முனித்திடல் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் 60 ஏக்கர் பரப்பளவில் சுமார் 6 லட்சம் கனமீட்டர் மணலை அள்ளுவதற்கு அரசு அனுமதியளித்தது.

இவற்றில் ஒன்று அழியாநிலைக் கிராமத்தில் வெள்ளாற்றில் 12 ஏக்கர் பரப்பளவிலான குவாரி. இங்கே குவாரிக்கு லாரிகள் செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டதும் அந்தக் குவாரியை எதிர்த்து அழியாநிலை மக்களின் போராட்டம் தொடங்கியது.

pudukottai

Advertisment

ஆலங்குடி எம்.எல்.ஏ. தி.மு.க. மெய்யநாதன் தலைமையில் ஆயிரம் பேருடன் தொடங்கிய போராட்டத்தில் த.மா.கா., ம.ஜ.க. மற்றும் இயற்கை ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் நம்மிடம்.... ""முனியன்கோயில் திடல்ல மட்டும்தான் இப்ப மணல் இருக்கு. மணல் அள்ளிய மற்ற இடங்களில் எல்லாம் சீமை விஷக்கருவை மண்டிவிட்டது. முனியன்திடல்லயும் தண்ணி ஊறக்கூடாது. சீமை விஷக்கருவைதான் வளரணும்னு அரசாங்கம் நினைக்குது. நெடுவாசல் போராட்டம் மாதிரி, அழியாநிலை முனித்திடலை காப்பதற்காக சாகும்வரை போராடத் தயாராகிவிட்டோம்'' என்றார்கள்.

முனித்திடல் மணல் பாதுகாப்புப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்த எம்.எல்.ஏ. மெய்யநாதன், ""நெடுவாசல் போராட்டத்தால் இந்த ஊர் வேண்டாம் என ஜெம் நிறுவனம் எப்படி ஓடியதோ, அதேபோல அழியாநிலை முனித்திடல் குவாரி வேண்டவே வேண்டாம் என அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும் ஓடவேண்டும்'' என்றார்.

Advertisment

இரண்டாம் நாளும் போராட்டம் நீடிப்பதைக் கண்ட மாவட்ட ஆட்சியர் கணேஷ், போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ""அது கோயில் திடல் என்கிறீர்கள்... அதனால் குவாரியை நிறுத்த ஏற்பாடு செய்கிறேன்'' என்றார்.

அழியாநிலை முனித்திடல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

-இரா.பகத்சிங்

எஸ்.ஐ.க்கு மேலிட சப்போர்ட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சப்-டிவிஷனில் வருகின்ற மெய்ஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றும் மீனாகுமாரியை அங்கிருந்து திருவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு பணியிடை மாறுதல் செய்தார் எஸ்.பி.

இதைப்போலவே திருவைகுண்டம் காவல்நிலையத்தில் பணியாற்றிய அமலோற்பவத்தை எஸ்.ஐ. ஆக்கி மெய்ஞ்ஞானபுரத்திற்கு அனுப்பினார் எஸ்.பி.

எஸ்.ஐ. அமலோற்பவம் மெய்ஞ்ஞானபுரம் சென்று பணியை ஏற்றுக்கொண்டுவிட்டார். எஸ்.ஐ. மீனாகுமாரியோ, ""என்னால் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்குச் செல்ல இயலாது, சட்டம்-ஒழுங்கில்தான் வேலை செய்வேன். எஸ்.பி. மாற்றினால் போய்விட வேண்டுமா என்ன? நான் போகமாட்டேன்'' என்று ரிலீஸ் ஆகாமல் பத்து நாட்களாக மெய்ஞ்ஞானபுரத்திலேயே பணியாற்றுகிறார்.

மெய்ஞானபுரம் காவல்நிலையத்திற்கு இப்போது இரண்டு எஸ்.ஐ.க்கள். புகார் தர வருவோருக்கு மட்டுமின்றி, காவல்நிலையக் காக்கிகளுக்கும் குழப்பமோ குழப்பம்.

