சசிகலாவுக்குப் பச்சைக்கொடி
கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம், விளாத்திகுளத்தில் நடந்தது. மாவட்ட ஜெ’பேரவை இணைச் செயலர் ரூபம் வேலவன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவே தொடர வேண்டும் என்றும், அவருக்கு எதிராக சில மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள், கிளைக் கழக, நகர கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒப்புதல் பெறாமல், அவர்களது விருப்பத்திற்கு மாறாக சில பேரை மட்டும் கூட்டி தீர்மானம் நிறைவேற் றப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் அதிரடித் தீர்மானத்தை நிறைவேற்றினர். மேலும், அ.தி.மு.க.வின் ஒற்றுமைக்காகவும் அதை வலுப்படுத்தும் நோக்கத்தோடு தொலைபேசி வாயிலாக கட்சியினருடன் சசிகலா உரையாடி வரும் நிலையில், அவரோடு பேசியவர்களை சர்வாதிகாரத் தன்மையோடு கட்சித் தலைமை நீக்கி வருவதைக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், சசிகலா மாவட்டம் தோறும் கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தித் தொண்டர்களின் கட்சிதான் அ.தி.மு.க. என்பதை வலுப்படுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்துவதாகவும், அதிரடி சரவெடியை வெடித்து, சசிகலாவுக்கு பச்சைக்கொடியை பலமாக அசைத்தனர். இந்தத் தகவல் எடப்பாடி தரப்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
-நாகேந்திரன்
மோதலை உண்டாக்கிய பேனர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜி என்பவரின் வீட்டுத் திருமணம் நடைபெற்றது. இதில் பேனர் வைப்பது சம்பந்தமாக அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்சன், அலெக்சாண்டர் ஆகியோருக்கு இடையே உரசல் உண்டானது. இந்த நிலையில், நேற்று 26-ந் தேதி இரவு, ஊர் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த அலெக்சாண்டர் தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது, இரும்புக் குழாய் மற்றும் உருட்டுக் கட்டைகளால் ஜெய்சன் தரப்பினர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில், ஃப்ராங்கிளின், ரிச்சர்ட், ஜான், அந்தோணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மறுநாள் மதியம் அலெக்ஸாண்டர் தரப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் ஜெய்சன் வீட்டிற்குச் சென்ற நிலையில், அப்போது அங்கு யாரும் இல்லை. அதனால் கோபம் தலைக்கேறியவர்கள் அவரது வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த விவசாய டிராக்டருக்கும் தீவைக்கப்பட்டது. மேலும், அவரது ஆதரவாளர்கள் மூன்று பேரின் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மணிமொழியன் தலைமையில் போலீசார் டீம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.
சூறையாடப்பட்ட வீடுகள், தீ வைத்து எரிக்கப்பட்ட விவசாய டிராக்டர் ஆகியவற்றைப் பார்வையிட்ட போலீஸ் டீம் அங்கிருந்தவர் களிடம் விசாரணை நடத்தியது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இரு தரப்பினரையும் போலீசார் இப்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர். தொடர்ந்து இறையூர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில் ஏற்பட்ட கலவரத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, போலீசார் முன்னெச்சரிக்கையாக ஊரில் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். ஆனாலும் தகிப்பு இன்னும் தணியவில்லை.
-எஸ்.பி.சேகர்
கெஜ்ரிவால் கையாளும் தமிழக மாடல்!
பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், ஏற்கனவே கடந்த தேர்தலில் அங்கு 20 தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சி, இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் உத்வேகத்துடன் களப்பணியைத் தொடங்கி இருக்கிறது. என்னதான் டெல்லியில் ஆட்சியில் இருந்தாலும், அது ஒரு யூனியன் பிரதேசம் என்ப தால், ஒன்றிய அரசின் லகானுக்குக் கட்டுப்பட்டே ஓடவேண்டியிருக்கிறது. எனவே பஞ்சாப் தேர்தலில் வெற்றிபெறுவதில் ஆம் ஆத்மி தீவிரம் காட்டுகிறது. அதற்காக இப்போதே சலுகை அறி விப்புகளை வெளியிடத் தொடங்கி விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதைப் போல், தங்களுக்கு ஆட்சிக்கான வாய்ப்பை மக்கள் தந்தால் பஞ்சாபில் 300 யூனிட் வரை தங்குதடையற்ற இலவச மின்சாரம் வழங் கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதன்மூலம் அங்குள்ள 80% குடும்பங்கள்வரை பயனடைய முடியுமாம். விவசாயிகளுக்கான இல வச மும்முனை மின்சாரத் திட்டத்தை, கலைஞர் தான் இந்தியாவிலேயே முதன்முதலில் கொண்டு வந்தார். 1989-ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியில், பம்பு செட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் இலவசம் என அவர் அறிவித்தார். கடந்த 2016 ஜெ. ஆட்சியில் வீடுகளுக்கு 100 யூனிட்வரை மின்சாரம் இலவசம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழக மாடலைக் கையாள்கிறார் கெஜ்ரிவால்.
-தெ.சு.கவுதமன்