புதுக்கோட்டை மாவட்டம் சம்மட்டிவிடுதி ஊராட்சி மேலவிடுதி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ராஜா. ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத ராஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விமலா. திருமணமான ஆறே மாதத்தில் ராஜாவின் இரண்டாவது காலையும் அகற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. இதனால் தங்களது மகள் விமலாவை தங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்றுவிட்டனர் அவரது பெற்றோர்கள்.

minister

ராஜாபடும் துயரங்களைக் கேள்விப்பட்டு, தனது வீட்டிலிருந்து கிளம்பி மேலவிடுதிக்கே வந்த விமலா, தனது குழந்தைக்கும் மேலாக ராஜாவுக்கு பணிவிடைகள் செய்து ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்தனர். இவர்களின் வீட்டில் கழிவறை இல்லாதது அதைவிடக் கொடுமை.

இந்த அவலத்தை "மக்கள் பாதை' அமைப்பின் ராமதாஸ் மூலம் கேள்விப்பட்டு, மேலவிடுதி கிராமத்திற்குச் சென்று, ராஜா-விமலா தம்பதியின் நிலையைப் பார்த்து நக்கீரன் இதழில் செய்தியாக வும் இணையதளத்தில் வீடியோவாகவும் வெளியிட்டோம். இதைப் பார்த்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட சேர்மன் ஜெயலட்சுமி ஆகியோர் அந்த தம்பதிகளுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்தனர். கொடையுள் ளம் கொண்டோர்கள் ராஜா-விமலாவை நேரில் சந்தித்து தங்களால் ஆன உதவி களையும் செய்தனர்.

இந்த நிலையில்தான் புதுக் கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி, வருவாய்த்துறை அதிகாரிகளை மேலவிடுதிக்கு அனுப்பி ஆய்வு செய்தபின், சமீபத்தில் அந்த தம்பதிக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார். விமலாவையும் வெகுவாகப் பாராட்டி, சால்வை அணிவித்து கௌரவித்தார். கலெக்டருடன் சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் முருகப்பன் ஆகியோர் முகங்களில் மகிழ்ச்சிப் பரவசம்.

கலெக்டரின் இந்த கருணை நடவடிக்கையைக் கேள்விப்பட்ட மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கரும் கடந்த வாரம் ஒரு விழாவுக்குச் சென்றபோது, ராஜா வை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து, 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்கி மகிழ்ந்தார். இதை வாங்கியதும் ராஜா-விமலா தம்பதியின் முகங்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி வெள்ளம் ஓடியது. நக்கீரனுக்கும் நக்கீரனால் உதவியவர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார் ராஜா.

-இரா.பகத்சிங்