கலெக்டரின் உத்தரவால் காமெடியான கட்சித் தலைவர்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் நடந்துவந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா நெருக்கடியால் நடப்பதில்லை. இதற்கு பதிலாக, கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் புகார்ப்பெட்டியில் மனுக்களைப் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள்.

s

அப்படியொரு திங்கள்கிழமை நாளில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கருக்குபாளையம், பொன்னாங்காடு காலனி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மனுக்கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். அவர்களில் பலர் முகக்கவசம் அணியவில்லை. தனிமனித இடைவெளியையும் பின்பற்றவில்லை. சரியாக அந்த நேரத்தில் அலுவலகம் வந்த கலெக்டர் கதிரவன், நுழைவுவாயிலில் கூட்டமாக நின்றிருந்த பொதுமக்களைப் பார்த்ததும் காரை நிறுத்தி விசாரித்தார்.

Advertisment

அவர்களிடம் காரணத்தைக் கேட்டறிந்த கலெக்டர், கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இப்படி அஜாக்ரதையாக வந்திருப்பது தவறு’என்று அறிவுரை கூறியதோடு, உங்களையெல்லாம் யார் இப்படிக் கூட்டிவந்தது? என்றும் கேட்டார். அப்போது, ""ஐயா நான்தாங்க. அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தோட மாநிலச் செயலாளர் சின்னசாமி'' என்றார் இவர்களைக் கூட்டிவந்தவர்.

"ஓ... இப்படியொரு கட்சி இருக்கா?'’எனக் கூறியவாரே, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை அழைத்த கலெக்டர், "இந்த நபர்மீது வழக்குப்பதிவு செய்யுங்க' என உத்தரவிட்டார். மக்களை நம்பவைத்து கூட்டிவந்து, வழக்கில் சிக்கியதோடு, போலீஸிடம் கெஞ்சிய அ.பு.அ.தி.மு.க. லெட்டர்பேடு கட்சிப் பிரமுகரால், பரபரப்பும், காமெடியாக கழிந்தது அன்றைய நாள்.

-ஜீவாதங்கவேல்

Advertisment

தமிழக அரசின் அலட்சியத்தால் தள்ளாடும் நீதித்துறை!

நாடு முழுவதும் ஏற்கனவே கோடிக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் கொரோனா ஊரடங்கு தன்பங்கிற்கு தேக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இது போதாதென்று அரசு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் பற்றாக்குறையால் தமிழக நீதித்துறை திணறுகிறது. இதைச் சரிசெய்ய வேண்டிய டி.என்.பி.எஸ்.சி., ஊரடங்கைக் காரணம்காட்டி உறங்கிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2015-16 ஆண்டுக்கான அரசு உதவி வழக்கறிஞர்கள் பணிக்கான அறிவிப்பு வெளி யாகி, 2018ஆம் ஆண்டு தேர்வு முடிந்து, கடந்த ஆண்டு டிசம்பரில் நேர்காணல் நடத்தப்பட்டு மதிப்பெண் பட்டியலும் வெளியானது. ஆனால், இன்னமும் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே, நீதித்துறை சார்ந்த தேர்வு கள் நடத்தினால், பணியாணை வழங்கவே பல ஆண்டுகளுக்கு இழுத்தடிப்பது டி.என்.பி.எஸ்.சி.யின் வழக்கம். அந்த வகையில்தான், சிவில் நீதிபதிக்கான மெயின் தேர்வு ஊரடங்கைக் காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது.

s

குற்றவியல் நீதிமன்றப் பணிகளைப் பொறுத்தவரை நீதிபதிகளைப் போலவே, அரசு வழக்கறிஞர்களும் முக்கியம். ஆனால், தமிழகத்தில் நீதிபதிகள் மற்றும் அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிலைமை இப்படியிருக்க, கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கையின் போது, தமிழகம் முழுக்க அரசு உதவி வழக்கறிஞர்கள் நியமனம் நிறைவடைந்துவிட்ட தாகக் கூறிவிட்டார், சட்டத்துறை அமைச்சர் சிவிசண்முகம்.

இந்தப் பற்றாக் குறையால், ஒரு அரசு உதவி வழக்கறிஞர், ஐந்து நீதிமன்றங்கள் வரை கவனிக்கும் நிலையே நிதர்சனம். எந்தத் தேர்வு நடத்தினாலும், பத்தே மாதத்தில் அனைத்து நடைமுறைகளையும் முடிக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பை, நீதித் துறையிலேயே தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்பதே உண்மை என்று புலம்புகிறார்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள்.

-ஜெ.டி.ஆர்.

உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி!

திண்டுக்கலில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் யூசுப் அன்சாரி. தாத்தா ரஹீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர், அப்பா அஜீஸ் தி.மு.க. தொழிற்சங்கப் பிரமுகர் என அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பப் பின்னணியைக் கொண்டவர் இவர்.

ss

ஆரம்பகால அரசியலை பா.ம.க.வில் மாவட்டத் தலைவராக தொடங்கிய யூசுப் அன்சாரி, கருத்து வேறுபாட்டினால் அங்கிருந்து விலகி, அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி கட்சிப்பணிகளைச் செய்துவந்தார். ஊரடங்கு நெருக்கடியின்போது, அன்றாடப் பிழைப்பிற்கே வழியில்லாத ஏழை, எளிய மக்களுக்கு தான் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நண்பர்கள் ஆதரவுடன் சுமார் பத்துலட்சம் ரூபாய் செலவில் உதவிகளைச் செய்தார்.

ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தை அ.தி.மு.க. நிர்வாக வசதிக்காக, கிழக்கு மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரித்தது கட்சித் தலைமை. இதில் கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் முப்பெரும்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியப் பெருந்தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவருமான கண்ணன், அன்சாரியின் கட்சிப்பணிகள் குறித்து நத்தம் விஸ்வநாதனிடம் எடுத்துக் கூறினார். இதைக்கேட்ட நத்தம் விஸ்வநாதன் யூசுப் அன்சாரியை திண்டுக்கல் மாவட்ட ஜெ. பேரவை செயலாளராக நியமிக்க பரிந்துரைத்தார். தலைமையும் இதை ஏற்று, பதவி வழங்கியது.

இதைக்கண்டு பூரித்துப்போன யூசுப் அன்சாரி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனையும், நத்தம் ஒன்றியப் பெருந்தலைவர் கண்ணனையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி என்ற உற்சாகத்துடன், ஜெ. பேரவைக்கான உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டார் யூசுப் அன்சாரி.

-சக்தி