உயிரைப் பறித்த அதிரடி ஆட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசந்தர். தி.மு.க. இளைஞரணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கும் இவருக்கு, அடங்காத ஜல்லிக் கட்டுக் காளைகளை வளர்ப்பதிலும் அலாதிப் பிரியம். dஅதனால்தானோ என்னவோ, பல அடங்காத வேலைகளைச் செய்ததால் ஆறு வழக்குகள் இவர் மீது உள்ளன. இதுவும் பத்தாதென்று வழிப்பறி கேஸில் ஜெயிலுக்கும் போய்வந்த காளை இவர். அட இதுவும் பத்தா தென்று ஆளும்கட்சிப் புள்ளி ஒருவருடன் சேர்ந்து ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து களிலும் கொடிகட்டிப் பறந்துள்ளார்.

கூட்டாகச் சேர்ந்து ரவுடித்தனம் பண்ணினால் என்ன நடக்கும்? நான்தான் பெரிய ரவுடி, எனக்குத்தான் கட்டிங் தொகை அதிகமாக வேண்டும் என்ற சண்டை நடக்கும். அப்படி சண்டை நடந்தால் என்ன நடக்கும்? யாரை யார் முதலில் பொலி போடுவது என்ற கொலைவெறிப் போட்டி நடக்கும்.

அந்தப் போட்டியில்தான் கடந்த சனிக்கிழமை இரவு தனது பண்ணைக்குச் சென்ற பாலசந்தரை ஒரு கும்பல் வெறியுடன் காருக்குள் வைத்தே போட்டுத் தள்ளிவிட்டது. இலுப்பூர் ஏரியாவைச் சேர்ந்த ஆளும்கட்சிப் புள்ளி மீது போலீசின் சந்தேக வளையம் விழுந்துள்ளது. இதுபோக கொள்ளையடிக்க, கொலை பண்ண, சிறையிலிருந்தே ஆட்களை பர்ச்சேஸ் பண்ணுவதில் எக்ஸ்பெர்ட்டான நெல்லை கும்பல் ஒன்றின் கைவரிசை இருக்கலாம் என்பதால், நெல்லைக்கும் சென்றுள்ளது போலீஸ் தனிப்படை.

Advertisment

இன்னும் சில நாட்களில் பாலசந்தருக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில்தான் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது.

-பகத்சிங்

இல்லாதோருக்கு இயன்றவரை உதவு!

Advertisment

பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்துவதில் தி.மு.க. வி.ஐ.பி.க்களில் முன்னோடியாக இருப்பவர் கனிமொழி எம்.பி. இந்த முகாம்களில் கலந்துகொள்ளும் பட்டதாரி இளைஞர்களை, பிரபல ஐ.டி. நிறுவனங்கள், இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும். எண்ணற்ற இளைஞர்கள் இதனால் பெருமளவு பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து, இளைஞரணி செயலாளர் உதயநிதியும் இணையம் வழியாகவே பல வேலை வாய்ப்பு முகாம்களைத் தொடங்கி வைத்தார்.

signal

அதேவழியில் தனது முயற்சி யால் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை சமீபத்தில் நடத்தியுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தன் என்கிற கார்த்திகேயன். கட்சியின் மா.செ.வாகவும் இருக்கும் இவர் நிர்வாகிகளை அரவணைத்துச் செல்வதிலும் மக்களிடம் நெருக்கமாக பழகுவதிலும் தனித்துவம் மிக்கவர். அந்த வகையில் கடந்த 23-ஆம் தேதி தனது தொகுதிக்குட்பட்ட அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தினார்.

ஹோண்டா, நிப்பான் பெயிண்ட், பட்டர்ஃப்ளை உள்ளிட்ட இந்தியாவின் 14 முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன. 2,500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இண்டர்வியூ நடத்தி, 500 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அங்கேயே பணி நியமன ஆணையையும் வழங்கியது அந்த நிறுவனங்கள். வேலை கிடைத்த இளைஞர்களின் பெற்றோர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.

-எஸ்.பி.எஸ்.

சேலம் போலீசின் சரவெடி அட்டாக்!

பண்டிகை காலத்தில் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து கும்பலால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் ரவுடிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்வதில் சேலம் மாநகர காவல்துறை தீவிரம்காட்டி வருகிறது. மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், அக்டோபர் 24... ஒரேநாளில் ஒட்டுமொத்த மாநகர காவல்துறையினரும் வேட்டையில் இறங்கினர். 37 ரவுடிகள், 5 தலைமறைவு குற்றவாளிகள், பிடிஆணை நிலுவையில் உள்ள 2 குற்றவாளிகள் ggஉள்பட 56 பேரை கைது செய்தனர்.

சேலம் நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் கார்த்தி, சுகேல், ஹேமதி என்கிற ஹேமதி உசேன், வெள்ளையன் என்கிற பைரோஸ்கான், செவ்வாய் பேட்டை காவல் சரகத்திற்கு உட் பட்ட பகுதிகளைச் சேர்ந்த சித்தேஸ் என்கிற சித்தேஸ்வரன், ரமணி, காஜா என்கிற பொதுகாஜா ஆகியோர் சிக்கியதில் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நிம்மதி. போலீசின் அதிரடியில் அன்னதானப் பட்டி காவல் சரகம், அஸ்தம்பட்டி சரகம், அழகாபுரம் சரகம், பள்ளப்பட்டி காவல் சரகம் எனப் பல ஏரியா ரவுடிகளையும் அள்ளிப் போட்டு உள்ளே தள்ளியிருக்கிறார்கள். இவர்களில் பலர் மீதும் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

"சேலம் மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் யாருக்கேனும் ரவுடிகளால் அச்சுறுத்தல், மிரட்டல் இருந்தால் அது குறித்து தெரிவிக்கலாம்' என செல்நம்பரையும் தந்திருக்கிறார் காவல்துறை ஆணையர் செந்தில்குமார். "இது தீபாவளி நேர போலீசின் சரவெடி' என்கிறார்கள் சேலம் வணிகர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன்.

இந்த நிம்மதி நிரந்தரமாகத் தொடர வேண்டும்.

-இளையராஜா