மோசடி பேர்வழி அன்வர்! ஏமாந்தவர்கள் தவிப்பு!
பெரியகுளம் போக்குவரத்துத் துறையில் கண்டக்டராக பணிபுரிந்து வருபவர் அன்வர். இவருக்கு 2011-ல் இருந்து ஓ.பி.எஸ். உடன் பழக்கவழக்கம் ஏற்பட்டு, சிறு டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுக்கும் பணியில் தொடங்கி அடுத்ததாக, வேலை வாங்கித் தருவதாக கூறி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார். மஸ்தான் என்பவரிடம், "பத்திரப்பதிவுத் துறையில் ரெக்கார்ட் கிளர்க் வேலை வாய்ப்பு காலியா இருக்கு, தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்க... வாங்கிக் கொடுக்கிறேன்' என்று வலைவீசியுள்ளார்.
மஸ்தானும், அன்வரின் வார்த்தைகளை நம்பி, தனக்குத் தெரிந்த நான்கு பேரிடம் ஒரு நபருக்கு 3 லட்சம் வீதம் 12 லட்சம், பெற்றுத் தந்துள்ளார். வேலை வரும் என நம்பிக்கையோடு இருந்தவர்கள், காலம் கடக்க... நம்பிக்கை இழந்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியே முடிவுக்கு வந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், கொடுத்தவர்கள் பணத்தை கேட்கவே, அலைக்கழித்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மஸ்தான் பொறுக்கமாட்டாமல் சி.எம். செல்லுக்கு புகார் தெரிவித்தநிலையில், அந்த வழக்கை சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்திற்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. போலீஸ் விசாரணையில், பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்த அன்வர், சல்லிக்காசைக்கூட தரவில்லை... மேல்நடவடிக் கையும் இல்லை. “"நான் மட்டுமல்ல என்னைப்போல் பலபேர் வேலைக்காக அன்வரிடம் பணம் கொடுத்துள்ளனர். முறையாக விசாரித்தால் அன்வர் மட்டுமல்லாமல், தலைமைச் செயலகத்தில் இன்னமும் இதுபோன்ற மோசடிகளை செய்துவரும் ஆட்களும் வசமாக சிக்குவார்கள்'' என குற்றம்சாட்டுகிறார் மஸ்தான்.
வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இ.பி.எஸ். உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்... ஓ.பி.எஸ். பெயரைச் சொல்லி ஏமாற்றிய அன்வர் மீது நடவடிக்கை பாயுமா?
-அ.அருண்பாண்டியன்
நீட் எதிர்ப்பில் ம.தி.மு.க. வேகம்!
திருச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியின் தலைமையில் 27-11-2021 அன்று நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தன்னு டைய கருத்துரைகளை முன் வைத்தார்.
"2010-ல் மருத்துவ கவுன்சில் நீட் தேர்விற்கான வரைமுறைகள், சட்டதிட்டங்களை அறிவிக்கிறார் கள். அப்போதைய குஜராத் முதல்வர் மோடி நீட் தேர்வு வேண்டாம் என்று அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் "குஜராத் வாரியத்தால் நடத்தப்படும் தேர்வின் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், நீட் தேர்வில் பெறும் மதிப் பெண்களை கருத்தில் கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால், அது குஜராத் மாநிலத்திற்கு எதிரானது' என்று குறிப்பிட்டிருந்தார். அவர்தான் இன்று நீட் தேர்வு கட்டாயமென வலி யுறுத்துகிறார். இந்தியாவிலேயே தமிழகத் தின் எதிர்ப்பு மட்டுமே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் மக்களின் உணர்வுக்கு மதிப்புகொடுத்து அதை புரிந்துகொள்ளும் அரசு உள்ளது'' என பல்வேறு கருத்துகளைத் தொட்டு நீட்டை நீக்கவேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளரான துரை வைகோ, "நீட் தேர்வால் இனி ஒரு உயிர்கூட போகாத அளவிற்கு, நாம் நம்முடைய பயணத்தை இந்த திருச்சியில் துவங்க வேண்டும். நீட் தேர்விற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து... அதனால் பலருடைய வாழ்க்கையைக் காப்பாற்ற உறுதி ஏற்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
-துரை.மகேஷ்
விவசாயிகளை வஞ்சித்த ஒன்றிய அரசு!
இயற்கைச் சீற்றங்களின் இடர்ப்பாடுகளால் மகசூல் பாதிக்கப் படும்போது விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுக்காக செலுத்திய பிரிமீயம் தொகைக்கு ஏற்றவாறு அதற்கான காப்பீட்டுத் தொகையை ஒன்றிய அரசு வழங்குவது வழக்கம். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த 2020-2021 ஆண்டுகளில் 119 ஹெக்டேர் நில விவசாயம் இயற்கையால் பாதிக்கப்பட்டபோது, பயிர்க்காப்பீட் டுக்காக பிரிமீயம் செலுத்திய 5070 விவசாயிகளுக்கு ரூ.2.42 கோடியை மட்டும் அறிவிதிருக்கிறது தேசிய வேளாண் காப்பீட்டுக் கழகம்.
"கடந்த முறை எத்தனையோ ஆயிரங்கள் ரூபாய் கடன் வாங்கி பயிரிட்டிருந்தோம். அத்தனையும் இயற்கையால் கொள்ளையடிக்கப்பட்டது. அதிலும், முதுகுளத்தூர் தாலுகா தேரிருவேலி வட்டாரத்தில் விதைத்த பயிரத்தனையும் முற்றிலும் சேதமானது. இயற்கையால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட வந்த ஒன்றிய அரசு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டு சென்றார் கள். நம்பிக்கையுடன் அடுத்தகட்ட விவசாயத்திற்காக வயலை தயார்செய்து விதைப்பு பணி முடிந்து களையெடுக்கவும், உரமிடவும் ஆரம்பித்துள்ளோம்.
இந்நிலையில்தான் இழப்பீட்டுத் தொகை பெயரள வில் ஏக்கருக்கு ரூ.150 முதல் ரூ.1,100 வரையே வந்துள்ளது. இது நாங்கள் செலுத்திய இன்ஷூரன்ஸ் பிரிமீயம் தொகையைக் காட்டிலும் மிகக்குறைவே. இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம் வரை வருமென காத்திருந்தோம். ஒன்றிய அரசு ஏமாற்றிவிட்டது. தமிழக அரசு தாய் மனது கொண்டு எங்களை காக்கவேண்டும். இல்லை யெனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் என்பதே இல்லாமல் போகும்'' என்கின்றார் கடலாடி பாசன விவசாயி கள் வட்டார தலைவர் பாக்கியநாதன்.
-நாகேந்திரன்