"துணைமுதல்வர் ஓ.பி.எஸ். செய்வது வழிப்பறிக் கொள்ளை' என்று புலம்புகிறார்கள் திண்டுக்கல் மாவட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்.
ஏன் இப்படி?
விளை நிலங்களை வீட்டு மனையாகவோ, தொழிற்சாலையாகவோ பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கையொட்டி, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவாளர் அலுவலகங்களில் பதியக்கூடாது என உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தடை விதித்தது.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பெரிதும் முடக்கப்பட்டது. இதனால் ஷாக்கான ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், அந்தத் தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுக்க உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினார்கள். இதை பார்த்த உயர்நீதிமன்றம், இது குறித்துத் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.
இந்த நிலையில்தான், ஏற்கனவே பிளாட் போட்டு விற்காமல் இருக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் வீட்டு மனைகளை விற்பதற்காக, ஒரு வரைமுறைத் திட்டத்தை ஏற்படுத்தி, அதன்படி ஊரக மற்றும் நகர வளர்ச்சிக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு, அத்தகைய வீட்டு மனைகளை விற்பனை செய்யலாம் என ஒரு புதிய சட்டத்தை (172-ன்படி) எடப்பாடி அரசு கொண்டு வந்தது.
இந்த நிலையில், தர்மயுத்தம் நடத்திவந்த ஓ.பி.எஸ்., திடீரென எடப்பாடி அணியுடன் ஐக்கியமாகி, துணைமுதல்வராக, அவரிடம் வீட்டுவசதித் துறையும் கொடுக்கப்பட்டது. உடனே வசூலும் தொடங்கிவிட்டது.
இது குறித்து துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""இந்தத்துறையின் கட்டுப்பாட்டில் நகர ஊரமைப்பு அலுவலகங்கள் திண்டுக்கல், மதுரை உட்பட பல மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இங்குதான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், விற்காத தங்கள் மனைகளுக்கு அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதிக்காக அணுகும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம், "அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்துடன், துறை அமைச்சரான ஓ.பி.எஸ்.ஸுக்குத் தனியாக ஒரு தொகையைக் கொடுத்தால்தான் உங்கள் பைல் கையெழுத்தாகி வரும்' என்று வெளிப்படையாகவே எங்கள் துறை அதிகாரிகள் மூலம் வசூலிக்கத்தொடங்கி விட்டார் ஓ.பி.எஸ்.''’என்கிறார்கள்.
-இதுதான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களைப் புலம்பவைத்திருக்கிறது.
நம்மிடம் பேசிய ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலர், ""கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியதால், வாங்கிய கடனையே திருப்பிக்கொடுக்க முடியாமல் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களான ரமேஷ், முருகானந்தம், தங்கதுரை, விஜயன் இப்படி சிலர் ஊரைவிட்டே ஓடிப் போய்விட்டனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால்... கடன் தொல்லையால் வத்தலக்குண்டு கணேசன், ஒட்டன்சத்திரம் திருப்பதி, வேடசந்தூர் பாண்டிகுமார் உட்பட தமிழகம் முழுவதும் முந்நூறுக்கும் மேற்பட்டோர், தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தநிலையில்... இப்போது ஓ.பி.எஸ்.தரப்பின் வசூல் அட்டாக்கிற்கும் நாங்கள் ஆளாகியிருக்கிறோம். பிளாட்டுகளுக்கான இசி, வரைபடம் போன்ற ரெக்கார்டுகளைத் தயார் செய்து திண்டுக்கல்லில் உள்ள நகர ஊரமைப்பு அலுவலகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தால், விற்பனை செய்யும் ஒவ்வொரு பிளாட்டுக்கும் ஐநூறு வீதம் டி.டி. எடுத்துவந்து கட்டச் சொல்கிறார்கள். பிறகு, இன்ஸ்பெக்சன் நடத்திவிட்டு, இந்த ஃபைல்களையெல்லாம் சென்னையிலிருக்கும் இயக்குநருக்கு அனுப்பிவிடுவோம். அங்கு ஓ.கே. ஆன பிறகு, "உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். அதற்கு பிறகு வளர்ச்சிக் கட்டணம் செலுத்திவிட்டு, உங்கள் பார்ட்டிகளுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுக்கலாம்' என்று கூறி, "ஓ.பி.எஸ்..ஸின் ஏஜெண்டிடமும் பேசுங்கள். அவரிடம் பேசி ஒரு சதுரடிக்கு ரூபாய் மூன்று வீதம் பணம் கொடுத்தால்தான் உங்கள் ஃபைல் சென்னையிலிருந்து ஓ.கே. ஆகி வரும் இல்லையென்றால் கிடப்பில் போட்டுவிடுவார்கள்' என்று சொல்லி, அந்த புரோக்கரின் செல் நம்பரையும் கொடுக்கிறார்கள். இதன்பின் அவர் சொல்கிற தொகையைக் கொடுத்தால்தான் வீட்டுமனையை பதிவு செய்வார்கள். கமிஷன் பணம் கொடுக்காவிட்டால் எதுவும் நடக்காது''’என்கிறார்கள் எரிச்சலாய்.
தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்ட சிலம்பரசன்... “
""எங்கள் மனைகளின் மொத்த சதுரஅடி 50 ஆயிரம் ஆகும். ஒரு சதுரடிக்கு மூன்று ரூபாய் வீதம் ஒன்றரை லட்ச ரூபாயை ஓ.பி.எஸ். புரோக்கர் சரவணன் கேட்டார். "அப்பத்தான் உங்கள் பைலுக்கு அனுமதி கிடைக்கும். இதுபோலதான் எல்லா ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும் பணம் கொடுத்து வருகிறார்கள். அதுகூட உங்களுக்குத் தெரியாதா? இன்னும் விற்காத பிளாட்டுக்கு எப்படிங்க கமிஷன் கொடுக்க முடியும்?'’என்கிறார்.
இதுபற்றி மற்றொரு ரியல் எஸ்டேட் உரிமையாளரான குமாரிடம் கேட்டபோது... ""கடந்த தி.மு.க. ஆட்சியில் ஸ்டாலின் துணைமுதல்வராக இருந்தபோது, இதேபோல் வரைமுறைப்படுத்தும் திட்டத்தின் வளர்ச்சிப் பணிக்காக ஒட்டுமொத்தத்துக்கே ஒரு சதுரடிக்கு இரண்டு ரூபாய் வீதம்தான் வசூலித்தனர். ஆனால் இப்ப பலமடங்கு உயர்த்தியிருக்கிறார்கள். இதுவே கஷ்டமாக இருக்கிறது. அது இல்லாமல் வழக்கம்போல் அதிகாரிகளுக்கும் கப்பம் கட்டவேண்டும். அப்படியிருக்கும்போது துணைமுதல்வரான ஓ.பி.எஸ்.ஸுக்கு சதுரஅடிக்கு மூன்றுரூபாய் வீதம் கொடுத்தால்தான் அனுமதி கிடைக்கும் என்கிறார்கள். இது மிகப்பெரிய மோசடி. ஒரு மனைப்பிரிவு ஏற்படுத்தினால் அதற்கான அனுமதியை உள்ளுர் திட்டக்குழுமம் கொடுக்கிறது. அப்படியிருக்கும்போது வரைமுறைப்படுத்துவதற்கு சென்னைக்கு அனுப்பத் தேவையில்லை. ஆனால் எங்களைப்போல் உள்ள ரியல்எஸ்டேட் உரிமையாளர்களிடம் கமிஷன் பார்ப்பதற்காகவே அப்படி ஒரு பார்முலாவை வைத்து, பெயருக்கு ஒரு அதிகாரியைப் போட்டு ஓ.பி.எஸ். தரப்புக்கு கமிஷன் போய்ச்சேர்ந்த பின் கையெழுத்துப் போட்டு அனுப்புகிறார்கள். இப்படி எல்லாமே திட்டம் போட்டு ரியல்எஸ்டேட் உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் கமிஷன் கொள்ளையடித்து வருகிறார்கள்''’என்றவர்...
""கடந்த வாரம் எனது நண்பர் பிளாட்டுக்கு 7 லட்சத்து 200 ரூபாய் கமிஷன் கேட்டிருக்கிறார்கள். அதில் 7 லட்சம் கமிஷன் கொடுத்தும்கூட விடாப்பிடியாக அந்த 200 ரூபாயையும் கொடுக்கவேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு கறார் வசூல் செய்கிறார்கள். வரைமுறைப்படுத்தும் திட்டம்கூட மார்ச் மாதம் வரைதான் நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லியிருப்பதால், வேறு வழியில்லாமல் கமிஷன் கொடுத்தாவது மனைகளை லாபமோ, நஷ்டமோ விற்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்''’என்று வருத்தத்ததுடன் கூறினார்.
