மிழகம் முழுக்க உள்ள பக்தர்கள் மனதில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது கோயில்களில் ஏற்படும் தொடர்ச்சியான தீ விபத்துகள். அதல் முக்கியமானது, கடந்த 2-ந் தேதி நள்ளிரவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள வீரவசந்தராயர் மண்டப கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து.

meenashi-temple1

""திருச்செந்தூர்ல பிரச்சார மண்டபம் இடிஞ்சு விழுந்தது. ஒரு அப்பாவிப் பெண்மணி இறந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் ஈசுவரன் கோயில் தல விருட்சமான ஆலமரம் 7-2-18 அன்று தீப்பிடித்தது. கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கொடிமரத்தடியில் கியாஸ் சிலிண்டர் அடுப்பில் பால் காய்ச்சிக்கொண்டிருந்தபோது, சிலிண்டரின் ரப்பர் டியூப்பில் பற்றிய நெருப்பால் பெரிய பதட்டமேற்பட்டது. ஒரு வழியாக ஈரச் சாக்கைப் போட்டு கியாஸ் சிலிண்டர் வெடிக்காமல் காப்பாற்றி விட்டார்கள். எனினும் கொடிமரத்தில் கரிப்பிடித்ததை மிகப்பெரிய தோஷமாகவே பக்தர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இவைகளில் மிகப்பெரிய வேதனை மீனாட்சியம்மன் கோயில் ராயர் மண்டபத் தீ ஏற்படுத்திவிட்டது'' என்கிறார்கள் பக்தர்கள்.

பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளோ ""உள்ளே இருந்த கடைகளால்தான் தீப்பற்றியது எத்தனை தலைமுறைகளாக வியாபாரம் செய்திருந்தாலும் சரி அத்தனை கடைகளையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும்'' என்கின்றன.

பா.ஜ.க.வின் தமிழிசை சவுந்தரராஜனோ, ""இந்துக் கோயில்களில் மற்ற மதத்தினர் வியாபாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுரை கோயில் தீ விபத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும்'' என்கிறார்.

கம்யூனிஸ்டுகளோ ""இந்தத் தீவிபத்து பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள அத்தனை கோயில்களையும் தங்கள்வசம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இந்து அமைப்புகள் ஏதாவது சதி செய்கின்றனவோ?'' என்று சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

meenashi-templeபிரச்சினைகளும் சந்தேகங்களும் இறக்கை விரித்துப் பறக்கத் தொடங்கியதைக் கண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களைக் கூட்டினார்.

""தமிழகத்தில் முதல் கட்டமாக தொன்மையான கோயில்களில், தீத்தடுப்பு முறைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அறிக்கையை இரண்டு வாரங்களில் தர வேண்டும். கோயில் வளாகங்களிலும் சுற்றுச் சுவர்களை ஒட்டியுமுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஒவ்வொரு கோயில் அருகிலும் தீயணைப்பு வாகனம் எப்போதும் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். கோயில்களுக்கு துப்பாக்கிப் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்'' என்றெல்லாம் கட்டளைத் தீர்மானங்களைப் போட்டிருப்பதோடு, "தமிழக கோயில்களில் உள்ள 15 ஆயிரம் கடைகளையும் அகற்ற வேண்டும்' என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருந்து 115 கடைகளையும், ஒரே நாளில் காலி செய்யுமாறு உத்தரவிட... கடைக்காரர்கள் தங்கள் கடைப்பொருட்களோடு நடுத்தெருவில் நின்று கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

""சார் 300 வருஷமா இருக்கிற கடைகள் சார். கடைகளை வைத்துக் கொள்வதற்கு மன்னர் திருமலை நாயக்கரே பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதோ அந்த பட்டயம் பாருங்கள். (எல்லாருக்கும் அந்த செப்புப் பட்டயத்தைக் காட்டுகிறார்) என் தாத்தா, பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்தே வளையல் கடை வைத்திருக்கிறோம். நாங்கள் அம்பானி, அதானி இல்லீங்க சார்... சிறு வியாபாரி... அன்றாடங்காய்ச்சிகள் எங்களுக்கு மீனாட்சியம்மனைத் தவிர வேற துணைகூட கிடையாதே'' கதறிக் கொண்டிருக்கிறார் வளையல் கடைக்காரர் ராஜு.

