வெள்ளியால் ஆன கற்களை பூசை செய்து ஆகஸ்ட் 05ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டு வதற்கான அடிக்கல் நாட்டியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இதே நாளில்தான் கடந்த ஆண்டு, இந்திய அரசமைப்புப் பிரிவு 370 ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்த சிறப்பு நிலையை குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் நீக்கியும், அதன் மூலம் அம்மாநிலத்தில் அயலார் எவரும் சொத்து வாங்குவதைத் தடுக்கும் பிரிவு 35ஏ-வும் ரத்தும் செய்த மோடி அரசு, அம்மாநிலத்தில் இருந்து லடாக் பகுதியைப் பிரித்து இரண்டு பகுதிகளையும் இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியது. ஆனால் அப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த ஓராண்டில் இவர்கள் சாதித்தது என்னவென்றால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் அனைவரையும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஒரு இயக்கமற்ற நிலையை ஏற்படுத்தியதுதான்.
அதே நாளை ஓராண்டிற்குப் பிறகு தேர்வு செய்து இப்போது இராமருக்கு கோயில் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி முடித்துள்ளனர். இந்நாடே கொரோனா தொற்றுப் பரவலுக்கு எதிரான முழு முடக்கத்தால் நாட்டு மக்களின் வாழ்வு முழுமையாக முடக்கப்பட்டு விட்ட நிலையில், வேறு எந்த கோயில் நிகழ்விற்கும் அனுமதி அளிக்கப்படாத சூழலில் இந்நிகழ்வை ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க. வினர் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் மோடி, அயோத்தியில் இராமர் ஜன்ம பூமியை மீட்பதற்கு பல நூற்றாண்டுகளாக நடந்த போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது என்றும், அப்போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களுக்கு வணக்கம் செலுத்திக் கொள்வதாகவும் கூறியுள்ளார். அவர் குறிப்பிடுவது இராம் ஜன்ம பூமி இயக்கத்தைத்தான் என்பதை புரிந்துகொள் வது கடினமல்ல.
ஆனால் இன்றைக்கு இராமர் கோயில் கட்டு மானத்திற்கு அடிக்கல் நாட்டும் அந்த இடத்தில் இராமர் பிறந்ததற்கோ அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்ததற்கோ அல்லது அந்த கோயில் இடிக்கப்பட்டு அதன் மீது இவர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி கட்டப்பட்டதற்கோ அந்த வரலாற்று ஆதாரத்தையும் இந்நாடும் பார்க்கவில்லை, இந்நாட்டின் உச்ச நீதிமன்றம் வரை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவும் இல்லை.
பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் அவர்கள் சார்ந்த சங்க பரிவாரங்களுக்கும் ஆகஸ்ட் 05 எப்படி வரலாற்றுப் பெருமைமிக்க நாளோ அதைவிட அதிகமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகஸ்ட் 09 ஆகும். ஆம், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 தேதியன்றுதான் இந்நாட்டின் மக்கள் தொகையில் 52% உழைக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் 27% இட ஒதுக்கீடு செய்யும் உத்தரவை அன்றைய பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்தார்.
அந்த நாளில் டெல்லியில் கலவரத்தை தூண்டிய சங்க பரிவாரங்கள், ஒரு மாணவர் மீது தீயை மூட்டி கொளுத்திவிட்டு, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அவர் தீக்குளித்துவிட்டதாக பரப்புரை செய்தனர். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முடிவு இந்திய சமூகத்தை சாதி ரீதியாக பிளக்கும் முடிவு என்று ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவந்த பாஜகவின் தலைவர் எல்.கே. அத்வானி கூறினார். பா.ஜ.க.வின் நிலைப்பாட்டையே அன்றைய எதிர்க்கட்சியான காங்கிரஸூம் அதன் தலைவர் ராஜீவ் காந்தியும் எடுத்தனர். இட ஒதுக்கீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி 10 மணி நேரம் பேசினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் வசந்த் சாத்தே, இட ஒதுக்கீடு தகுதி திறமைக்கு எதிரானது என்று பேசினார். பா.ஜ.க. தலைவர் வாஜ்பாயின் பேச்சும் இதே அடிப்படையில் இருந்தது.
ஆனால் நாடு முழுவதும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு நாளும் பெருகி வந்தது. இதனைக் கண்ட அத்வானி, இராம் ஜன்ம பூமி இயக்கத்தை கையில் எடுத்தார். அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்துவிட்டு அவ்விடத்தில் இராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் இரத யாத்திரையை முன்னெடுத்தார். அரசியல் ரீதியானதொரு திசை திருப்பல் நடவடிக்கையே இராம் ஜன்ம பூமி இயக்கமாகும்.
