இளைஞர்களை ஈர்க்கும் உதயநிதி!
விடியலை நோக்கி, ஸ்டாலின் குரல்’ என்ற முழக்கத்துடன் மூன்றாம் கட்டப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி. மக்களைச் சந்தித்து வெறும் பிரச்சாரத்துடன் நின்றுவிடாமல், தி.மு.க.வின் ஆரம்பகாலத் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று, அவர்களின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து கட்சிப் பணிகளுக்கு கரம் கூப்பி அழைக்கிறார். அந்த வகையில் 1962-67-ல் எம்.எல்.ஏ.க்களாக இருந்த 50 பேரில் ஒருவரான பெரம்பலூர் மங்கலம் மணி, ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து மறைந்த அரியலூர் எஸ்.சிவசுப்பிரமணியன், பிரச்சார பீரங்கி வெற்றிகொண்டான், கடலூர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் திருவுருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் உதயநிதியின் பண்பு உ.பி.க்களிடம் உற்சாகத்தைக் கொடுத்து வருகிறது.
அதே நேரம் சினிமா முகம் என்பதால், உதயநிதியின் பிரச்சாரக் கூட்டங்களிலெல்லாம் இளைஞர்கள் அதிகளவில் திரள்வது ஆளும் கட்சியை லேசாக ஜெர்க்காக்கியுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பத்திலும் விருத்தாசலத்திலும் நடந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு திரண்டு வந்த கூட்டத்தைப் பார்த்ததும், இது திறந்த வெளி மாநாடா என ஆச்சர்யத்தில் அசந்து போனார் உதயநிதி ஸ்டாலின். உளவுத்துறையும் உஷார் ரிப்போர்ட்டை மேலிடத்திற்கு அனுப்பியுள்ளது.
-கீரன்
திருச்சி கிழக்கில் அமைச்சரின் வாரிசு?
கிறிஸ்தவ வெள்ளாளர்கள், இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள் என்ற வரிசையில் வாக்கு வங்கி உள்ள தொகுதி திருச்சி கிழக்கு. அதனால் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கே இத்தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக் கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், வருகிற சட்ட மன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் நிற்பதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார். கடந்த நவம்பர் மாதமே கிழக்கு தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ பங்கு கோவிகள், திருச்சபை களின் மூத்த நிர்வாகிகளைச் சந்தித்து தனக்கான ஆதரவை உறுதி செய்தார். காணொலி வாயிலாக கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி, மு.க.ஸ்டாலினை பங்கேற்க செய்ததுடன் பிரம்மாண்ட கூட்டத்தையும் காட்டியிருந்தார் இனிகோ.
கலைஞரின் மரணத்தின் போது இரங்கல் கவிதை பாடியதற்காக, தான் பணியாற்றிய காவல்துறை வழங்கிய மெமோவைப் புறக்கணித்து, வேலையை விடுத்த செல்வராணி பெயரும் தி.மு.க. தரப்பில் அடிபடுகிறது.
ஆளும்கட்சியான அ.தி.மு.க.விலோ ""அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு இத்தொகுதி மீது ஆசை இருந்தாலும், அவரது உடல்நிலை ஒத்துவருமா'' என்ற சந்தேகம் ர.ர.க்களிடம் உள்ளது. அதனால் தனது மகன் ஜவஹர்லால் நேருவை களம் இறக்கும் முயற்சியில் உள்ளார் வெல்லமண்டி. சமீபகாலமாக கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஜவஹர்தான் ஆஜராகிறார். அவரை சின்னவர் என அழைத்து, அவருடன் செல்ஃபி எடுத்து புளகாங்கிதப்படுகின்றனர் ர.ர.க்கள். வெல்லமண்டி தரப்புக்கு எதிராக வரிந்து கட்டும் மாஜி எம்.பி. குமார் தரப்பும் தீவிரம் காட்டுகிறது. ""ஜவஹரின் ‘கிளாஸ்மெட்டுகளே ஜவஹரை கவிழ்த்துவிடும் டேஞ்சரும் இருக்குங்க'' என்கிறார்கள் தொகுதியின் சீனியர் ர.ர.க்கள்.
-மகேஷ்
புலவர் மகனுக்கு நினைவஞ்சலி!
பழைய தென்னாற்காடு மாவட்டமான கடலூர் பகுதிகளில் வேர்விட்டு வீரியமுடன் களத்தில் இருந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தை கட்டமைத்தவர்களின் முதன்மையானவர் பெண்ணாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். தந்தைக்குத் துணையாக அவரது மகன் வள்ளுவனும் போராட்டக் களத்தில் இருந்தவர்.
பெண்ணாடம் அருகே உள்ள சௌந்தரசோழபுரத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வெடிகுண்டு தயாரித்த போது, நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் சர்ச்சில், கணேசன், காணியப்பன் ஆகிய மூவரும் பலியாகினர். புலவர் கலியபெருமாளும் படுகாயமடைந்தார். பலியானவர்களை தனது தோட்டத்திலேயே புதைத்து அதன்மீது கரும்புகளை நட்டு மறைத்தார் வள்ளுவன். ஆனால் இன்ஃபார்மர் மூலம் 40 நாட்களுக்குப் பின் போலீசுக்குத் தெரிந்தது. அந்த நேரம் பார்த்து மற்றொரு போலீஸ் இன்ஃபார்மரான ஐயம்பெருமாளை தமிழரசன் குழுவினர் அழித்தொழிக்க, அந்தக் கொலைப் பழிக்கு புலவரும் அவரது மகன் வள்ளுவனும் கைதாகினர். இருவருக்கும் தூக்கு தண்டனை கிடைத்து, கலைஞர் ஆட்சிக்காலத்தில் தண்டனைக் குறைப்பும், மேல்முறையீட்டில் 11 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் அனுபவித்து வெளியே வந்தனர் தந்தையும் மகனும்.
2018-ல் இயற்கை மரணமடைந்த வள்ளுவனுக்கு இந்த ஆண்டுதான் முதல் நினைவஞ்சலிக் கூட்டம் நடந்தது. கடந்த 21-ஆம் தேதி நடந்த இக்கூட்டத்தில் வள்ளுவனின் மகள் ஊர்மிளா, தர்மபுரி தமிழ்வாணன், மாசிலாமணி, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டியக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன், சுபா.இளவரசன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, முத்துலட்சுமி வீரப்பன் உட்பட ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு புலவர் கலியபெருமாள், வள்ளுவன் ஆகியோரின் லட்சியத்தை உணர்ச்சி பொங்க நினைவு கூர்ந்தார்கள்.
இரு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் தமிழரசனின் தாயார் நினைவஞ்சலிக் கூட்டம் நடந்தது. இப்போது வள்ளுவனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடந்திருப்பது, உளவுத்துறையை உறுத்தத் தொடங்கியுள்ளது.
-சுந்தரபாண்டியன்