இன்னொரு கடைக்காரர் சுதாகர். அவரோ, ""நாங்க நாலு தலைமுறையாக, தாலிக்கயிறு, குங்குமம், சாமி படங்கள், வளையல் விக்கிறோம். இதுக்கு முந்தி இதுமாதிரி எந்த தீ விபத்தும் ஏற்பட்டதில்லை. எனக்கு ஒண்ணுமட்டும் புரியலை. பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதற்காக கடைக்காரர்கள் மீது திட்டமிட்டு கோபம் கொண்டு காலிசெய்யச் சொல்கிறார்கள்? இங்கே வேற மதத்தவர்கள் யாரும் கடை வைக்கவில்லை. 115 கடைக்காரர்களும் இந்துமதத்தவரே. தமிழிசை போன்றவர்களின் அவசர அறிக்கையால் 115 கடைக்காரர்களும் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறோம்'' வேதனையைக் கொட்டினார்.

thiruvalangadu

Advertisment

நாசியின் தொடக்கத்தில் இருந்து உச்சந்தலை வரை திருமண் அணிந்திருக்கும், வெண்தாடிப் பெரியவரான கண்ணன் நம்மிடம், ""ஒருவரல்ல, இருவரல்ல, கோயில் கடைகளை நம்பி ஐயாயிரம் பேர் பிழைக்கிறார்கள். குங்குமம், விபூதி, மரப்பாச்சி பொம்மை, பிரசாதம், பூமாலை, கற்பூரம், சந்தனம், பன்னீர், விளக்கு என அனைத்துமே போச்சு சார். தீ பிடித்ததற்குக் காரணம் இன்னும் தெரியலை. கவர்னர் வருவதற்கு முன்பு சமையல்கூடத்தில் தீ பிடித்ததே! அணைத்தார்களே! அதுக்கு என்ன நடவடிக்கை? கடைக்காரர்களுக்கும் peopleநெருப்புக்கும் சம்பந்தமே இல்லை. அதிகாரிகள் செய்யும் தப்புக்கு நாங்கள் தடையாக இருக்கிறோம் என்பதற்காக எங்கள் மீது பழிபோடுகிறார்களோ?'' கண்கலங்கினார்.

கடையின் ஊழியரான குமாரோ... ""250 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தேன். என்னைப்போல 500-க்கும் மேற்பட்டோர் நடுத்தெருவில் நிற்கிறோம். சிலர் கட்சி வளர்ப்பதற்கு நாங்களா பலியாக வேண்டும்'' பொருமினார்.

Advertisment

குமாரின் அம்மா முருகாயி பிளாட்பாரத்தில் பூக்கடை வைத்திருக்கிறார். அவர் நம்மிடம், ""இன்னைக்கும் கோயில்ல கொள்ளை அடிக்கிறவன் அடிச்சிக்கிட்டுதான் இருக்கிறான். ஆனால் போலீஸ்காரர்கள் காலால் எத்திவிடுவதோ, எங்கள் கடைகளை இது கடையில்லை தம்பி எங்க வயிறு'' தேம்பினார் அந்த விதவைத் தாய்.

கோயிலுக்கு ஒரு விபத்து ஏற்பட்டால், அதற்கான காரணத்தை கண்டறியாமல் எதற்காக மதப்பிரச்சினைகளை கட்டவிழ்த்துவிடவேண்டும்.

கோயில்களும் தேர்த்திருவிழாக்களும் கொண்டாட்டங்கள்தானே? வியாபாரம் இல்லாமல் கொண்டாட்டங்கள் உண்டா? லட்டு இல்லாமல் திருப்பதியா? பஞ்சாமிர்தம் இல்லாமல் பழனியா? விபூதியும் நாமக்கட்டியும் வியாபாரமா?

குடிசைத்தொழில் போல வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளை ஒழுங்குபடுத்தாமல், ஒழிக்க நினைக்கலாமா? இதுதான் சிறு வியாபாரிகளின் கேள்விகளாக நம்மைத் துளைத்தன. அரசியல் லாபக்காரர்கள் நட்டமடைந்து நடுத்தெருவில் விற்பவர்கள் கடைசியாக நம்பியிருப்பது அந்த மீனாட்சியைத்தான்!

-அண்ணல்

மீட்கப்படுமா?

நெல்லை வாசுதேவநல்லூர் சங்கரநாராயணன் கோயில் சொத்துக்கள் குறித்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்...

""இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமாக 36 ஆயிரத்து 590 கோயில்களும், 56 மடங்களும் 1721 அறக்கட்டளைகளும், 17 சமண கோயில்களும் உள்ளன.

இவைகளுக்குச் சொந்தமாக ஒரு லட்சத்து 83 ஆயிரம் ஏக்கர் நன்செய்யும் 2 லட்சத்து 18 ஆயிரம் ஏக்கர் புன்செய்யும் மானாவாரி மற்றும் தோட்டம்துரவுகளாக 4 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் நிலமும், 22 ஆயிரத்து 600 கட்டடங்களும் 33 ஆயிரத்து 838 மனையிடங்களும் உள்ளன. தமிழக கோயில் சொத்துக்களான இவை யார், யார் வசமுள்ளன என்பது குறித்து பத்திரிகைகள், இணையதளங்கள், விளம்பரப் பலகைகளில் வெளியிட வேண்டும். கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்புச் செய்தவர்களைக் கண்டறிந்து அவற்றை மீட்பதற்கு குழு அமைக்க வேண்டும்.

கோயில் சொத்துகளின் காவலனாக இருக்கவேண்டிய இந்துசமய அறநிலையத்துறை தனது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கக் கூடாது.

கோயில் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தி நான்கு வாரத்திற்குள் அறிக்கை தரவேண்டும்'' என்று உத்தரவிட்டிருக்கிறது.

-வயலான்