இந்திய அரசியல் பார்வையாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் அ.தி.மு.க.-தி.மு.க. எம்.பி.க்கள் கம்யூனிஸ்ட்டையும் இணைத்துக் கொண்டு காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றாய்ப் போராடினார்கள்.
அ.தி.மு.க. எம்.பி., மைத்ரேயன், ""கர்நாடகத்தில் தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் நிச்சயம் ஆர்வம் காட்டாது'' என்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பு. இதனை மத்திய அரசு மீறுவதற்கு வழி இருக்கிறதா என நாம் சுப்ரீம் கோர்ட் வட்டாரத்தில் கேட்டோம்.
""காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் லோக்பால் என்கிற ஊழலை கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த பெரிய போராட்டம் அன்னா ஹசாரே தலைமையில் நடந்தது. ஆனால், அதன் தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை. பிரதமரையே லோக்பால் தலைவர் கேள்வி கேட்பார் என்பதுதான் இதற்குக் காரணம். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, ""எதிர்க்கட்சித் தலைவரும் பிரதமரும் சேர்ந்துதான் லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிக்க வேண்டும். தற்போது உள்ள மக்களவையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்து பெறவில்லை. மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர்தான். அவரை எந்த அடிப்படையில் அழைத்து, லோக்பால் அமைப்பின் தலைவரை நியமிப்பது?'' என கேள்வி கேட்டது.
சுப்ரீம் கோர்ட்டோ, "மல்லிகார்ஜுன கார்கேவை வைத்து கூட்டம் நடத்தி லோக்பால் அமைப்புக்கு தலைவரை தேர்ந்தெடுங்கள்' என உத்தரவிட்டது. உடனே பிரதமர் மல்லிகார்ஜுன கார்கேவை கூட்டத்திற்கு அழைத்தார். அதன் அழைப்பிதழில் குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்றுகூட குறிப்பிடாமல் "சிறப்பு அழைப்பாளர்' என குறிப்பிட்டு அழைப்பிதழ் அனுப்பியதால் காங்கிரஸ் அதனை புறக்கணித்தது.
மத்திய அரசின் இந்த அணுகுமுறையை எதிர்த்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதுபோல காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன் அந்த தீர்ப்பு மத்திய சட்ட கமிஷன் என்கிற அமைப்புக்கு அனுப்பப்பட்டது. அது சட்ட அமைச்சகத்திற்கு "காவிரி தீர்ப்பை அமல்படுத்த என்ன செய்யலாம்' என கேள்வி கேட்டு அனுப்பி வைத்தது. சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தோ, அட்வகேட் ஜெனரலான முகுல் ரோத்தகியிடம் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தார்த்த என்ன செய்யலாம்?' எனக் கேட்டுள்ளார்.
முகுல் ரோத்தகி தமது நண்பர்களிடம் இதுபற்றி விவாதித்துள்ளார். அப்போது அவர்கள், ""காவிரி விஷயத்தில் தமிழக அரசு சரியாக வாதாடவில்லை. அதைத்தாண்டித்தான் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஜெ. செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 27-ஆம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு 4 நாட்கள் கெடு விதித்தது உச்சநீதிமன்றம். உடனே முன்னாள் பிரதமர் தேவகவுடா, காவிரியில் மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்தார். அவரை தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, "மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காது' என உறுதியளித்தார். அதன்பிறகு "மத்திய அரசு மேலாண்மை வாரியம் என்பதை கோர்ட் உத்தரவுப்படி அமைக்க முடியாது, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றுவதன் அடிப்படையில்தான் அமைக்க முடியும்' என சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டது. தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நப்டே "ஜெ. படுத்த படுக்கையில் இருக்கிறார். அவர் உத்தரவு தராமல் எதுவும் செய்ய முடியாது' என்றார்.
தமிழகத்தில் நிலவும் இந்த அரசியல் சூழலையும் சுப்ரீம்கோர்ட் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான நீதிமன்றத்தின் அதிகாரத்தை தெளிவுபடுத்தி, "6 வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அந்த மேலாண்மை வாரியம் எப்படி அமைக்க வேண்டும்' என்றும் அதற்கான வழிமுறைகளையும் தெரிவித்து, "இதில் காலதாமதம் கூடாது என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது' என முகுல் ரோத்தகி விளக்கியுள்ளார்.
அதற்குப் பிறகுதான் மத்திய நீர்வளத்துறை செயலாளர் 9-ஆம் தேதி 4 மாநில அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்துள்ளார். இதற்கிடையே 8-ஆம் தேதி கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட... அத்துடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுபோட அசைவுகள் நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும். கர்நாடகாவில் தேர்தல் முடியும்வரை மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தள்ளிப்போட முயலும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர். இதனை எதிர்கொள்ள வேண்டுமென்றால், 6 மாத கால அவகாசம் முடிவடையும் மார்ச் 30-ஆம் தேதி அன்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசு மீது கோர்ட் அவமதிப்பு தொடரவேண்டும். எடப்பாடி அரசு தமது எஜமானர்களுக்கு எதிராக வழக்குப் போடுமா?
-தாமோதரன் பிரகாஷ்