காங்கிரஸின் கோவிட் உதவி மையம்!

கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து, மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிற நிலையில், இந்நோயினால் அவதிப்படும் தமிழக மக்களுக்கு உதவும் நோக்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி, சத்தியமூர்த்தி பவனில், கட்சி சார்பில் கோவிட் உதவி மையத்தை கடந்த 20-ந் தேதி தொடங்கிவைத்தார்.

s

இந்த மையத்தின் தலைவராக டாக்டர் கலீல் ரகுமான் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக சசிகாந்த் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு ஆளானவர்கள் எண் 9884466333 மூலம் உதவி கோரினால், இக்குழுவினர் அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்கி சிகிச்சை தொடர்பாக உதவி வருகின்றனர். "5 நாட்களில் இந்த மையத்தைத் தொடர்புகொண்டு 86 பேர் உதவி கோரியிருக்கிறார்கள். இவர்களில் மருத்துவர்களின் ஆலோசனை கோரியவர்கள் 34 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் படுக்கை கேட்டவர்கள் 29 பேர். ஒருவர் ஆக்சிஜன் உதவி கேட்டிருக்கிறார். இதர உதவி பெற்றவர்கள் 22 பேர்'' என்கிறார் தமிழக காங்கிரஸின் பொதுச்செயலாளர் எஸ்.காண்டீபன்.

Advertisment

-வசந்த்

ஆக்ஸிஜன் உற்பத்திக்கு குரல் தந்த சிவா

s

Advertisment

மோசமாகப் பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேவேளையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தொடர் மரணங்களும் நிகழ்ந்துவருகின்றன. இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவும், புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இது குறித்து அவசரக் கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதிப்படுகிறார் கள். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டுகிறேன். எனது சொந்த ஊரான திருச்சியில் அமைந்துள்ள ‘பெல்’ நிறுவனத்தில், மூன்று ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒருமணி நேரத்திற்கு 140 மெட்ரிக் கியூப் அளவுக்கு உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டது. ஆனால், இவை கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்படாமல் உள்ளன. தொழில்நுட்ப வல்லுனர்களோ, இவற்றைப் பராமரித்து மீண்டும் செயல்பட வைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இதை சரிசெய்தால் குறைந்தது 15 முதல் 20 நாட்களுக்குள்ளாக, ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க முடியும். இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களை காக்க முடியும்''”என்று குறிப் பிட்டுள்ளார்.

மத்திய அரசு, மெத்தனத்தைக் காட் டாமல் "பெல்'லின் ஆக்ஸிஜன் உற்பத்திக்குப் பச்சைக்கொடி காட்டுமா?

-கீரன்

ஊழல் அதிகாரிக்கு பதவி உயர்வு!

விருதுநகர் நெடுஞ்சாலைத்துறையின் கோட்டப் பொறியாளரான தனசேகர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் ஏற்கனவே வழக்கு பதியப் பட்டுள்ளது. இந்த நிலையில், ஊழல் தடுப்புத்துறை இயக்குநரகம் கேட்ட விபரங்கள் எதையும் தராமல், அவர் இழுத்தடித்து வருகிறார். இப்படிப் பட்டவருக்கு எடப்பாடி தலைமையிலான இந்த காபந்து அரசு, அவசர அவசரமாகப் பதவி உயர்வைக் கொடுத்திருக்கிறது. "ஊழல் வழக்கில் சிக்கியுள்ளவருக்கு பதவி உயர்வு எப்படி கொடுக்கப்பட்டது?'' இந்தக் கேள்வியை சம்மந்தப்பட்ட தனசேகரிடமே வைத்தோம். நம்மிடம் நிதானமாகப் பேசிய அவர், "“ஊழல் வழக்கு விசாரணைக்கும் பதவி உயர்வுக்கும் சம்பந்தம் இல்லை. சீனியாரிட்டி அடிப்படையில் ஏற்கனவே போட்ட உத்தரவுதான் இது. காபந்து அரசு போட்ட உத்தரவு கிடையாது''’என்று மறுத்தவர், "“பார்த்து எழுதுங்க சார்...''’என்று பவ்யமாக கேட்டுக்கொண்டார். துறை அதிகாரிகளோ,’ "இதன் பின்னணியில் பெரும் தொகை கை மாறியிருக்கிறது. இது, காபந்து முதல்வரிடம் தனி உதவியாளராக இருப்பவரின் திருவிளையாடல்' ’என்கிறார் கள், கமுக்கச் சிரிப்போடு.

-ராம்கி