மிழக அமைச்சர் ஒருவரின் தொகுதியிலேயே, வேட்டியை மடித்துக் கட்டியதற்காக தலித் இளைஞர்களை கட்டிவைத்து அடித்துத் துவைத்த கொடூர நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பேயான் வலையபட்டி என்ற கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, பழனி பாதயாத்திரைக் குழு பயணத்திற்காக அன்னதானம் அறிவிக்கப்பட்டது. கிளிக்குடி விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் டிராக்டரில் வந்திருக்கிறார்கள்.

dalit

அந்த இளைஞர்களில் சிலர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தனர். இதைப் பார்த்த சில ஆதிக்கசாதியினர் தலித் இளைஞர்களை அடித்துத் துவைத்துள்ளனர். அடிபட்டவர்கள் டிராக்டரில் கிராமத்தை விட்டு வெளியேற முயன்றனர். ஆனால், டிராக்டரைவிட மறுத்த கிராமத்தினர், மறுநாள் ஊர்ப் பஞ்சாயத்தில் வந்து வாங்கிச் செல்லும்படி கூறிவிட்டனர்.

Advertisment

அடிபட்ட இளைஞர்களுடன் விளாம்பட்டி ஆட்கள் பலர் அங்கு சென்றனர். இவர்களைப் பார்த்ததுமே, இளைஞர்களை பிடித்து கட்டிவைத்து அடித்து உதைக்கத் தொடங்கினர். அதைத் தடுத்துக் கேட்ட சுப்பிரமணியனை கட்டையால் தாக்கிக் காயப்படுத்தினர்.

jeevaகாயமடைந்த சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ""மன்னிப்புக் கேட்க வாங்கன்னாங்க. நாங்களும் அதை மதிச்சு ஊர் ஜனங்களோட போனோம். ஆனால், எங்களைப் பார்த்ததும், ஆலமரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்த ஊர் ஆட்கள் எங்க ஊர் பையன்களை பிடித்து சட்டையைக் கழற்றிவிட்டு, கயிற்றால் கட்டி எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்தனர். இதை எதிர்த்துக் கேட்டதற்கு என்னையும் கட்டையால் தாக்கிக் காயப்படுத்தினார்கள்'' என்றார் வேதனையுடன்.

இந்தச் சம்பவம் தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கண்டுகொள்ளப்படவில்லை. வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, "இனி பிரச்சனை இருக்கக்கூடாது' என்று எச்சரித்து அனுப்பினார்கள்.

Advertisment

இதையடுத்தே, அடிபட்ட இளைஞர்கள் சார்பில் ஜனவரி 25ஆம் தேதி மணிகண்டன் என்பவர் டி.எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார். அதன்மீதும் நடவடிக்கை இல்லை. அதன்பிறகே, பகுஜன் சமாஜ் கட்சி தலையிட்டது. பின்னரே, அன்னவாசல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, விளாம்பட்டி இளைஞர்கள் செல்போன் திருடியதால்தான் கிராமத்தார்கள் கண்டித்து அனுப்பியதாக மாவட்டக் காவல் துறையிலிருந்து செய்தியை பரவச் செய்துள்ளனர்.

பி.எஸ்.பி. மாவட்டத் தலைவரான ஜீவா கூறும்போது, “""புதுக்கோட்டை மாவட்டத்தில் இது ஒரு உதாரணம்தான். தலித்துகள் வேட்டியை மடித்துக் கட்டக்கூடாதா? அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியிலேயே இந்த வன்கொடுமை கூடுதலாக இருக்கிறது'' என்றார் ஆவேசமாக.

-இரா.பகத்சிங்