இசைவாணியை வாழ்த்திய இசைஞானி!
உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த மற்றும் சாதனைப் பெண்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் பெருமைப்படுத்தி வருகிறது லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பி.பி.சி. செய்தி நிறுவனம். தங்களது துறையில் சிறந்து விளங்குவதோடு, தன்னைச் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும் பெண்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள்.
ஏழு ஆண்டுகளாக பி.பி.சி. வெளியிடும் இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு இந்தியா வைச் சேர்ந்த அத்லெட் வீராங்கனை மானசி ஜோஷியும் தமிழகத்தைச் சேர்ந்த மேடை இசைப்பாடகி இசைவாணியும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை இராயபுரத்தில் பிறந்து வளர்ந்த இசைவாணிக்கு குருவாக இருந்து சங்கீதம் கற்றுக் கொடுத்தவர், ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞரான அவரது தந்தை சிவக்குமார் தான். தனது ஆறு வயதிலிருந்து 18 வருடங்களாக மேடைகளில் பாடிவரும் இசைவாணி, டைரக்டர் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவில் நான்கு வருடங்களாக பாடி வருகிறார்.
இசைவாணியை பி.பி.சி. தேர்ந்தெடுத்த செய்தி அறிந்த இசைஞானி இளையராஜா, கடந்த டிச. 04-ஆம் தேதி அவரை நேரில் அழைத்து, ""தமிழ்ப் பொண்ணுக்கு இந்தப் பெருமை கிடைத்தது சந்தோஷமா இருக்கு. இன்னும் உயரத்துக்கு நீ வரணும்மா''’என வாழ்த்தி மகிழ்ந்துள்ளார் இளையராஜா.
"ஐயா இசைஞானியை சந்தித்த அந்த தருணங்களை வாழ்க்கையில் மறக்கவே முடியாது'’என நெகிழ்கிறார் இசைவாணி.
-பரமு
ஊழல் அதிகாரியை காப்பாற்றும் மந்திரிகள்!
தமிழக டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனையாகும் வசூல் பணத்தை, அந்தந்த கடைகளின் சூப்பர்வைசர்களே தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் மறுநாள் காலை நேரடியாக கட்டி சலான் வாங்கி, கணக்கில் கட்டவேண்டும் என்பது விதி. மாவட்ட மேலாளர்கள் யாரும் நேரடியாக கடைகளுக்குச் சென்று விற்பனைத் தொகையை வசூல் பண்ணக்கூடாது.
ஆனால் நாகப்பட்டினம் மாவட்ட மேலாளர் அம்பிகாபதியோ லாட்ஜ் ஒன்றில் ரூம் போட்டு விற்பனைத் தொகையை கலெக்ஷன் பண்ணுகிறார். இப்படி ஒரு புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் போனதும், "இதென்ன புதுக்கதையா இருக்கு, இந்தக் கதையில் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கும்' என காத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த 08-ஆம் தேதி அம்பிகாபதியை 5 லட்சம் ரொக்கத்துடன் அமுக்கிவிட்டனர். "மாவட்டத்தின் எல்லா டாஸ்மாக் கடைகளின் சூப்பர்வைசர் மூலம் கலெக்ட் ஆகும் இந்தப் பணம் மாவட்ட மந்திரி ஒருவருக்கு மாதம்தோறும் மணி மணியாகக் கொடுக்கப்படும்'’என விஜிலென்சின் கிடுக்கிப்பிடியில் உண்மையைச் சொல்லி விட்டார் அம்பிகாபதி. இந்த விஷயம் வெளியே பரவ ஆரம்பித்து பரபரப்பு கிளம்பியதும், "அது கோவிட் நிவாரண நிதிக்குப் போகவேண்டிய பணம்தான்' என அம்பிகாபதியையும் தன்னையும் ஒரே நேரத்தில் காப்பாற்றிக்கொண்டார் மணியான அமைச்சர்.
ஐந்து லட்சத்துடன் அம்பிகா பதியை அமுக்கிய உடனேயே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு விஜிலென்ஸ் ரெய்டுக்குச் சென்றபோது, இன்னொரு அமைச்சரின் ஆட்கள், ஏக கலாட்டா பண்ணி, விஜிலென்சை திருப்பி அனுப்பியுள்ளனர். அமைச்சரும் அம்பிகாபதியும் பள்ளி, கல்லூரித் தோழர்களாம்.
-செல்வா
குடிகார போலீசின் கெட்ட ஆட்டம்!
மணிமுத்தாறில் இருக்கும் ஆயுதப்படை போலீசின் 9-ஆவது பட்டாலியனில் போலீஸ் காரராக இருப்பவர் ராமச்சந்திரன். பணி முடிந்து தனது கிராமமான சில்லிகுளத்திற்குப் போகும் வழியில் சங்கரன்கோவிலில் சரக்கை ஏற்றினார். போதை ஏறியதும் ஒரு வங்கிக்குப் போய் வாந்தியெடுக்கும் அளவுக்கு சலம்பினார். அங்கிருந்தவர்கள் எச்சரித்து அனுப்பினார்கள்.
அதே ராமச்சந்திரன், அதே சரக்கு முறுக்கு, அதே சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்ட். அங்கே ஊசிமணி பாசி விற்றுக்கொண்டிருந்த நரிக்குறவ இனத்தின் இளம் வயதுப் பெண்ணிடம் வம்பு பண்ணினார். "ஏஞ்சாமி இப்படி பண்றீக' எனக் கேட்ட அப்பெண்ணின் மாற்றுத்திறனாளி கணவரை லத்தியால் விளாசினார் சரக்கு ராமச்சந்திரன். அங்கிருந்த பொதுமக்கள் பொங்கியெழுந்து குடிகார போலீசுடன் மல்லுக்கட்டி, கைகளை பின்புறமாக கட்டி, புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கிருந்த காக்கிகளோ, "போய்யா நிதானமா குடிச்சிட்டு சலம்பல் பண்ணாம போய்யா' என அனுப்பிவிட்டனர். இந்த வழியனுப்பு விழா குறித்து நக்கீரன் இணையதளத்திலும் சில மீடியாக்களிலும் ஃப்ளாஷ் ஆனது. இதைப்பார்த்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் புகழேந்தியும் கிருபாகரனும் "அப்பாவிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைய சகித்துக்கொள்ள முடியாது. தமிழக டி.ஜி.பி.யும் தென்காசி மாவட்ட எஸ்.பி. யும் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.
அதன்பிறகே சங்கரன்கோவில் டவுன் போலீஸ், அப்பெண்ணின் கணவரிடம் புகார் வாங்கி, ராமச்சந்திரனை அரெஸ்ட்பண்ணி உள்ளே தள்ளியது.
-பரமசிவன்
படம்: ப.ராம்குமார்