school

மிழ்நாடு பள்ளிக்கல்வி புதிய பாடத்திட்ட ஆய்வுக்குழு கூட்டத்தில் சமீபத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கான பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான கூட்டமாக இது இருந்தது. இதுவரையில் பாடத்திட்டங்களை வடிவமைக்க வெறும் கல்வித்துறை சார்ந்தவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். அதனை மாற்றி பலதரப்பட்ட துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை அழைப்பது என்ற முடிவின் பெயரில் ஒவ்வொரு துறை சார்ந்த, கல்வித்துறைக்கு வெளியே உள்ளவர்களும் கலந்துகொள்ள வகை செய்தார்.

மேலும் அவரே நேரடியாக களத்தில் இறங்கி பாடங்கள் எப்படி இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையாக புதிய தரத்துடன் மாணவர்களின் வாசிப்பு மற்றும் உள்வாங்கும் திறனையும் மேம்படுத்தி நடைமுறையில் இருக்கும் கல்வித் தரத்தை மேம்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தினார். இன்றைய சூழலில் பாடத்திட்டங்கள் மிகவும் பின்தங்கியிருப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் திறனும் மிக பின் தங்கி இருப்பதை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒப்புக்கொண்டனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சாராத வரலாற்றாய்வாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் சார்ந்த ஒன்றாக இருந்தது. அது தொடர்பான பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

gschool

பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தின் ஒருபகுதியாக கற்பிக்கப்படும் வரலாறு பாடமானாலும் சரி, கல்லூரிகளில் கற்பிக்கப்படும் வரலாறானாலும் சரி. ஏன் மிக பின்தங்கி இருக்கிறது? ஆசிரியர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்த கருத்துகள் பரிமாறிக்கொள்ளப் பட்டன. குறிப்பாக இன்றைக்கு தமிழகப் பள்ளிகளில் மொழிப்பாடங்களைவிட வரலாறு பாடம் நடத்தும் ஆசிரியர்களின் பாடம் நடத்தும் முறை மேலோட்டமான வாசித்தல் முறையாகத்தான் இருக்கிறது.

Advertisment

உதாரணமாக இந்தியா 1947 ஆகஸ்டு 15-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது என்பதை வெறும் தகவலாகச் சொல்லிவிட்டு செல்லும் நிலைதான் இருக்கிறது. அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள், ஏன் அவ்வளவு காலம் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தது. சுதந்திர போராட்டங்கள், பலரின் தியாகங்கள், சுதந்திரம் என்பது என்ன? இப்படியான விரிவாக்கத்துடன் ஆசிரியர்கள் அதனை பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் விளக்குவதில்லை. ஆகவே சமூக அறிவியல் பாடத்தின் மொத்த அமைப்பையும் மாற்றி புதுமையான முறையில், புதிய தகவல்களோடு பாடத்தை வடிவமைக்கலாம் என்ற முறை முன்மொழியப்பட்டது. மேலும் சமீபகாலங்களில் நிகழ்ந்த வரலாற்று ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றைச் சேர்ப்பது, வடஇந்திய வரலாற்றைப் பற்றி குறிப்பிடும் தருணத்தில் அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவில் -தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதை பற்றிய வரலாறையும் விரிவாகப் பதிவு செய்யவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு அதன்படியே நிறைய தகவல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இன்றைக்குப் பள்ளிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி இருக்கும் "ஸ்மார்ட் வகுப்பு' என்னும் கணினிவழி கற்பித்தல் முறையில் வரலாறு பாடத்தையும் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை நான் முன்வைத்தேன். அது பின்னர் பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதாவது வரலாற்றுக்குறிப்புகளை, தகவல்களை அது நிகழ்ந்த இடங்களை பிம்பங்களாக, படங்களாக கணினித் திரையில் காட்டுவது, மேலும் நிலப்படங்களை அறிமுகம் செய்யும்போது "கூகுள்' நிலப்படத்தை மாணவர்களின் மத்தியில் அறிமுகப்படுத்தி நிலப்பகுதிகளை இன்னும் தெளிவாக அவர்கள் புரிந்து கொள்ள வகைசெய்தல். இது நிச்சயமாக வரலாற்று பாடத்தை கற்பித்தல் முறையில் புதுமையான நடவடிக்கையாக இருக்கும். அது வருங்காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியம் இருக்கிறது.

இம்முறை மரபார்ந்த பாட வரைவுமுறை மாற்றப்பட்டு ஒரு தலைப்பு சார்ந்த பலதரப்பட்ட அசல் நூல்களிலிருந்து மேற்கோள்களும், தகவல்களும் எடுக்கப்பட்டு, அவை மாணவர்களுக்கு புரியும் வகையில் படைப்பாக்கத்துடன் மாற்றப்பட்டு தற்கால கண்டுபிடிப்புகளோடும், அசலான தரவுகளோடும் சரி பார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. ஆசிரியர்களுக்கு பாடம் குறித்த புரிதலும், தெளிவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. புதிய பாடத்திட்டம் மாற்றம் குறித்த உரையாடலுடன், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும், ஆலோசனைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் குறைந்து வருவதன் மூலம் பல ஆரம்ப பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஒரு தலைமுறைக்கே கல்வி மறுக்கப்படும் வாய்ப்பு உருவாகும். மேலும் இன்றைய சூழலில் சமூகத்தின் கடைநிலை மனிதனுக்கும் இலவசமாக கல்வி அளிப்பவை அரசுப்பள்ளிகள். புற்றீசல்போல் பெருகிவரும் தனியார் பள்ளிகள் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் கட்டணக்கொள்ளை அடித்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை காலி செய்து வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். மேலும் அரசுப்பள்ளிகளை காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

1. தனியார் பள்ளிகளைப் போன்று உட்கட்டமைப்பு வசதிகள் (சிறந்த கழிவறைகள் உட்பட) மேம்படுத்தப்பட வேண்டும்.

2. ஆசிரியர்கள்- மாணவர்கள்- பெற்றோர் உறவு முறை இன்னும் சீராக்கப்பட வேண்டும்.

3. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு "நாக்' என்னும் தேசிய தர கவுன்சில் இருப்பது போன்று மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உறுதிசெய்ய சுதந்திரமான தரக் கட்டுப்பாட்டு கவுன்சில் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். அது வருடந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி அதன் தரத்தை உறுதிப்படுத்தும்.

4. தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்.

5. சமச்சீர் பாடத்திட்டம் போன்று பள்ளிகளின் பெயரிலும் சமச்சீர் கொண்டு வரப்பட வேண்டும்.

6. ஆசிரியர்கள் தேர்வு முறை மற்றும் தரத்திலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களுடன் மேற்கண்ட அம்சங்களை அமல்படுத்தினால் அரசுப் பள்ளிகள் மூடப்படாமல் காப்பாற்றப்படுவதோடு அரசுப் பள்ளிகளின் தரமும் மேம்படும்.