அதிகாரியின் அடாவடி பேச்சு!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்திற்கு உட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் உள்ள 16, 17-வது வார்டுகளில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, கடந்த சில நாட்களாக குடிநீர் இல்லை. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தும், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படாததால் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேநேரம், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குத் தாமதமாக வந்ததால், சாலை மறியல் போராட்டம் நீண்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருக்கும் பாண்டுவிடம், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளைச் சொல்ல முற்படும்போது, ஆவேசப்பட்ட நகராட்சி பொறுப்பு ஆணையர் பாண்டு, ""நான் யாருக்கும் அடிமை இல்லை'' என்று ஆவேசமாகத் திட்டி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிருப்தியடைந்த பொதுமக்கள், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகக் கூறியபின்பு, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று, மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய அதிகாரிகள், இப்படிப் பேசுவது முறையல்ல.
-சுந்தரபாண்டியன்
பாலியல் புகார் கொடுத்த இளம்பெண் சித்தரவதை!
மதுரையைச் சேர்ந்தவரான அந்த இளம்பெண், தொலைதூரக் கல்வி படித்து வந்துள்ளார். கொரோனா காலத்து வறுமை காரணமாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
மேனேஜரான சிவக்குமார், தொடர்ந்து இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மசியாததால் அவரது புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சோஷியல் மீடியாவில் பதிவேற்றுவதாக மிரட்டியுள்ளார். ஒருகட்டத்தில் நேரில் சென்று படத்தை வாங்கிவர தோழி ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்றபோது, சிவக்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதில் தற்காப்புக்காக கொண்டுசென்ற மிளகாய்ப்பொடியால் சிவக்குமாரைத் தாக்கிய இளம்பெண், அவரைக் கட்டிவைத்து போலீசாருக்கு புகார் தந்துள்ளார். இங்கிருந்துதான் பிரச்சனையே தொடங்கியிருக்கிறது. அடுத்து நடந்ததை விவரித்த அந்த இளம்பெண், ""இரவு போலீஸ் ஸ்டேஷனில் எங்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது வந்த இன்ஸ்பெக்டர் கோமதி, எங்களை ஆபாச வார்த்தைகளில் திட்டியதோடு, தாக்கினார். இஸ்லாமியரான என் தோழியை மதத்தைச் சொல்லி கேவலப்படுத்தினார்.
மேலும், சிவக்குமார் மீது நாங்கள் கொடுத்த புகாருக்கு முரணான தகவல்கள் எழுதப்பட்ட கடிதத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கினார் எஸ்.ஐ. செந்தில்பிரபு. வெற்றுக்காகிதத்தில் கையெழுத்து வாங்கி, எங்கள் மீதே வழக்குப்பதிவு செய்தார்கள். நீதிபதியும் எங்களை விசாரிக்காமல் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். ஜாமீனில் வெளிவந்தும் காவல்துறையின் சித்தரவதைக்கு ஆளானதோடு, சிவக்குமார் தரப்பால் தாக்கப்பட்டோம். எனவே, அநீதி இழைக்கப்பட்ட எங்களுக்கு நியாயம் கேட்டு மதுரை கலெக்டரை அணுகவந்தேன்'' என்றார்.
இதில் நியாயமான நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் ஆட்சியருக்கு தகவல் சொல்லியிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார் மதுரை கலெக்டர் வினய்.
-அண்ணல்
தமிழக விவசாயிகளான வடமாநிலத்தவர்!
பிரதமரின் கிசான் திட்டத்தில் போலி உறுப்பினர்கள் மூலமாக பல நூறுகோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது சமீபத்தில் அம்பலமானது. இதில் சேலம் மாவட்டத்தில் மட்டுமே 18 ஆயிரம் பேர் போலி பயனாளிகளாக சேர்க்கப்பட்டு, ரூ.6 கோடி வரை மோசடி நடந்திருப்பது சி.பி.சி.ஐ.டி.யின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி வட்டார அலுவலர் அன்பழகன் உட்பட 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும், முறைகேடாக வழங்கப்பட்ட பணத்தை மீட்கும் பணிகளும் முடுக்கிவிடப் பட்டுள்ளன.
உழவர் நிதி யுதவித் திட்டத்தில், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 20 மாநிலங்களைச் சேர்ந்த வடமாநி லத் தவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர், தமிழக விவசாயிகளாக சேர்க்கப் பட்டிருப்பதுதான் வேடிக்கையே. அவர்களுக்கு இதுவரை ரூ.2 ஆயிரம் வீதம் இரண்டு தவணைகளாக பணம் சென்றிருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் மட்டுமே வடமாநிலத்தவர்கள் 1,234 பேர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் பயனடைய அந்தந்த மாநிலத்தில் 5 ஏக்கர் வரையிலான விவசாய நிலம் இருக்கவேண்டும் என்பது முக்கியத் தகுதி.
ஆனால், நிலமற்ற வடமாநிலத்தவரை இடைத் தரகர்கள் மூலம் பயனாளிகளாகக் காட்டி, அடையாள அட்டை கொடுத் துள்ளனர். இதற்காக தலைக்கு ரூ.2 ஆயிரம் வசூல் நடந்துள்ளது. வசூலில் கவனம் செலுத்திய வருவாய்த்துறை, வேளாண் துறை அதிகாரிகள் இதைக் கவனிக்காமல் விட்டு விட்டனர்.
இதில் தொடர்புடைய அரசுத்துறை உயரதிகாரிகள் பற்றியும் விசாரித்து வருவதாக, சி.பி.சி.ஐ.டி. தரப்பில் சொல்கிறார்கள்.
-இளையராஜா