""மேடம் எஸ்.பி. உத்தரவுக்கு பணிந்து ரிலீஸ் ஆகிவிடுங்கள் மேடம். இல்லைனா மெமோ சார்ஜ் கொடுத்து விடுவார்கள். உங்களுக்குத்தான் சிக்கல்'' என்று எடுத்துச் சொன்னார்கள் மெய்ஞ்ஞானபுரம் காவல்நிலையக் காக்கிகள்.

""எனக்கே மெமோவா? யோவ் அமைச்சர் கடம்பூராரிடம் பேசிட்டேன். எனக்கு என்னைக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். சப்போர்ட்டும் இருக்கு. எந்த மெமோவுக்கும் நான் பயப்படத் தேவையில்லை'' என்று எஸ்.ஐ. மீனாகுமாரி கெத்தாகச் சொல்ல... சகாக்கள் மட்டுமல்ல... நமக்கெதற்கு வம்பு என்று டி.எஸ்.பி. பாலச்சந்திரனும் ஒதுங்கிக்கொண்டாராம்.

-பரமசிவன்

கல்வியில் முதலிடம்!

kamaraj

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்த விருதுநகர் மாவட்டம், இந்த ஆண்டு மீண்டும் முதலிடத்தைப் பெற்றுவிட்டிருக்கிறது.

""கோயில் எதுக்குண்னேன்.... முதல்ல பள்ளிக்கூடம் கட்டு'' என்று கல்விக்கு முதலிடம் கொடுத்த கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊர், படித்த ஊர் விருதுபட்டி என்கிற இந்த விருதுநகர்தான்.

இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் பத்தாயிரத்து 797 மாணவர்களும் 13 ஆயிரத்து ஐநூறு மாணவிகளுமாக மொத்தம் 24 ஆயிரத்து 297 பேர் +2 எழுதினர். 97.05 விழுக்காடு (23 ஆயிரத்து 580 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்)

அர்ப்பணிப்பு உணர்வோடு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்தியதும் அதற்கு பெற்றோர்கள் பேராதரவு தந்ததும்தான் இந்த சாதனைக்கு பெரும்காரணம் என்கிறார்கள் முன்னாள் மாணவர்கள்.

""விருதுபட்டியாக இருந்த காலம். தந்தி வந்தால் யாருக்கும் படிக்கத் தெரியாது. அப்ப இந்த ஊர்ல படித்த குடும்பம்னா ஒரு பிராமணர் குடும்பம்தான். தந்தியை எடுத்துக்கொண்டு அங்கே ஓடுவாங்க. கூப்பிடக்கூடாது... வாசல்ல கால்கடுக்க நிப்பாங்க. யாராவது வெளில எட்டிப் பார்க்கும்போது சாமி இல்லையா... இதைப் படிச்சுச் சொல்லணும்னு கூனிக்குறுகுவோம். அவர் மெல்ல வந்து படிச்சு சொல்லுவார். அந்த வாசல்ல மனசுவிட்டு அழக்கூட முடியாது. அந்த ஆற்றாமையால்தான் படிக்கணும் படிக்க வைக்கணும்ங்கிற வெறி எங்க அப்பன், பாட்டனுக்கு வந்து வீட்டுக்கு வீடு அரிசி வாங்கி வித்து அதுல கிடைச்ச பணத்துலதான் முதல்முதலா இங்கே பள்ளிக்கூடம் கட்டினாங்களாம். அந்தத் தாகம் இன்னும் இருக்கு... தமிழ்நாட்ல 31-வது முறையா முதலிடம்னா சும்மாவா...'' தங்கள் முன்னோர்களின் படிப்பு பெருமையை சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார்கள் விருதுநகர் மக்கள்.

-சி.என்.இராமகிருஷ்ணன்