தன்னை முறைகேடாக சிறையில் தள்ளிய அரியலூர் மாவட்ட கலெக்டர் லஷ்மிபிரியா மீது, முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்திருக்கிறார் எக்ஸ் எம்.எல்.ஏ.வான டாக்டர் நல்லமுத்து. "ஏழைகளின் மருத்துவர்' என மக்களிடம் பெயர்பெற்றவர் நல்லமுத்து. அரசியலில் நேர்மையை கடைப்பிடிக்கும் அபூர்வ பட்டியலில் இடம் பெற்றவர்.
மறைந்த ஜி.கே.மூப்பனாரின் விசுவாசி. காங்கிரஸ் கட்சியில் சீட் வாங்கி ஜெயித்து 84 முதல் 87 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய இவர், தற்போது த.மா.கா.வில் இருக்கிறார். இவரது சொந்த ஊரான திருமழாப்பாடியில் இருந்த இவருடைய கூரை வீட்டையும், நிலத்தையும் 2015 வாக்கில் அரியலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த மணிவேலும் அவரது ஆதரவாளரான சார்லஸ் என்பவரும் அதிகாரிகள் துணையோடு ஆக்கிரமித்துவிட்டார்களாம். அவர்களுக்கு இப்போதைய அரியலூர் எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனும் உடந்தையாம்.
தனது சொத்தை மீட்கப் போராடிவரும் நல்லமுத்துதான், தற்போதைய கலெக்டர் லஷ்மிபிரியா மீதே புகார் கொடுத்திருக்கிறார்.
விவகாரம்பற்றி நாம் நல்லமுத்துவிடமே கேட்டபோது,…""இதற்குமுன் இருந்த கலெக்டர் சரவணவேல்ராஜா, என் விவகாரத்தை விசாரித்து கிரயப்பத்திரத்தில் இருப்பதுபோல் எனக்குப் புலப்பட நகல் தரவேண்டும் என்று அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டும் எதுவும் நடக்கவில்லை. அவர் விசாரித்து எழுதிய அறிக்கையை தாசில்தார் திருமாறன், கிராம அதிகாரி பாலசுப்பிரமணியன், ஆக்கிரமிப்பாளர் சார்லஸ் ஆகியோர் கிழித்துப்போட்டனர். இந்த நிலையில் கலெக்டர் சரவணவேல்ராஜாவும் மாறிவிட்டார். அவருக்கு பதில் வந்திருக்கும் கலெக்டர் லஷ்மிபிரியாவிடம் முறையிட்டேன்.
அவர் அசைந்துகொடுக்காததால், அவர்மீதும் கலெக்டரின் அறிக்கையைக் கிழித்துப்போட்டவர்கள் மீதும் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்தேன். கலெக்டர் லஷ்மி பிரியாவை விசாரித்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், அவரைக் கண்டித்ததோடு உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதனால் என்மீது கோபமடைந்த கலெக்டர் என்னை கொடூரமாகப் பழிவாங்கிவிட்டார். எப்படி என்றால், அவரை சந்தித்து முறையிடப்போன என்னை, அவர் சொன்னதன் பேரில் ஒரு எஸ்.ஐ. என் கையைப் பிடித்து முறுக்கினார். பின்னர் போலீஸ் டீம் என்னை வேனில் ஏற்றியது.
ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் கடுமையாக என்னை மிரட்டினார்கள். அப்போது தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் சில ரவுடிகளோடு அங்கே வந்தார். "இனி உன்கதி அவ்வளவுதான்' என மிரட்டியதோடு, என்னை எட்டி உதைக்க ஆத்திரத்துடன் காலைத் தூக்கினார். இந்த நேரத்தில், விசயத்தைக் கேள்விப்பட்ட எங்கள் தலைவர் ஜி.கே.வாசன், கட்சிப் பிரமுகர்களையும் வக்கீல்களையும் ஸ்டேசனுக்கு அனுப்பிவைத்தார். அதன்பின்தான் என்னை நீதிபதி மகாலெட்சுமி முன்பு ஆஜர்படுத்தி ரிமாண்ட் ஆர்டரே வாங்கினார்கள். அதன்பின் எங்கெங்கோ இழுத்தடித்து ஏதோ ஒரு குடோனில் அடைத்தனர். அப்போது போலீசுக்கு என்னைத் தீர்த்துக்கட்டும்படி போன் வந்துகொண்டே இருந்தது. போலீஸ்காரர்களோ, "அவர் முன்னாள் எம்.எல்.ஏ. இப்பவே கட்சிக்காரங்க அவரை விசாரிக்கிறாங்க. அதனால் அவரை ஏதாவது செய்தா எங்களுக்கு ரிஸ்க்கு'ன்னு சொன்னாங்க.
மறுநாள் மதியம் 4 மணி வரைக்கும் அலைக்கழிச்சு, திருச்சி சிறையில் தள்ளினார்கள். அதன்பின் தலைவர் வாசனின் முயற்சியில்தான் பெயிலில் வந்திருக்கேன். என் கதையை முடிக்கப் பார்த்தவங்ககிட்ட இருந்து எப்படியோ உயிர் தப்பியிருக்கேன். என் உயிருக்கு அவர்களால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்''’என்றார் பதட்டமாய்.
வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இது குறித்துக் கேட்டபோது, ""ஜெ.’இருந்தவரை அதிகாரிகளிடம் பயம் இருந்தது. அவர் இல்லைன்னு ஆனதும் எல்லாமே தலைகீழாகிவிட்டது. இங்கே ஆளும்கட்சிக்காரர்களும் கலெக்டரும் கைகோர்த்துக்கொண்டு மாவட்ட நிர்வாகத்தை சீர்குலைத்து வருகின்றனர். டாக்டர் நல்லமுத்து விவகாரத்தில் அதிகாரிகளின் அராஜகம் எல்லை மீறிப்போயிருக்கிறது''‘என்கிறார்கள் வருத்தமாய்.
ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கே இந்தக் கதியா?
-இரா.இளையசெல்வன்