விழுப்புரம் மாவட்டத்தில் 25 ஊராட்சி ஒன்றிய சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் காலியாக இருந்த நான்காயிரம் பணியிடங்களையும், அ.தி.மு.க. நிர்வாகிகளின் அறுவடை ஒத்துழைப்போடு பூர்த்தி செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
""அ.தி.மு.க. நிர்வாகிகளும் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து அறுவடை நடத்தினார்கள். சத்துணவு அமைப்பாளர் வேலையா? 4 லட்சம் ரேட்! சமையல்காரர் வேலையா? 2 லட்சம்! சமையல் உதவியாளர் வேலையா? ஒரு லட்சம்! என்று ரேட் பிக்ஸ் செய்து கலெக்ஷன் ஆனது. வேறு எந்தத் தகுதியும் தேவைப்பட்டிருக்கவில்லை'' என்கிறார்கள் கரன்ஸியின்றிப் புறக்கணிக்கப்பட்ட ஏழைபாளைகள்.
ரிஷிவந்தியம் ஒன்றியம் அந்தியூர் ஊராட்சியைச் சேர்ந்த சக்கரவர்த்தியின் மனைவி குணாவுக்கு வயது 31. இவருடைய தாயார் சாரதா. 1983லிருந்து 1998 வரை இந்த ஊரில் ஊட்டச்சத்து மையப் பொறுப்பாளராக இருந்தவர். இறந்த அவருடைய தாயாரின் பணியை கருணை அடிப்படையில் தனக்குத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் குணா.
குணா நம்மிடம், ""நேர்முகத் தேர்வில் நானும் கலந்து கொண்டேன். சிபாரிசு வேண்டுமென்றார்கள். அ.தி.மு.க.வில் நானே பெண்கள் பாசறைச் செயலாளர்தான். அம்மா எனக்கு எழுதிய கடிதம், அடையாள அட்டை, உறுப்பினர் அட்டை எல்லாவற்றையும் ஒ.செ. அருணகிரியிடம் கொடுத்தேன். எனக்குக் கிடைக்கவில்லை. உறுப்பினர் அட்டையை காண்பிக்காமல் இரண்டு மூன்று லட்சத்தை கொடுக்க முடிந்திருந்தால் கிடைத்திருக்கும். ஏழைகளுக்கு எப்படிக் கிடைக்கும்?'' பரிதாபமாகச் சொன்னார் பாசறை குணா.
வானாம்பட்டுக் காலனி ரவி, பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இவர் மனைவி சரிதா அங்கன்வாடி மைய உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டார். ஆளும்கட்சி நிர்வாகிகள் யாராவது சிபாரிசு செய்திருக்கிறார்களா என்று நேர்காணலில் கேட்டார்களாம்.
அதனால், அ.தி.மு.க. தெற்கு மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான குமரகுருவை நேரில் சந்தித்தேன். அவரோ "ஏம்ப்பா உன் மனைவியோட பெயர் லிஸ்ட்லயே இல்லியே. அப்புறம் எப்படி சிபாரிசு செய்ய முடியும்?' என்று என்னிடம் கேட்டார். அப்புறம்தான் மாவட்ட அளவிலான பணியாளர் தேர்வுப் பட்டியலை அ.தி.மு.க. மா.செ.க்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்தான் டிக் செய்து அனுப்புகிறார் என்ற விஷயம் எனக்குத் தெரிந்தது. இதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் முறை'' நொந்து கொண்டார் சரிதாவின் கணவர் பா.ஜ.க. ரவி.
திருநாவலூர் ஒன்றியம் வானாம்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் முருகவள்ளி நம்மிடம், ""ரெண்டு லட்சம் இருக்கா சொல்லு வேலை கிடைக்கும்னு கேட்டாங்க. அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன். சாபம்தான் என்கிட்ட இருக்கு'' பொங்கினார் முருகவள்ளி.
மாவட்டம் முழுதும் ஒரு ஒன்றியத்திற்கு 200 பணியிடமென 4000 பணியிடங்களும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் கனமான சிபாரிசுக்குப் பிறகே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதை மாவட்டம் முழுதும் கேட்க முடிந்தது.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணி என்ன சொல்கிறார்? பலமுறை ஆட்சியர் அலுவலகம் சென்றோம். பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றோம்; முடியவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் சண்முகமும், மா.செ. குமரகுருவும் பக்கபலமாக உள்ளனர்.
-எஸ்.பி.சேகர்