கட்டதுரைகளின் விவசாய விளையாட்டு!
இந்தியா முழுவதிலும் விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுவதே கார்ப்பரேட் கட்டதுரைகளின் வேலையாகப் போய்விட்டது. சிலபல மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தின் முக்கால்வாசி விவசாய விளைநிலங்களுக்கு அடியில் இயற்கை எரிவாயு பைப் லைனைக் கொண்டு போய் விவசாயிகளின் வயிற்றில் அடித்தது மத்திய அரசின் பெட்ரோலியத்துறை. அதற்கடுத்து விவசாய நிலங்களுக்கு மேலே உயர் அழுத்த மின்சார கோபுரம் அமைத்து கோபத்தைத் தூண்டியது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
அதே போல் இப்போது திண்டுக்கல் மாவட்டத்திலும் அப்படியொரு கோபம் தூண்டப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கோவை வரை சுமார் 300 கி.மீ. தொலைவுக்கு விவசாய நிலங்களின் மேலே 765 கிலோவாட் சக்தியுள்ள உயர் அழுத்த மின்கோபுரத்தை அமைக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
இந்த ஆபத்தான வேலையால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய தாலுக்களிலுள்ள விருவீடு, காமலாபுரம், செம்பட்டி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி உட்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. இதனால் கொதிப் படைந்த அப்பகுதி விவசாயிகள், திண்டுக்கல் கலெக்டரைச் சந்தித்து, தங்களது எதிர்ப்பை மனுவாக கொடுத்துள்ளனர். இதற்கடுத்தும் அந்த பேராபத்து நிறுத்தப்படலைன்னா மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கின்றனர் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள்.
-சக்தி
தி.மு.க.வில் புதிய தலித் மா.செ.?
தமிழகத்தில் தி.மு.க. மா.செ.க்களில் கடலூர் மாவட்ட செயலாளர் மட் டுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். இந்த எண்ணிக்கையை குறைந்தபட்சம் மூன்றாக உயர்த்த வேண்டும் என தி.மு.க.வில் உள்ள தலித் சமூகத்தினர் நினைக்கின்றனர். திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு மூன்று நிர்வாக மாவட்டங்கள் உள்ளன. இதில் அமைச்சர் பெஞ்சமின், எம்.எல்.ஏ பலராமன் என இரு மா.செக்கள் உள்ளனர். அதுபோல, தி.மு.க.விலும் நியமிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தி.மு.கவில் உள்ள பட்டியல் இன பிரமுகர்களிடம் உள்ளது.
இதுகுறித்து விசாரித்த போது,’’""திருவள்ளூர் அதிமுகவினர் தேர்தல் பணியை துவக்கி விட்டனர். அதனால் திருவள்ளூர் மாவட்ட திமுகவை விரைவில் 3 ஆக பிரித்து தலித் சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த கதிரவன், பொன்னேரி-கும்மிடிபூண்டி இரு தொகுதிகளிலும் சவுண்ட் பார்ட்டியாகவும் தலித் மக்களிடம் செல்வாக்கு மிக்கவராகவும் இருக்கிறார். இவருக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் இரு தொகுதிகளிலும் திமுகவுக்கு தலித் ஆதரவு பெருகும்'' என்கிறார்கள் கள நிலவரம் அறிந்த தி.மு.க.வினர்.
அறிவாலயம் எப்போது திருவள்ளூர் மாவட்டப் பிரிப்பை மேற்கொள்ளப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், பூந்தமல்லியின் எம்.எல்.ஏ.வும்-முன்னாள் எம்.பி.யுமான கிருஷ்ணசாமியும் மா.செ. பதவிப் பரிசீலனையில் இருக்கிறார். அ.தி.மு.கவில் மதுராந்தகம்- பூந்தமல்லி அடங்கிய தொகுதிக்கு அமைச்சர் பெஞ்சமின் மா.செ.வாக இருப்பதுபோல, தி.மு.கவிலும் அதே வகையில் பிரித்து, மா.செ.வாக்கவேண்டும் என கிருஷ்ணசாமி தரப்பு முயற்சிக்கிறது. இன்னொரு பக்கம், ஃபீல்டு ஒர்க்கரான கதிரவனுக்கான வாய்ப்பை உ.பி.க்கள் எதிர்பார்க்கின்றனர்.
-சஞ்சய்
சமாதானக் கொடி பறக்குது! உ.பி.க்கள் உற்சாகம்!
இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.பொறுப்பாளராக காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டதிலிருந்தே மாஜி மா.செ. சுப.த.திவாகரன் ஆதரவாளர்களுக்கும் முத்துராமலிங்கம் ஆதரவாளர்களுக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருந்தது. இதை கடந்த ஜூன் 17-20 நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம்.
மாவட்ட வாரியாக கட்சிப் பஞ்சாயத்துகளை கடுமையாகவும் நடத்தி வரும் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் கவனத்திற்கு நமது செய்தி போனதைத் தொடர்ந்து இருதரப்பையும் அழைத்துப் பேசியுள்ளார் நேரு.
இதையடுத்து சமாதானக் கொடியுடன் களத்தில் இறங்கிவிட்டார் மா.பொ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம். செப்.11-ல் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற போது திவாகரன், மாஜி எம்.பி.பவானி ராஜேந்திரன் ஆகியோரையும் அழைத்துச் சென்றார் முத்துராமலிங்கம். அதேபோல் விவசாயிகளுக்கெதிரான வேளாண் சட்டங்களுக்கெதிராக தலைமை அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனக்கு அருகிலேயே திவாகரனுக்கு நாற்காலிக்கு போட்டு அமரச் செய்தார் முத்துராமலிங்கம்.
இந்த சமாதானக் கொடி மாவட்ட உ.பி.க்களிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதனால் தான் இப்போது இராமநாதபுரம் உடன்பிறப்பு’ வாட்ஸ்-அப் குழுவில் முத்துராமலிங்கம் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிகளும் இடம் பெற ஆரம்பித்துவிட்டன. இந்த உற்சாகத்துடன் இணைய வழி உறுப்பினர் சேர்க்கையான ‘எல்லோரும் நம்முடன்’ வேலையில் சுறுசுறுப்பாகிவிட்டார் முத்துராமலிங்கம்.
“இது உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டுமல்ல, எங்களுக்குந்தாம்ப்பு. எங்களுடைய இப்போதைய ஒரே லட்சியம், குறிக்கோள் தளபதி ஸ்டாலினை முதல்வராக்குவதுதான்’’ என்கிறார் மாநில வர்த்தக அணியின் துணை அமைப்பாளரான சாயல்குடி இ.ராமர்.
-பரமு