பழைய பகை!
கடந்த இரண்டு ஆண்டுகளாக 15 மீனவர்களைத் திட்டமிட்டு, ஏமாற்றி பாதிப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்நாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் முன்னாள் எம்.எல்.ஏ. குப்பனும்.
இரண்டு வருடம் முன்பு 2015-ல் ஏற்பட்ட பேய்மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பிற்குள்ளானது சென்னை -காசிமேடு அருகிலுள்ள நல்லதண்ணீர் ஓடைக்குப்பம்.
அப்போது அங்கே மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு சிறப்பு ஊதியமும், மீட்புப் பணிகளின்போது சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத் தொகையும் வழங்குவதாக கூறியது அரசு. கூறியபடி வழங்கவும் செய்தார்கள். ஆனால் 15 படகுக்காரர்களுக்கு மட்டும் தராமல் இரண்டு வருடமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தென்இந்திய மீனவர்நல சங்கத் தலைவர் கு.பாரதி நம்மிடம், ""இந்தக் குப்பத்தை இடித்தபோது அதற்குக் கடுமையான எதிர்ப்பு காட்டிய 15 பேருக்கு மட்டும் நிவாரணத் தொகையும் உதவித் தொகையும் வழங்காமல் பார்த்துக்கொள்கிறார்கள் ம
பழைய பகை!
கடந்த இரண்டு ஆண்டுகளாக 15 மீனவர்களைத் திட்டமிட்டு, ஏமாற்றி பாதிப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்நாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் முன்னாள் எம்.எல்.ஏ. குப்பனும்.
இரண்டு வருடம் முன்பு 2015-ல் ஏற்பட்ட பேய்மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பிற்குள்ளானது சென்னை -காசிமேடு அருகிலுள்ள நல்லதண்ணீர் ஓடைக்குப்பம்.
அப்போது அங்கே மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு சிறப்பு ஊதியமும், மீட்புப் பணிகளின்போது சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத் தொகையும் வழங்குவதாக கூறியது அரசு. கூறியபடி வழங்கவும் செய்தார்கள். ஆனால் 15 படகுக்காரர்களுக்கு மட்டும் தராமல் இரண்டு வருடமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தென்இந்திய மீனவர்நல சங்கத் தலைவர் கு.பாரதி நம்மிடம், ""இந்தக் குப்பத்தை இடித்தபோது அதற்குக் கடுமையான எதிர்ப்பு காட்டிய 15 பேருக்கு மட்டும் நிவாரணத் தொகையும் உதவித் தொகையும் வழங்காமல் பார்த்துக்கொள்கிறார்கள் முன்னாள் எம்.எல்.ஏ. குப்பனும் அமைச்சர் ஜெயக்குமாரும், இதுபற்றி மீன்வளத்துறை இயக்குநரிடம் கூறினோம்... அவரோ, இந்த 15 பேருக்கும் ஒதுக்கிய தொகையை வேறொரு வேலைக்கு மாற்றிவிட்டார்கள்'' என்று ரொம்ப கூலாகச் சொல்கிறார்.
""சென்னை பெருவெள்ளத்தில் சிக்கிக் கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உட்பட பலநூறு பேரைக் காப்பாற்றியவர்கள் நாங்கள். படகுகள் பழுதானதால் கடலுக்குப் போக முடியாமல் தவிக்கிறோம். எக்ஸ் எம்.எல்.ஏ.வும் அமைச்சரும் ஏன் எங்களை பழிவாங்குகிறார்களோ'' வேதனையோடு கேட்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவர்கள்.
-அருண்பாண்டியன்
பழைய தெய்வம்!
நாட்டுக் கலப்பையையும் நுகத்தடியையும் பிணை கயிற்றால் இணைத்து, அவற்றுக்கு சந்தனம் பூசி, குங்குமம் வைத்து தெய்வ விக்கிரகம்போல அலங்கரித்து அதை சாட்சியாக வைத்து, தனது மகன் திருமணத்தை நடத்தியிருக்கிறார் அரியலூர் மாவட்ட விவசாயி அன்பழகன்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ளது குவாகம் கிராமம். அன்பழகன்-சுலோச்சனா தம்பதியின் மகன் அன்பரசனுக்கும், கீழ மாளிகை அருணாசலம்-செந்தமிழ்ச் செல்வி தம்பதி மகள் துர்காதேவிக்கும் திருமணம். இந்த திருமணம்தான் கலப்பை-நுகத்தடியை சாட்சியாக வைத்து நடத்தப்பட்டது.
