மக்களின் மனக்கொதிப்பை தணிக்கவோ, விவசாயத்தைக் காக்கவோ மத்திய-மாநில ஆட்சியாளர்கள் மனது வைப்பதாகத் தெரியவில்லை. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் 100 பேருடன் தொடங்கியது ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம். உடனடியாக, அது உக்கிரமாகியது. தமிழ்நாட்டை மட்டுமின்றி உலகளாவிய தமிழர்களையும் களத்தை நோக்கித் திருப்பியது.
போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தன. மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு உறுதிகள் அளிக்கப்பட்டாலும், "திட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தால்தான் கைவிடுவோம்' என்று அறிவித்தார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைத்துப் பேசியும் முடிவுக்கு வரவில்லை.
பின்னர் சுகாதாரத்துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியர் கணேஷும் வந்து பேசி உறுதி அளித்தனர். மாணவர்களின் தேர்வும் நெருங்கியது. இதையடுத்து, 22-ஆவது நாளில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில், மார்ச் 27 ஆம் தேதி ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து மீண்டும் ஏப்ரல் 12-ஆம் தேதி இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கியது.
174 நாட்கள் இந்தப் போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்களை பிளவுபடுத்தவும், தீவிரவாதிகளைக் காரணம் காட்டி போராட்டத்தை ஒடுக்கவும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. எல்லாவற்றையும் கடந்து போராட்டம் தீவிரமடைந்தது. 2017 அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டாவது முறையாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சில நாட்களில் மீண்டும் தொடங்கிய போராட்டத்தில் குறிப்பிட்ட சில கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். அதாவது, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு, வாணக்கன்காடு, கருக்காகுறிச்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளை அகற்றவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தனர்.
அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு அரசு சார்பில் இரண்டு உறுதிகள் அளிக்கப்பட்டன. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, நிலத்தை மறுசீரமைத்து ஒப்படைக்க பரிந்துரை செய்யப்படும் என்பது முதல் உறுதி. ஆழ்குழாய்க் கிணறுகளையும், தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் மூடி 9 மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இரண்டாவது உறுதி.
காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் நடவடிக்கை கைவிடப்படுகிறது என்று 2015 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எந்த நிறுவனத்திற்கும் மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கப்படாது என்று அரசு கூறியது. ஆனால், மேற்படி ஊர்களில் ஆழ்குழாய்க் கிணறுகளை மூட மத்திய மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மீண்டும் இந்தப் போராட்டம் தொடங்குவதற்கு அரசுகளே வழி ஏற்படுத்துவதாக விவாசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த இந்த போராட்டத்தை கட்சி சார்பில்லாமல் தொடங்கி நடத்துவதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், ராஜாபரமசிவம், சுவாமிநாதன், இன்றைய எம்.எல்.ஏ. மெய்யநாதன் ஆகியோர் கவனமாக இருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆரோக்கியராஜ் நம்மிடம் பேசினார்...…
""மாவட்ட ஆட்சியர் கணேஷ் மூலமாக அரசு அளித்த உறுதிமொழிப்படி ஆழ்குழாய்க் கிணறுகளை அகற்றி, நிலத்தை சீரமைத்துக் கொடுத்திருக்க வேண்டும். 9 மாதங்கள் ஆகியும் உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. அரசாங்கம்தான் எங்களை மீண்டும் போராடத் தூண்டுகிறது''’ என்றார்.
தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் பேசும்போது...
""ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை அரசு அனுமதிக்கவில்லை. இனியும் தீர்மானத்தை கொண்டுவர தயாராக இருக்கிறோம். ஒருவேளை ஆளுங்கட்சியே அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தாலும் ஆதரிப்போம். எங்கள் உயிர் இருக்கும்வரை இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்''’என்றார்.
விவசாயத்தை விடமுடியாது. நிலத்தைக் கொடுக்க முடியாது என்று போராடிவரும் சுப்பிரமணியன் பேசும்போது...…
""எனது நிலத்தை சுற்றிலும் உள்ள நிலத்தை ஆசை வார்த்தை கூறி குத்தகைக்கு வாங்கினார்கள். எனது நிலத்தையும் அளந்து கல் ஊன்றினார்கள். ஆனால், நான் எதிர்த்துப் போராடி ஊன்றிய கல்லை பிடுங்க வைத்தேன். அதன்பிறகு எத்தனையோ ஆசை வார்த்தை காட்டினார்கள். நான் தொடர்ந்து மறுத்தேன். அந்த நிலையில்தான் ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடங்கியது. விவசாயத்தை அழிக்க வரும் எந்த திட்டத்திற்கும் நிலத்தை கொடுக்கமாட்டேன்''’என்றார்.
இதனிடையே, கீரமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கணேஷ் பங்கேற்றார். அவரிடமே "அரசு அளித்த உறுதிமொழி ஏன் நிறைவேற்றப்படவில்லை' என்று தங்க.கண்ணன் என்பவர் மனுவாகவே அளித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆட்சியர் கணேஷ், "கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் கிணறுகள் மூடப்படும்' என்றார்.
ஒரு ஆண்டு கடந்தும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்கள் அரசாங்கத்தின் அதிகாரிகள்.
-இரா.பகத்சிங்