""நாங்க எல்லோரும் கூலி வேலை பார்க்குறவங்க. இப்படி திடீர்னு வீட்டை இடிக்க வந்தா எங்கே போவோம்?'' என குமுறுகிறார்கள் ஆற்றோரமாய் வாழும் மக்கள்.
கடலூர் நகரத்தின் மையப்பகுதியில் கெடிலம் ஆற்றங்கரை ஓரத்திலுள்ள புதுப்பாளையம், ரெட்டைப்பிள்ளையார் காலனி, வன்னியர்பாளையம், வண்ணாரபாளையம் ஆகிய பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி ஆற்றோரம் கரைகள் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தின்போது ஊருக்குள் வெள்ளம் புகுந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு தீர்வுகாணும் வகையில் வெள்ளத்தடுப்பு கரை அமைக்க அரசு முடிவெடுத்தது. மத்திய அரசின் நபார்டு திட்டத்தின்கீழ் கடலூர் அண்ணா மேம்பாலத்திலிருந்து சில்வர் பீச் வரை 2 கிலோமீட்டருக்கு கரைகளை பலப்படுத்துவதற்காக ரூ 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.
அதையடுத்து கெடிலம் ஆற்றங்கரையோரம் உள்ள புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை வீடுகளை காலி செய்ய மாட்டோம் எனவும் கூறி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 09-ஆம் தேதி காலை கரையோரமுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் இயந்திரங்கள் கொண்டு இடித்தனர். அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்களும், அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. தவிர மற்ற அரசியல் கட்சியினரும் புதுப்பாளையம் நியூசினிமா எதிரே சாலை மறியல் செய்தனர். அதேசமயம் தங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுகளை இடித்துவிடுவார்களோ என அச்சமடைந்த பெண்கள் உட்பட 10 பேர் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினரும், கட்சியினரும் தடுத்து சமரசம் செய்தனர்.
தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சர்க்கியூட் ஹவுஸில் இருப்பதாக போராட்டக்காரர்களுக்கு தகவல் கிடைக்கவே அங்கு சென்று சம்பத்திடம் முறையிட்டனர். அதற்கு சம்பத், ""நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால் பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார் நம்பிக்கையுடன்.
இதுகுறித்து புதுப்பாளையத்தை சேர்ந்த சுந்தராம்பாள் நம்மிடம், ""நான் பிறந்தது பாண்டிச்சேரில. 40 வருசத்துக்கு முன்னால இங்க வந்து கல்யாணம் கட்டிக்கிட்டேன். நான் வர்றதுக்கு முன்னாலயே என் கணவர் வீடு இங்கேதான் இருந்தது. என் பிள்ளைகள் பிறந்து, வளர்ந்தது இங்கேதான். பிள்ளைக்கு திருமணமாகி அதுக்கும் குழந்தைகள் பிறந்தது இங்கேதான். இன்னிக்கு திடீர்னு வந்து எல்லோரும் காலி பண்ணுங்கங்கன்னா நாங்க எங்கே போறது..? வாடகைக்கு வீடு பார்க்கலாம்னா...…"அணைமோடு காரங்களா'ன்னு வீடு குடுக்கறதுக்கே யோசிக்கிறாங்க. அப்படியும் தேடி அலைஞ்சி வீட்டை புடிச்சா… நாங்க இம்புட்டு பேரும் வீடு கேட்கறதால 1000/-க்கு போன வாடகை வீட்டுக்கு 30 ஆயிரம் அட்வான்சுங்கறாங்க. நானே வீட்டு வேலைக்குதான் போறேன். பசங்க கொத்தனார் வேலைக்கு போகுதுங்க. திடீர்னு 30 ஆயிரம் ரூபான்னா எங்கே போவறது..?'' என கலங்குகிறார்.
புதுப்பாளையம் ரமேஷ் என்பவரோ, ""எங்களுக்கு முன்னால இரண்டு தலைமுறை முன்னோர் இங்கேதான் வாழ்ந்தாங்க.… திடீர்னு மூணுநாளைக்கு முன்னாடி ஆட்டோ விளம்பரம் செய்து காலி பண்ணுங்கன்னாங்க. அடுத்து ரெண்டு நாள் கழிச்சி இடிக்க வந்துட்டாங்க. நாங்க காலி பண்ணலைன்னு சொல்லல. எங்களுக்கு நகரப்பகுதிலேயே மாற்று இடம் கொடுக்கணும். மேலும் ஒரு வீடு கட்டற அளவுக்கு நிதி உதவி செய்யணும். அதை சீக்கிரமா செய்துட்டா காலி பண்ண தயாரா இருக்கோம்'' என்கிறார்.
அதேசமயம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.
இப்படியான பாரபட்ச ஆக்கிரமிப்பு குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி பாலு நம்மிடம், ""நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகள் அகற்றுகிறோம் என சொல்லும் அதிகாரிகள் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், பங்களாக்கள், ஹோட்டல்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை அகற்றுவதில்லை. பணத்தை வாங்கிக்கொண்டு ஆற்றை, ஆற்றுக்கரையை பட்டா போட்டு கொடுத்தவர்கள்தான் இந்த அதிகாரிகளும், ஆட்சியாளர்களும். அப்படியிருக்க எளிய மக்களின் வீடுகளை இடித்து, அவர்களுக்கு மாற்று இடமோ, வீடு கட்ட நிதி உதவியோ அளிக்காமல் அகதிகளைப்போல அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்'' என்கிறார். .
இதுகுறித்து கடலூர் சப்-கலெக்டர் ஜானி டாம்வர்கீஸிடம் விளக்கம் கேட்டதற்கு, ""மழை வெள்ள பாதிப்புகளை கருதியும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடுத்த மழை வருவதற்குள் ஆற்றின் கரையை கட்ட வேண்டும். அதற்காகத்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டப்படுகிறது. பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் தரவும், வீடு கட்ட திட்டங்கள் செயல்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது'' என்றார்.
மாற்றுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல் வீதியில் நிர்க்கதியாய் நிற்க வைப்பதும், வசதி படைத்தவர்களுக்காக அதிகாரிகள் மட்டுமல்லாது ஆற்றையும் வளைப்பது அநீதியல்லவா?
-சுந்தரபாண்டியன்