ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் மீது, கட்சியின் தொண்டர் வசந்தம்மணி, செருப்பு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். "சீரியல் செட் போட்ட பணத்தைக் கேட்டதுக்கு, ஆத்திரப்பட்டு கேவலமா பேசுனதாலதான் செருப்பை வீசுனேன்' எனச் சொன்னார். இந்த விவகாரத்தை ஜன.29-31 தேதியிட்ட நக்கீரனில் பதிவு செய்திருந்தோம்.
எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் 22-ஆம் தேதி வசந்தம்மணியை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். 25-ஆம் தேதி காலை ஜெயில் செல்லில் சுயநினைவின்றிக் கிடந்த மணியை, வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர் ஜெயில் காவலர்கள். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால், "ஆபரேஷன் செய்யப்பட்டு, 48 மணி நேரம் அப்சர்வேஷனில் இருக்கவேண்டும்' என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
சுயநினைவு திரும்பாமலேயே, வசந்தம்மணி 31-ஆம் தேதி காலை இறந்துவிட்டதாக அரசு டாக்டர்கள் அறிவித்தனர். வசந்தம்மணி இறப்புச் செய்தியை கேள்விப்பட்டதும், திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் போளூர் பஸ்ஸ்டாண்ட் எதிரே சாலை மறியலில் இறங்கிவிட்டனர் மணியின் உறவினர்கள். "மணியின் சாவுக்குக் காரணமானவர்களைக் கைது செய்யாமல் உடலை வாங்கமாட்டோம்'’என ஆறுமணி நேரம் நடந்த சாலை மறியல் ஸ்பாட்டுக்கு கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, ஏ.டி.எஸ்.பி. ரங்கராஜன் ஆகியோர் வந்து மணியின் உறவினர்களை சமாதானப்படுத்தி உடலை வாங்க வைத்தனர்.
மணியின் மனைவி சுனிதாவிடம் நாம் பேசியபோது, ""சீரியல் செட்டிங் போட்ட பணத்தைக் கேட்டப்பவே அவரை தாறுமாறா அடிச்சிருக்காங்க. பதிலுக்கு இவரும் கோபத்துல கல்யாண மண்டபத்துல எம்.எல்.ஏ. மேல செருப்பை வீசியிருக்காரு. அப்ப எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், அவரோட டிரைவர் சதாம்உசேன் மற்றும் சேட்டு, மனோகரன், அன்பழகன்னு எல்லாரும் சேர்ந்து கம்பு, கட்டையால அடிச்சிருக்காங்க. இதுனாலதான் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு செத்தும் போயிட்டாரு''’என கதறி அழுதார்.
போலீஸ் தரப்பில் நாம் பேசியபோது, ""மாற்றுத் திறனாளியான மணியைக் கைது செய்ய ரொம்பவே யோசித்தோம். ஆனா மேலிடத்திலிருந்து தொடர்ந்து பிரஷர் வந்ததால் அரெஸ்ட் பண்ண வேண்டியதா போச்சு. இப்ப எம்.எல்.ஏ. மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்''’என்றனர். கைதி மணி மரணம் குறித்து விசாரிக்க வேலூர் ஜெயிலுக்கு நேரடி விசிட் அடித்துள்ளார் நீதிபதி கனகராஜ்.
லோக்கல் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை எதிர்த்து அரசியல் பண்ணிவந்த எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், இப்போது எடப்பாடியிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.
-து.ராஜா