு நகைக்கடன் தருவதாக நகையை வாங்கியிருக்கிறார்கள். இதுவரை கடனும் தரவில்லை... நகையும் தரவில்லை. இந்த லட்சணத்தில் இருக்கிறது வங்கிகளின் சேவை'' என வேதனையுடன் சொல்கிறார் மார்க்சிஸ்ட் விவசாய சங்க பெரம்பலூர் மா.செ. செல்லதுரை.

-எஸ்.பி.சேகர்