தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திலுள்ள தொப்பூர் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்ச்செல்வன், ஜீவா, சசிதரன் மூவரும் 11-ஆம் வகுப்பு படித்துவருகின்றனர். தன்னுடன் அதே பள்ளியில் படிக்கும் ரித்திகா என்ற தோழியைப் பார்ப்பதற்காக இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள எருமப்பட்டிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கின்றனர். தோழியிடம் பேசிவிட்டு மேச்சேரி செக்போஸ்ட் அருகே சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது எருமப்பட்டி வழியாக செல்லும்போது சாலையில் பொலிரோ காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வந்து அந்த பைக் மீது மோதியுள்ளது. உடனடியாக காரிலிருந்து இறங்கி வந்த அந்த கும்பல் ஜீவாவைப் பிடித்துக் கொண்டு, “"கீழ்சாதி நாய்களுக்கு எங்க வீட்டு பொண்ணுங்க கேட்குதோ, இந்த கால் இருந்தாத்தானே வந்து பேசுவீங்க, இதை எடுத்துட்டா'…” என ஜீவாவின் கால், கை இரண்டையும் கொடூரமான முறையில் வெட்டியுள்ளனர். தமிழ்ச்செல்வன், சசிதரன் இருவரையும் அடித்து பக்கத் திலுள்ள புதருக்குள் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். சாலையில் வந்தவர்களின் உதவியால் இவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட் டுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு தர்மபுரி மருத்துமனையில் முதலுதவி கொடுக்கப் பட்டு பின்னர் போதிய வசதியில்லை என தெரிவித்து சேலத்திற்கு தமிழ்ச்செல்வனையும், சென்னைக்கு ஜீவாவையும் அனுப்பிவைத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
தர்மபுரி தொப்பூர் காவல்நிலையத் தைச் சேர்ந்த எஸ்.ஐ சம்பத்குமார் முதல் தகவல் அறிக்கையில், தர்மபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கொடுத்த அழுத்தம் காரணமாக மாணவர்கள் சொன்னதை எழுதாமல் மாற்றி எழுதிவிட்டாராம். மூன்று மாணவர்களும் இரு டூவீலரில் வந்துகொண்டு இருக்கும்போது மினி எய்சர் லோடு வண்டி அதிவேகமாக வந்து மோதியதில் அந்த வண்டியிலிருந்த இரும்புக் கம்பி பட்டதால் கால் துண்டானது என எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வழக்குபதிவு செய்யாமல் காலம்தாழ்த்தி வந்த தொப்பூர் காவல்துறை. பிறகு இந்த வழக்கை முடிப்பதற்காக, திட்டமிட்ட கொலைமுயற்சியை விபத்தாக மாற்றி முதல் தகவல் அறிக்கை பதிந்துள் ளது. இன்ஸ்பெக்டர் சர்மிளாபானுவும், டி.எஸ்பி வரையிலா னவர்களும் சேர்ந்து கொலை முயற்சியை மூடிமறைத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜீவா கூறுகையில், “"அவர்கள் சொல்வது அத்தனையும் பொய், பொலிரோ காரில் வந்த கும்பல் எங்களுடைய டூவிலரில் இடித்தது உண்மைதான். ஆனால் எங்களுக்கு அப்போது ஒன்றும் ஆக வில்லை. காரிலிருந்து வந்தவர்கள்தான் எங்களை சாதிப் பேரைச் சொல்லி என் கையையும் காலையும் பிடித்துக்கொண்டு வெட்டினர். எனக்கு மயக்கம் வந்துவிட்டது. சிறிது நேரம் கழித்து எழுந்துபார்த்தேன். இரண்டு பேரும் பேச்சுமூச்சில்லாமல் இருந்தனர். கத்திக் கூப்பாடு போட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் வந்து எங்களை மருத்துமனைக்கு தூக்கிச்சென்றனர். நாங்கள் சொன்னதில் பாதியை மட்டுமே பதிவுசெய்து மீதியை மறைத்துள்ளனர். அந்தப் பகுதியில் மொத்தமே ஏழு குடும்பங்கள்தான் உள்ளன. சொன்னால் ஊரையே கொளுத்தி விடுவோம் என மிரட்டியதில் பயந்து போயுள்ளனர். சென்னை மருத்துவ மனையில் யார் வந்தாலும் பயமா இருக்கு சார் எப்போ என்னை என்ன செய்வாங்கனே தெரியல''’என கதறினான்.
ஜீவாவின் அம்மா கூறுகையில், "நாங்கள் கொடுத்த வாக்குமூலம் ஒண்ணு. அதை அவங்களுக்கு ஏற்றமாதிரி எழுதிக்கிட் டாங்க. நடந்தது எல்லாத்துக்கும் சாதிவெறிதான் காரணம். எங்களுக்கு இங்க நீதியே இல் லையா?''’என கேள்வியெழுப்பினார்.
இதுகுறித்து தர்மபுரி டி.எஸ்.பி. வினோத்குமாரிடம் கேட்டபோது, "பொலிரோ கார்மூலமாக விபத்து நடந்துள்ளது. அந்த காரை ஓட்டியது யாரென்று தெரிய வில்லை. அவர்களைப் பிடிக்கமுடியவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படிதான் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மருத்துவர்களும் இது விபத்துதான் என தெரிவித்துள்ளனர்.
சாதியப் பின்னணியெல்லாம் இதற்கு இல்லை''’என்றார்.
இதுகுறித்து பேசிய வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, "இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைமுயற்சி. சாதியவாதிகளின் இந்த திட்டத்திற்கு காவல் துறை துணைபோவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக காவல்துறை வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், இதைக் கண்டித்து வருகின்ற 8-ஆம் தேதி வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம்''’என்றார்.
தர்மபுரியில் மீண்டும் சாதி கலவரத்துக்கான விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. அரசு தலையிட்டு நியாயமான நடவடிக்கை களை மேற்கொண்டால், இதனை முளையிலேயே கிள்ளியெறியலாம். என்ன செய்யப்போகிறது அரசு?