நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி லிமிடெட் நிறுவன தலைவர் தேவநாதன், மக்கள் பணம் ரூ.525 கோடியை மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரும் சூடுபிடித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் இந்து நிரந்தர நிதி லிமிடெட் நிறுவனம், 5 கிளைகளுடன் 1872ஆம் ஆண்டிலிருந்து 150 வரு டங்களாக இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்தப் பணம் 525 கோடிக்கு மேல் நிரந்தர வைப்பு நிதியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலோ னார் தங்களது ஓய்வூதியப் பணத்தையும், வெளிநாடுகளிலிருந்து தங்களின் பிள்ளைகள் அனுப்பும் பணத்தையும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள்.

ss

அப்படி செய்யப்பட்ட முதலீட்டிற்கு 10 சதவிகிதம்வரை வட்டி கொடுப்பது வழக்கம். ஆனால் கடந்த 1 வருடமாக முதலீடு செய்தவர் களுக்கும், முதலீட்டுக் காலம் முடிந்தவர்களுக்கும், அசலையும் வட்டியையும் கொடுக்காமல் இழுத்தடித்து, சாக்குப் போக்கு சொல்ல ஆரம்பித்திருந்தனர். வட்டிக்காக முதலீடு செய்தவர்களுக்கு வட்டியும் கொடுக்கப்படவில்லை. சிலருக்கு கொடுக்கப்பட்ட செக்குகளும் பவுன்ஸாக ஆரம்பித்தன. மேலும் பணம் வேண்டுமென வலியுறுத்துபவர்களை மிரட்டுவதாகவும் முதலீட் டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisment

இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் தேவநாதன். இவர் தற்போது பா.ஜ.க. கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரது நிர்வாகக் காலத்தில், இந்த நிதி நிறுவனத்தை வேறு பல வகையிலும் இழப்புக்கு உட்படுத்தியதோடு, கணிசமான பணத்தினை தன்னுடைய தேர்தல் செலவுக்காகவும் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் பல ஆண்டு களாக சரியாகக் கொடுக்கப்பட்டு வந்த வட்டி, முதிர்வுப் பணங்கள் தாமதமாகக் கொடுக்கப்பட வும், கொடுக்கவே செய்யாமல் சாக்குப்போக்கு சொல்லப்படவும் இதுவே காரணம் என்கிறார்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள்.

"வேட்புமனு தாக்கல் செய்தபோது தேவநாதன் காட்டிய சொத்துமதிப்பு 305 கோடி. காட்டப்பட்ட சொத்துமதிப்பில் 100 கோடிக்குமேல் கடனும் காட்டியுள்ளார். எங்களின் நிதியை எடுத்துத்தான் தன் கையில் தாராளமாக நிதியிருப்பதாகக் கட்சிக்குக் காட்டி அவர் சீட்டு வாங்கினார். அந்தப் பணத்தில்தான் தேர்தல் களமும் காணுகிறார்'' என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள் குமுறலுடன்.

பாதிக்கப்பட்ட பரமசிவன் என்பவரிடம் கேட்டபோது, “"நான் டெபாசிட் செய்த தொகை 2024 ஜனவரியில் முதிர்வடைந்தது. உரிய தேதி வந்ததும் போய் பணத்தைக் கேட்டேன். அவர்கள் செக்காகக் கொடுத்தார்கள். அந்த செக்கை வங்கியில் போட்டால் பணமில்லை என திரும்பி வந்துவிட்டது. நேரில் சென்று கேட்டால், "நீ உயிரோடு இருக்கணுமா, வேண்டாமா?' என தேவநாதன் மிரட்டுகிறார். இதை நம்பியே என் குடும்பம் உள்ளது. தற்போது நடுத்தெருவில் நிற்கிறோம். அவர் எங்களது பணத்தை வைத்து தேர்தலில் நிற்கிறார் என நினைக்கிறேன். அதற்கு பா.ஜ.க. கட்சியும் உறுதுணையாக இருக்கிறது. வேண்டிய அளவு பொறுத்துப் பார்த்துவிட்டேன். இனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன்''’என புலம்பித்தள்ளினார்.

Advertisment

dd

அதேபோல தனது வசிப்பிடம் மற்றும் புகைப்படத்தைத் தவிர்க்கும்படி கூறிய தேவராஜ், “"மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியில் 50 லட்ச ரூபாய் வரை டெபாசிட் செய்திருந்தேன். டெபாசிட் செய்த பணத்திற்கு மாதம்தோறும் வங்கிக் கணக்கில் வட்டி வந்துவிடும். ஆனால் தற்போது வங்கியில் போடாமல் நேரில்வந்து வாங்கிச் செல்லும்படி சொல்கிறார்கள். நிறுவனத் துக்குச் சென்று கேட்டால், உங்கள் பணத்தை வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றம் செய்துள்ளோம். அதனால் 15 நாள் கழித்துதான் மீண்டும் வட்டி வரும் என பொய் சொல்கிறார்கள். இது ஜனவரியில் சொன்ன காரணம். இப்போது ஏப்ரல் மாதமாகி விட்டது. இதை நான் விடுவதாக இல்லை. என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்கள் ஒருங் கிணைந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க தயாராகி வருகிறோம்''’என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர் பாளர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில்... "150 வருட பழமையான இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே வட்டி கொடுக்கவில்லை. நிறுவனம் கொடுத்த செக்கும் பவுன்ஸ் ஆகிவிட்டது. இதுகுறித்து முதலீட்டாளர்கள் கேள்வி கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். உடனடியாக இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து அந்த வேட்பாளர் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதோடு, அவரை வேட்பாளர் என்பதிலிருந்து தகுதிநீக்கம் செய்யவேண்டும். பா.ஜ.க. மாநிலத்தலைவர் ஏன் இதைப்பற்றி பேச மறுக்கிறார்''’என கேள்வியெழுப்பினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ, "தனது அரசியல் செல்வாக்கை வைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க தேவநாதன் முயலக்கூடும் என்பதால் "தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' நிறுவனத்தின் தலைவர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்''”என கடிதமெழுதி யுள்ளது.

தேர்தல் ஆணையம் செவி சாய்க்குமா?

-அ.அருண்

படம்: ஸ்டாலின்