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்றச்செயலைப் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் ஆணையத்தின் முன் சாட்சியளித்த வி.பி.சிங் அவர்கள், ""நீங்கள் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு உத்தரவை திரும்பப் பெறுவேன் என்று உத்தரவாதம் அளித்தால் நான் அத்வானியிடம் பேசி இரத யாத்தியரையை நிறுத்துகிறேன்'' என்று பாஜக தலைவர் வாஜ்பாய் வந்து பேசியதை சாட்சியமாக அளித்துள்ளார். குஜராத் மாநிலத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தில் இருந்து தனது இரத யாத்திரையை அத்வானி தொடங்கினார். இரத யாத்திரையா? இரத்த யாத்திரையா? என்று கேட்கும் அளவிற்கு அந்த யாத்திரையை வைத்து மதக் கலவரத்தை சங்க பரிவாரங்கள் தூண்டிவிட்டு நடத்தின. ஆனால் பிரதமர் வி.பி.சிங் வளைந்து கொடுக்கவில்லை. இரத யாத்திரை தொடர்ந்தது. எனது மாநிலத்திற்குள் நுழைந்தால் இரத யாத்திரையை நிறுத்துவேன், அத்வானியை கைது செய்வேன் என்று அன்றைய பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் அறிவித்தார். அப்படித் தங்கள் இரத யாத்திரை நிறுத்தப்பட்டால் வி.பி.சிங் ஆட்சிக்குக் கொடுத்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று வாஜ்பாய் அறிவித்தார். அப்படியே நடந்தது.
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொண்டு 88 தொகுதிகளில் வென்ற பா.ஜக., இரத யாத்திரை நிறுத்த பட்டதைக் காரணம் காட்டி ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. இப்படியான சூழலை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அப்போது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களில்தான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியும் பாஜக தலைவர் வாஜ்பாயும் ஒரே குரலில் பேசினர்.
இறுதியாக, நவம்பர் 09ஆம் தேதியன்று விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசினார் பிரதமர் வி.பி.சிங். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடங்கள் அரசுப் பணி களில் கொடுப்பதற்குரிய நியாயங்களை ஆணித்தரமாக நிலைநிறுத்திப் பேசினார். முன்னிரவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.195 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸும், 88 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.வும் இணைந்து வாக்களித்து சமூக நீதியை நிலைநிறுத்திய வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்தினர்.
இராம் ஜன்ம பூமி இயக்கத்தின் பின்னால் உள்ள சமூக நீதிப் போராட்டத்தின் வரலாறு இதுவாகும். அவர்களால் ஆட்சியைக் கவிழ்க்க முடிந்தது, ஆனால் வி.பி.சிங் பிறப்பித்த உத்தரவை வீழ்த்த முடியவில்லை. இந்திய உச்ச நீதிமன்றத்தின் 11 நீதிபதிகள் கொண்ட அரசமர்வு 6-5 என்ற ஆதரவுடன் 27% இட ஒதுக்கீடு ஏற்புடையது என்று 1994இல் தீர்ப்பளித்தது.
அதன்பிறகு 1991இல் நடந்த தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதனால் உண்டான அனுதாப அலையால் வென்ற காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பி.வி.நரசிம்மராவ் தலைமையில் பதவியேற்றது. மதவாத அரசியலை முன்னெடுத்த பா.ஜ.க.வின் பலம் 88இல் இருந்து 120 இடங்களாக அதிகரித்தது. அப்போது உ.பி.யில் பா.ஜ.க.வின் கல்யாண்சிங் தலைமையில் ஆட்சி நடந்தபோது 1992இல் பாபர் மசூதி இடிக் கப்பட்டது.
அதிலிருந்து பா.ஜ.க. வின் மதவாத அரசியலுக்கு ஆதரவு பெருகி அதன் வாக்கு வங்கி தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2014இல் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கவும் அடிப்படையாக இருந்தது. ஆனால் இதற்கெல்லாம் வித்திட்ட அத்வானி, அயோத்தியில் இராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்படவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானியுடன் முன்னின்ற முரளி மனோகர் ஜோஷியும் அழைக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் பேச்சிலும் அத்வானியைப் பற்றிக் குறிப்பிடவில்லை!
இதுவரை இராமருக்கு மட்டுமல்ல, எந்த தெய்வத்திற்கு கோயில் கட்டினாலும் அது வேறொரு வழிபாட்டுத் தலத்தை இடித்துக் கட்டப்பட மாட்டாது, அப்படியொரு வழமை இந்நாட்டில் இல்லை. அது போலவே இந்நாட்டில் நிலைத்து நிற்பது எல்லாமே தாங்கள் வணங்கும் தெய்வத்தின் மீது உண்மையான பக்தி கொண்ட மெய்யன் பர்களால் கட்டப்பட்டதே. கோயில் கட்டுதல் புனித செயலாகவே கருதப்படுகிறது. கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் அது எவ்வாறு யாரால் கட்டப்படுகிறது என்பதைப் பொறுத்தே நீடித்து நிற்கிறது. அப்படி நிற்கும் கோயில்கள் அனைத்திலும் பக்தியே அடிப்படையாக இருக்கிறது.