கில்லாடி லேடி சாமியார்!
சாமியார்கள், மந்திர வாதிகளின் மோசடிகளும் திருகுஜாலங்களும் அவ்வப் போது அம்பலத்திற்கு வந்து ஜெயிலுக்குப் போனாலும், புதிது புதிதாக கிளம்பி, கடை போட்டு கல்லா கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரையடுத்துள்ளது மேலக்கோட்டை ராஜீவ்காந்தி நகர். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த நகரில் மூன்று வருடங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த சுமதி என்ற பெண்சாமியார் குடியேறினார். "சொல்லுங்க சாமியம்மா' என அவர்முன் மண்டியிட்டனர் ராஜீவ்காந்தி நகர்வாசிகள். "நன்றாக சொல் கிறேன் மக்களே... எனது அருள்வாக்கை கேட்டு மறுமலர்ச்சி பெறுங்கள்' என்றவாறே, அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி, அருகே உள்ள மரத்தடியில் குறி சொல்லும் மேடையும் போட்டார். இவரிடம் குறி கேட்க, கூட்டம் கும்மியது. இது போதாதா சாமிக்கு, போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்திலும் குறிமேடை போட்டார். "ஏன் ஆத்தா... இதெல்லாம் தப்பு' என மக்கள் கண்டிக்க ஆரம்பித்ததும்... ""ஒழுங்கா வாயை மூடிட்டு இரு, இல்லேன்னா பில்லி சூன்ய வச்சு குடும்பத்தையே குளோஸ் பண்ணிருவேன்'' என மிரட்ட ஆரம்பித்தார். அதன்பின் அனுமந்தபுரத்திலிருந்து ஆரம்பித்து தாம்பரம் வரை சுமதியின் அருள்வாக்கு சென்டர், அரசு நிலத்தில் விரிவடைய ஆரம்பித்தது. இதற்குப் பிறகு உஷாரான ராஜீவ்காந்தி நகர்வாசிகள், சாலை மறியலில் குதித்ததும் தாழம்பூர் போலீசும் வருவாய்த்துறை அதிகாரிகளும் ஸ்பாட்டுக்கு வந்து, சாமியார் சுமதி மீது ஆக்ஷன் எடுப்பதாக உறுதியளித்ததும் மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
-அரவிந்த்
உரிமைகளுக்காக ஒரு போராட்டம்!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சென்கோப் டெக்ஸ் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்தாமல் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவாக நிர்வாகக் குழுவை அறிவித்தனர் அதிகாரிகள். இதற்கு நெசவாளர்களின் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் கண்டுகொள்ளவில்லை. "இந்த நிர்வாககுழுவை ரத்து செய்ய வேண்டும், தீபாவளி நேரம் நெருங்குவதால், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங் களில் தேங்கியுள்ள சரக்குகளை கோ-ஆப்டெக்ஸுக்கு கொள்முதல் செய்யவேண்டும். அனைத்து நெசவாளர்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை வழங்கவேண்டும், கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தை, ரிபேட் தள்ளுபடியை உடனே வழங்க வேண்டும், அனைத்து நெசவாளர்களுக்கும் கொரோனா கால நிதியாக நிபந்தனையில்லாமல் ரூ.2000 வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியத்தை மூவாயிரம் ரூபாயாக உயர்த்தவேண் டும்'’-இப்படி பல வேண்டும்களை வலியுறுத்தி சென்னிமலையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர் நெசவாளர்கள்.
ஏ.ஐ.டி.யூ.சி.யின் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கண்ணுசாமி தலைமை வகித்தார். ஒ.செ. ரவி, பொருளாளர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி மற்றும் சித்தையன், பொன்னுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன் ஆகியோர் நெசவாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள்.
பேசிய அனைவருமே, "மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்... அடுத்த பதினைந்து நாட்களில் ஈரோட்டில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும்' என எச்சரித்துள்ளனர்.
-ஜீவா தங்கவேல்
முருகனுக்கு வந்த சத்யா’சோதனை!
எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்து புகழ் பெற்றது, சென்னை வட பழனி முருகன் கோவில். தியாகராய நகர் தொகுதிக்குள் வரும் இக்கோவிலின் வருமானம் கோடிக்கணக்கில் கொட்டுகிறது. கோவிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள இடங்களை பலபேர் கபளீகரம் செய்து விட்டனர். இந்தக் கோவிலுக்கு மிக அருகில்தான் தொகுதியின் எம்.எல்.ஏ.வான சத்யாவின் அலுவலகம் உள்ளது.
கோவிலின் தெற்கு ராஜகோபுரத்தின் இடதுபுற மாடவீதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மண்டபம் உள்ளது. சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இதற்கு முறையான கணக்கு வழக்கும் கிடையாது. இந்த தர்ப்பண அறையை முருக பக்தர்கள் அபசகுனமாக கருதியதால், பூட்டிவிட்டது மாநகராட்சி. சும்மா இருப்பார்களா சத்யாவின் சிஷ்யர்கள். பூட்டை உடைத்து தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இது போக கோவில் பிரசாத ஸ்டாலை டெண்டர் எடுத்தவர், கோவிலுக்குச் சொந்தமான வாடகைக் கடைக்காரர்கள் என எல்லோரும் எம்.எல்.ஏ.வின் சிஷ் யர்களால் மிரட்டப்படுகின்றனர்.
இக்கோவிலின் அருகில் உள்ள வேங்கீஸ்வரன் கோவில் குளமும் சுற்றியுள்ள இடமும் சத்யா தரப்பினரின் வசமாகி விட்டது என்கிறார்கள் சுற்று வட்டாரத்தினர். இதையெல்லாம் கோவிலின் துணை ஆணையர் சித்ராதேவி, வடபழனி போலீசில் புகாராக கொடுத்துள்ளார். அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்குத் தெரிந்தும் "கந்தா கடம்பா கதிர்வேலா நீயே காப்பாத்தப்பா' என கப்சிப்பாகிவிட்டார்.
-அருண்பாண்டியன்