ஒரு வருடத்திற்கு முன்பு எனது நண்பர் ரியல் எஸ்டேட் மூலம் ஒன்றரை லட்சத்திற்கு மனை வாங்கிப் போட்டிருந்தார். அதுபோல் நாமும் மனை வாங்கிப்போடலாம் என்று அந்த ரியல் எஸ்டேட்காரரிடம் கேட்டதற்கு, இப்ப 3 லட்சம் சொல்கிறார். கேட்கப்போனால் "ஓ.பி.எஸ். முதல் அதிகாரிகள்வரை கமிஷன் கொடுக்க வேண்டுமே' என்கிறார். இப்படியிருந்தால் ஏழைபாளைகள் எப்படி இடம் வாங்க முடியும்?''’என்கிறார் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்.
இதுபற்றி திண்டுக்கல்லில் உள்ள நகர ஊரமைப்பு அதிகாரியான ரமேஷிடம் கேட்டபோது... ""வரைமுறைப்படுத்துதற்கான அனுமதியை சென்னையில் உள்ள இயக்குநர் அலுவலகத்தில்தான் வாங்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. அதனால்தான் அனுப்பி வைக்கிறோம். மற்றபடி துணை முதல்வருக்கு கமிஷன் கொடுங்கன்னு நாங்க யாரிடமும் கேட்பதில்லை''’என்று மழுப்பினார்.
இவர் மறுத்தபோதும், நாம் அந்த ஓ.பி.எஸ். தரப்பு புரோக்கர் சரவணனிடம், (செல் எண்: 7358911355), நம்மை ரியல்எஸ்டேட் உரிமையாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். ""ஒரு லட்சம் சதுரஅடி மனைப் பிரிவில், 50 ஆயிரம் சதுரஅடியை ஏற்கனவே விற்பனை செய்துவிட்டேன். மீதி ஒருலட்சம் சதுரஅடிக்கு அனுமதி கேட்டு ரெக்கார்டுகளை அனுப்பியிருக்கிறேன். இன்னும் அனுமதி வரவில்லை. உங்களிடம் சதுரஅடிக்கு ரூபாய் மூன்று வீதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்'' என்றோம். அவரோ, ""ஆமாம்... ஒருலட்சம் சதுரஅடிக்கு மூன்றுரூபாய் வீதம் கொடுங்க. ஸ்லிப் வாங்கிக்கொண்டு என்னிடம் பேசுங்கள்''’என்றார் அந்த சரவணன். "கொஞ்சம் குறைத்து வாங்கிக்கங்களேன்' என்றோம். சரவணனோ, ""குறைக்க முடியாது. அந்த ஸ்லிப்பில் எத்தனை சதுரஅடின்னு இருக்கும். அதன்படி பணம் கொடுக்கவேண்டும்''’என்றார் அதிகார தோரணையில். இந்த பேச்சை அப்படியே பதிவு செய்துகொண்டோம்.
"இந்த புரோக்கர் சரவணன் யார்?' என விசாரித்தபோது, பொதுப்பணித்துறையில் வேலை பார்த்துக் கொண்டு, ஓ.பிஎஸ்.ஸுக்கு பினாமியாக இருந்துவரும் பெரியகுளத்துக்காரர் என்பது தெரியவந்தது. இந்த சரவணன்தான், ஓ.பி.எஸ்.ஸுக்காக மணல் கான்ட்ராக்ட்காரர்களிடமும் கமிஷன் வசூலிக்கிறாராம்.
தென்மாவட்டத்தில் கடந்த நான்கு மாதத்தில், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மூலம் மட்டும் சுமார் இரண்டுகோடி வரை, இவர்மூலம் ஓ.பி.எஸ்.ஸுக்கு கமிஷன் போயிருக்கிறது.
அதுபோல், வடமாவட்டம் மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் வெவ்வேறு புரோக்கர்களைப் போட்டு, கோடிக்கணக்கில் துணைமுதல்வரான ஓ.பி.எஸ். கல்லா கட்டிவருகிறார் என்ற குற்றச்சாட்டும் ரியல்எஸ்டேட் உரிமையாளர்கள் மத்தியில் இருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி ஓ.பி.எஸ்.ஸியிடம் விளக்கம் கேட்பதற்காக, அவரது பி.ஏ.வான ஜெய்லானியைப் பலமுறை தொடர்புகொண்டும், அவரைப் பிடிக்க முடியவில்லை. ஓ.பி.எஸ். விளக்கம் கொடுத்தால், அதை வெளியிடவும் நாம் தயாராக இருக்கிறோம்.
ஓ.பி.எஸ்.ஸின் இந்தக் கமிஷன் கொள்ளையால், விழிபிதுங்கித் தவிக்கிறார்கள் ரியல்எஸ்டேட் உரிமையாளர்கள்.
-சக்தி