திருப்பூட்டியதும், கலப்பை -நுகத்தை மும்முறை சுற்றி வந்தபிறகு சொந்தம் சுற்றங்களின் வாழ்த்தைப் பெற்றார்கள் மணமக்கள்.
இந்த மணமக்களை வாழ்த்த வந்தோர் யாரும் பணமாக மொய் எழுதவில்லை. மாறாக, தென்னங்கன்றுகளையும், மாங்கன்றுகளையும் நெல், கேழ்வரகு போன்ற நவதானியங்களையும் ஆட்டுக்குட்டிகளையும் மாட்டுக் கன்றுகளையும் பரிசாக வழங்கி வாழ்த்தியது வித்தியாசமாக இருந்தது.
""பொங்கலன்றும் ஆயுதபூஜையன்றும் விவசாயக் கருவிகளான கலப்பை நுகத்தைதான் தமிழக விவசாயிகள் தெய்வமாய் வணங்குகிறார்கள். விவசாயிகளின் வணக்கத்திற்கு உரியது ஏர்தான். அதனால்தான், விவசாயிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் பொருட்டு இந்த திருமணத்தை கலப்பை-நுகத்தை தெய்வமாக வைத்து முன்நின்று நடத்தினேன்'' என்றார் இப்பகுதி ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத் தலைவர் விஸ்வநாதன்.
-எஸ்.பி.சேகர்
பழைய மாணவர்கள்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள புதுப்பேட்டையில் ஆயிரத்து நூறு மாணவர்கள் பயிலும் அரசு மேனிலைப் பள்ளியொன்று உள்ளது.
இது தொடக்கப்பள்ளியாக இருந்த காலத்தில், 500 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிய ஒரு ஆசிரியரின் பதினோரு பிள்ளைகளில் ஒருவர் சாமிநாதன். இவர் அதே பள்ளியில் பயின்றவர். இப்போது பொறியியல் துறையில் ஒரு தனி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த சாமிநாதனும், இதேபள்ளியில் பயின்று இப்போது தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் ஏழை நெசவுத் தொழிலாளியின் மகனான லோகநாதனும், தாங்கள் பயின்ற அரசுப்பள்ளியின் மேம்பாட்டிற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்று தாகம் கொண்டார்கள்.
இதேபள்ளியின் முன்னாள் மாணவர்கள் 160 பேருடன் வலைத்தளங்களின் வழியே இணைந்தார்கள். திட்டமிட்டார்கள். பள்ளிக்கல்வித்துறையின் அனுமதியும் பெற்றார்கள்.
பதினாறடி அகல மெயின்கேட், ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டி, புதிய டைல்ஸ் பதித்த ஆய்வுக்கூடம், புதிய விழாமேடை, பள்ளி கட்டடத்திற்கு புதிய வண்ணங்கள், பள்ளி வளாகத்தை 400 லோடு மண்ணால் உயர்த்தியது. தனி நூலகம், டிஜிட்டல் ஸ்மார்ட் கிளாஸ் என இருபது லட்சம் செலவில் அருமையான பணிகளை செய்து தாங்கள் பயின்ற பள்ளியை எழில்மயமாக்கியுள்ளார்கள்.
புதுப்பிக்கப்பட்ட இப்பள்ளியின் திறப்புவிழா பொங்கலன்று நடந்தது. மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் உட்பட அரசு அதிகாரிகள், வி.ஐ.பி.கள் வந்திருந்தனர். சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே ""நான் பயின்ற பள்ளிக்கு ஏதாகினும் செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தி விட்டீர்கள்'' என்று தொழிலதிபர் சாமிநாதனையும் டி.ஐ.ஜி. லோகநாதனையும், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களையும் வெகுவாகப் பாராட்டினார்.
-சுந்தரபாண்டியன்