பசி போக்கும் உடன்பிறப்பு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சனத்தின் அறிவுறுத்தலில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் சேவையை செய்துவருகிறார் திருவொற்றியூர் மூன்றாவது வட்டச் செயலாளர் மு.மாணிக்கவேலன். இதற்காக தளபதியார் இலவச உணவகத்தைத் தொடங்கி யிருக்கும் அவர், தினமும் 350 பேருக்கு இலவச உணவு வழங்கிவருகிறார். கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு தளபதியார் இலவச உணவகத்தை தொடங்கிய மாணிக்கவேலன், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட ஊரடங்கு விதிகளை பின்பற்றி, தினமும் காலையில் இட்லி, பொங்கல், பூரி, மதியம் சைவ உணவு, இரவு டிஃபன் என 3 வேளைகளும் விநியோகித்து வருகிறார்.

ss

பொதுவான ஏழைகளுக்காக பயன்பட்டு வந்த இந்த இலவச உணவகம், ஊரடங்கு சமயத்தில் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், கொரோனா களப்பணியாளர்கள், ஆட்டோ மற்றும் ரிக்ஷா தொழி லாளிகள் என பலருக்கும் பயன்படும் வகையில் இயங்கி வருகிறது. கொரோனாவுக்கு முன்பு தொடங்கப்பட்ட தளபதியார் இலவச உணவகத்தை, கடந்த 300 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தி, ஏழைகளின் உணவு பசியை போக்கிவருகிறார் மாணிக்கவேலன்.

Advertisment

கடந்த ஒரு மாதமாக காலையில் மட்டும் உணவு வழங்கப்படுகிறது. ஒருநாள் கூட விடுமுறை விடாமல் நடத்தப்பட்டு வரும் இந்த தளபதியார் இலவச உணவகம், திருவொற்றியூர் பகுதியில் அம்மா உணவகத்துக்கு சவால் விடுவதாக இருக்கிறது என தங்களின் தலைமைக்கு தெரிவித்திருக்கிறார்கள் அப்பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள்.

- இளையர்

Advertisment

தூக்கில் தொங்கிய இளைஞன்!

விசாரணைக்காக போலீசாரால் கூட்டிச் செல்லப்பட்ட இளைஞர் தூக்கில் தொங்கிய சம்பவம் பூகம்பமாக வெடித்திருக்கிறது.

ss

மதுரை மாவட்டம் சாப்டூர் அருகிலுள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மூத்தமகன் இதயக்கனி, உறவினர் ஒருவரின் மகளைக் காதலித்து, கடத்திச்சென்று திருமணம் செய்துள்ளார். பெண்வீட்டார் கொடுத்த புகாரின்பேரில், சாப்டூர் போலீசார் 16ந் தேதி இரவு கன்னியப்பனின் இளைய மகன்கள் ரமேஷ் மற்றும் சந்தோஷை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

சந்தோஷ் அங்கிருந்து தப்பியோடிவிட, ரமேஷை மட்டும் போலீசார் விசாரணைக்காக கூட்டிச்சென்ற நிலையில், மறுநாள் காலை அருகிலுள்ள பெருமாள்கூட்டம் மலையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியிருக்கிறார் ரமேஷ். இதையடுத்து, உடற்கூராய்வு முடிந்த உடலை வாங்கமறுத்து உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். உயிரிழந்த ரமேஷின் தாயார் பாண்டியம்மா, மூத்தமகன் ஓடிப்போயிட்டான். இளையமகனையும் விசாரணைன்னு கூட்டிப்போய் அநியாயமா கொன்னுப் போட்டாங்களேய்யா. போலீசார் இழுத்துட்டு போனப்போகூட, அண்ணன் போனா என்னம்மா, விசாரணை முடிஞ்சதும் நான் வந்துடுவேன்னு சொல்லிட்டு போனவனாப்பா தூக்குல தொங்கப்போறான்'' என்றபடி கதறினார்.

போலீஸ் தரப்பில் கேட்டால், ""விசாரணைக்காக கூட்டிச்சென்று, அப்போதே அனுப்பிட்டோம். அதன்பிறகு நடந்ததெல்லாம் தெரியாது'' என்றனர். ஆரம்பத்தில் இதில் தொடர்புடைய எஸ்.ஐ. ஜெயக்கண்ணன், பரமசிவம் ஆகியோரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்செய்த எஸ்.பி. சுஜித்குமார், விவகாரம் பெரிதாக வெடித்ததும் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, ரமேஷின் உடலில் அடித்து கொடுமைப்படுத்தியதற்கான காயங்கள் இருக்கின்றன. உடற்கூராய்வு அறிக்கையில் அதை மூடிமறைக்க வாய்ப்பிருக்கிறது என்று சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள், இதற்கெதிராக போராடும் மக்கள். சாத்தான்குளம் தொடர்கிறது.

-அண்ணல்

ட்ரெண்டாகும் அரசுக் கல்லூரி கோரிக்கை!

திருச்சி மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கான 20 ஆண்டுகால கோரிக்கை, மிகப்பெரிய முழக்கமாக வலுப்பெற்றிருக்கிறது. ம.தி.மு.க. தோழர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த முழக்கத்தை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையிலெடுத்து வைரலாக்கியிருக்கிறார்கள். .

ss

இதுபற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்ட ம.தி.மு.க. தேர்தல்பணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், முறுக்குக்கும், மாட்டுக்கும் பெயர்போன ஊரான மணப்பாறையில், கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில, 90 கி.மீ. வரை பயணித்து திருச்சிக்கு செல்லவேண்டும். இதனால், ஏழைப் பிள்ளைகள் பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டு கட்டட வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களின் கல்லூரிக்கனவு கானல் நீராகிறது. இரண்டுமுறை அமைச்சர் தொகுதி என்ற தகுதி, ஆளும் அ.தி.மு.க.வின் ஆர்.சந்திரசேகர், இரண்டுமுறை எம்.எல்.ஏ.; இருந்தபோதும் கல்லூரி அமையாதது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.

இந்நிலையில், புதிதாக அமையவிருக்கும் ஏழு அரசு கல்லூரிகளுக்கான அறிவிப்பில், மணப்பாறை இடம்பெறவில்லை என்பதை அறிந்தே, வேண்டும்... வேண்டும்... மணப்பாறைக்கு அரசுக்கல்லூரி வேண்டும்... என்ற கோரிக்கையை சமூக வலைதளங்களில் முன்வைக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, 13ந்தேதி முதல்வருக்கு மின்னஞ்சலும் அனுப்பினேன். இதை குழந்தைகள், பெண்கள், என பலதரப்பினரும் கையிலெடுத்து ட்ரெண்டாக்கி விட்டனர்.

இதைப்பார்த்த எம்.எல்.ஏ. சந்திரசேகர், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் கோரிக்கைமனு தந்துள்ளார். இனியும் தாமதிக்காமல், கல்லூரிக்கான அறிவிப்பை வெளியிட்டு நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கையைத் தொடங்கவேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்.

மக்கள் சக்தி அளப்பரியது. அவர்கள் வீதியில் இறங்கி போராடுவதற்குள், அவர்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

-ஜெ.டி.ஆர்.